பயனர்:விஸ்வேணி ஏகாம்பரம்/மணல்தொட்டி

இளையான்குடி மாறநாயனார் புராணம் பிறப்பு: இளையான்குடி என்ற ஊரில் தோன்றியவர் மாறனார். அவர் சிவனடியார்க்கு உணவளித்து மகிழ்விப்பதைக் கடமையாக மேற்கொண்டிருந்தார். அவர் செல்வம் உள்ள காலத்தில் அல்லாமல் வறுமை உள்ள காலத்திலும் சிவனடியாரை உபசரிக்கும் பண்புடையவர் என்பதை உலகுக்கு அறிவிக்கச் சிவபெருமான் அவருக்கு வறுமை ஏற்படச் செய்தார். ஒருநாள் நள்ளிரவு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நேரம், மாறனார் உணவு உண்பதற்கில்லாமலேயே படுத்துக் கொண்டார். அப்போது சிவனடியார் போல் இறைவர் அவர் இல்லத்துக்கு வந்தார். மாறனார் அவரை வரவேற்று உபசரித்தார். அடியாரின் பசியை எப்படிப் போக்குவது எனத் தம் மனைவியிடம் அவர் வினவினார். பகற்போதில் விதைத்த நெல் முறைகளை வாரிக் கொணர்ந்தால் உணவு சமைக்கலாம் என்றார் மனைவியார். மாறனார் வயலில் அன்று பகலில் விதைத்த நெல்முளைகளை வாரிக்கொணர்ந்தார். வீட்டின் கூரையை அறுத்து விறகுக்குத் தந்தார். அவருடைய மனைவியார் அதை வறுத்துக் குத்தி உணவு சமைத்தார். பின் மாறனார் தோட்டத்தில் நிரம்பி வளராத கீரையைப் பாசப்பழி முதல் பறிப்பரைப் போல் பறித்து வந்தார். அதனை அந்த அம்மையார் பலவகையான கறியாய்ச் சமைத்தார். அடியாரை உண்ண அழையுங்கள் என்றார். மாறனார் அவரைத் துயில் எழுப்பி, உணவு உண்ண எழுந்தருளுக என்றார். அவ்வளவில் இறைவர் அவர்க்குக் காட்சி தந்து தம் உலகினை அடைந்திட அருள் செய்தார்