நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலயம்

நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையில் கம்பகா மாவட்டம், நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.

வரலாறு தொகு

சைவப்பெரியார் வெ. அருணாச்சலம் செட்டியார் அவரது சகோதரர் வெ. குழந்தைவேல் செட்டியாருடன் சேர்ந்து, தமது காணியொன்றில் ஒரு சிறுகோயிலை 1754 டிசம்பர் 23-ம் திகதி அமைத்தார். குழந்தைவேல் செட்டியார் காலமாகி விட, அருணாச்சல செட்டியார் பெரும் பொருட்செலவில் இக்கோவிலைப் பெருப்பித்தார். அவருக்குப் பின்னர் அவரது மனைவி தனுஷ்கோடி அம்மையார், சகோதரரின் மனைவி தங்கமையார், மகள் தைலம்மையார் ஆகியோரின் கீழ் கோவில் நிருவகிக்கப்பட்டு வந்தது. இவர்கள் பின்னர் 1880 அக்டோபர் 25ம் திகதி கோவிலை ஒன்பது பேரைக் கொண்ட பரிபாலன சபையிடம் ஒப்படைத்து 5372ம் இலக்க தருமசாதன உறுதியும் செய்து முடித்தனர். பரிபாலன சபை 1921-ஆம் ஆண்டு ஆலய முற்றலில் இருந்த காணியை விலைக்கு வாங்கி ஆலய உடமையாக்கியது.

1965-இல் கலையழகு மிகுந்த சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்ட விழா 1967 செப்டம்பர் 6 இல் விநாயக சதுர்த்தியன்று இடம்பெற்றது.

1981 சூலை 13 இல் குடமுழுக்கு நடைபெற்றது. புதிதாக கருவறை,நடேசர் ஆலயம், மகா மண்டபம், வசந்த மண்டபம், சுப்ரமணிர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், வைரவர் ஆலயம், நவகிரக கோட்டம், களஞ்சிய அறை, மடப்பள்ளி, யாகசாலை என்பன அமைக்கப்பட்டன. 1994 இல் ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைக்கப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டது. 2012 ஆலயத்திருப்பணிகள் நடைபெற்று ஆலய சுற்று மண்டபம், கலை அம்சங்கள் நிறைந்த தூண்கள் அமைக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது.

உசாத்துணை தொகு

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவளமலர்