நேலக்கே பெட்டா மலை

நேலக்கே பெட்டா மலை அல்லது பிரம்மன் மலை என்பது கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஒரு மலைக்குன்றாகும்.

ஒசூர் பிரம்மன் மலை என்னும் நேலக்கே பெட்டா
ஒசூர் பிரம்மன் மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகையின் வெளிப்புறத் தோற்றம்
ஒசூர் பிரம்மன் மலைக் குகையில் உள்ள சமணர்படுக்கை
குகையின் தரையில் ஊற்று நீர் வெளியேற செதுக்கப்பட்டுள்ள வடிகால்

பெயரியல் தொகு

இம்மலைக்குன்று அரசு ஆவணங்களாலும், உள்ளூர் மக்களாலும் நேலக்கே பெட்டா என்றே அழைக்கப்படுகிறது. இது ஒரு கன்னடச் சொல்லாகும். இச்சொல்லுக்கு நாக்கு மலை என்பது பொருள். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் ஒரு பெரிய பாறையொன்று ஒரு இடுக்கில் மாட்டியபடி கீழோ விழாமல் நாக்குப்போல தொங்குவதால் இப்பெயர் பெற்றது. இந்தக் குன்றை அண்மைக்காலமாக பிரம்மன் மலை என்று குறிப்பிடுகின்றனர். இப்பெயருக்கு பொருத்தமாக இந்தக் குன்றின் உச்சியில் இருந்த ஒரு பழங்கால மண்டபத்தை பிரம்மன் கோயிலாக மாற்றி அதில் பிரம்மன் சிலையை நிறுவி வழிபட்டுவருகின்றனர்.[1] ஓசூர் நகரில் நேர்கோட்டில் உள்ள மூன்று மலைக்குன்றுகளில் இரண்டு குன்றுகளில் முறையே திருமால், சிவன் ஆகிய கோயில்கள் உள்ளதால் மூன்றாவதாக உள்ள இந்தக்குன்றில் பிரம்மனுக்கு கோயில் அமைத்து,[2] பௌர்ணமி அன்று மும்மூர்த்தி கிரிவலம் என்ற பெயரில் இந்த மூன்று மலைகலையும் சுற்றி வருகின்றனர்.

சமணர் படுக்கை தொகு

இக்குன்றின் மேற்குப்புறத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் அக்காலத்தில் சமணத் துறவிகள் வாழ்ந்ததற்கானத் தடயமாக குகையில் ஒரு சமணப் படுக்கை உள்ளது. மழைக்காலத்தில் குகையினுள் கசிந்துவரும் தண்ணீர் துறவியர் படுத்திருக்கும் இடத்தை ஈரமாக்கிவிடாமல் தடுக்கும் விதத்தில் குகையின் தரைப்பாறையில் ஒரு ஓரத்தில் சிறிய வடிகால்வாய் குகையிலிருந்து வெளியே செல்லும் வகையில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "பிரம்மா சிலை பிரதிஷ்டை விழா". article.wn.com. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2016.
  2. "பிரம்மா சிலை பிரதிஷ்டை விழா". செய்தி. தினமலர். 8 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேலக்கே_பெட்டா_மலை&oldid=3577674" இலிருந்து மீள்விக்கப்பட்டது