நீரத் சந்திர சவுத்ரி

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

நீரத் சந்திர சவுத்ரி (Nirad C. Chaudhuri, வங்காள மொழி: নীরদ চন্দ্র চৌধুরী, 23 நவம்பர் 1897 – 1 ஆகத்து 1999) வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். ஆங்கில எழுத்தாளர். இந்திய வரலாறு, நாகரிகம், பண்பாடு, அரசியல் ஆகியத் தளங்களில் தம் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசின் செயல்பாடுகள், அயோத்தியில்பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றில் தம் கருத்துகளை எழுதினார். வங்காளிகளின் வாழ்க்கைமுறைகளில் காணப்பட்ட முரண்பாடுகளை விமர்சனம் செய்து எழுதினார். அவருடைய முதல் நூலான தன் வரலாற்றில் எழுதப்பட்ட செய்திகள் அரசியல், அதிகாரிகள் வட்டத்தில் சினத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. அவருடைய ஆங்கில உரைநடை செழுமையானது.

நீரத் சந்திர சவுத்ரி
Nirad C. Chaudhuri
பிறப்பு(1897-11-23)23 நவம்பர் 1897
கிசோர்கஞ்ச், பிரித்தானிய இந்தியா (இன்றைய வங்காளதேசம்)
இறப்பு1 ஆகத்து 1999(1999-08-01) (அகவை 101)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
புனைபெயர்Balahak Nandi, Sonibarer Cithi
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
காலம்1930கள்–1999
வகைஇலக்கியம், சலாச்சாரம், அரசியல்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

வங்க தேசத்தில் இப்பொழுது உள்ள கிஷோர்கஞ்சு என்னும் ஊரில் பிறந்தார். கிஷோர்கஞ்சில் தொடக்கக் கல்வியும் கல்கத்தாவில் உயர்கல்வியும் பயின்றார். வரலாற்றுப் பாடத்தில் சிறப்புப் பட்டம் பெற்று கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். இந்தியப் படைத்துறையில் கணக்குப் பிரிவில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டார். மாடர்ன் ரிவ்யூ என்னும் ஆங்கில இதழில் கட்டுரைகள் எழுதினார். சில வங்காள மொழி இதழ்களிலும் எழுதினார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சரத் சந்திர போசு அவர்களின் உதவியாளர் ஆனார். 1941 ஆம் ஆண்டில் ஆல் இந்தியா வானொலியில் அரசியல் விமர்சகர் என்னும் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் எழுத்துப் பணி பத்திரிக்கைப் பணி ஆகியவற்றுக்காக தில்லியில் குடியேறினார். 1970 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் ஆக்சுபோர்டில் தம் இறுதி நாள் வரை வாழ்ந்து வந்தார். 101 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்த நீரத் சவுத்ரி தம் 99 ஆம் அகவையிலும் நூல் எழுதினார்.

பெற்ற விருதுகள் தொகு

  • சாகித்திய அகாதமி விருது (1975)
  • டப் கூப்பர் நினைவு விருது
  • அரசி இரண்டாம் எலிசபத்து அவர்களின் விருது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரத்_சந்திர_சவுத்ரி&oldid=3800137" இலிருந்து மீள்விக்கப்பட்டது