பயனர்:ViswaChandra/மணல்தொட்டி

பெரியாச்சி அம்மன் கதை :-

சம்புவராயர் எனும் அரச மரபினர் பிற்காலச் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தொண்டை நாட்டின் பகுதிகளுக்கு சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறு ஆட்சி செய்தவர்களில் கி.பி.1356 முதல் கி.பி.1375 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜநாராயண சம்புவராயர் கடைசி சிற்றரசராக அறியப்படுகிறார். அவரது மகன் நான்காம் வல்லாளன் கி.பி.1406 ஆம் ஆண்டில் நாடு, நகரம், மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை இழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவன் இழந்த பதவியை மீண்டும் அடைய இயலாது என்று நம்பியதால் கொள்ளையனாக மாறினான். இரவு நேரத்தில் காட்டிற்கு அருகிலிருந்த கிராமங்களுக்குள் சென்று பொருட்களைத் திருடி அதைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான். அச்சூழ்நிலையில் அவனது மனைவி கார்குழலி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள்.

அவன் அரசனாக இருந்த காலத்தில் காட்டிற்குள் வேட்டையாடிய பொழுது அவனது முரட்டு குணத்தால் முனிவரின் சாபத்தைப் பெற்றது நினைவிற்கு வந்தது. முனிவரின் சாபப்படி, அவனுக்குப் பிறக்கும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அஞ்சினான். அதனால் அஞ்சனக்காரர் ஒருவர் மூலம் அவனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையால் ஏற்படவிருக்கும் ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டான். அதன்படி, அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென அஞ்சனக்காரர் வல்லாளனை அறிவுறுத்தினார். ஆனால் வல்லாளன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் பெரியாச்சி அம்மன் வயோதிகப் பெண் உருவில் அந்தக் காட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அந்தக் காலங்களில் கட்டில்களோ சொகுசான மெத்தைகளோ கிடைப்பது எளிதல்ல. பிரசவத் தீட்டு படாமல் இருக்க கர்ப்பவதிகளை பிரசவ வலி வந்ததும் வீட்டின் மூலையில் தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் விரித்து வைத்த பாயின் மீது பிரசவிக்கும் கட்டுப்பாடு இருந்த காலமது. பிரசவம் பார்க்க அனுபவம் மிகுந்த ஆச்சிகளை கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்க வைப்பார்கள்.

ஒரு நாள் நள்ளிரவில் கார்குழலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வைத்தியத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அந்த காட்டிற்குள் இல்லாததாலும் அஞ்சனக்காரர் கூறிய கணிப்புகளும் வல்லாளனை அமைதி இழக்கச் செய்தன. அந்த இனம் புரியா பதற்றத்துடன் பிரசவம் பார்க்க மருத்துவ ஆச்சியைத் தேடி காட்டிற்குள் சுற்றி வந்தான். அப்போது மருத்துவச்சி உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் அவன் கண்களுக்கு தென்பட்டாள். அவளிடம் குழந்தை பூமியைத் தொடாதவாறு பிரசவத்தை நடத்திக் கொடுக்க கேட்டுக் கொண்டான். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவச்சி அவனுடன் சென்றாள்.

வல்லாளன் வீட்டின் அருகில் இருந்த சிறிய கற்பாறையில் அமர்ந்து இரண்டு கால்களும் தரையைத் தொடும்படி ஆசனம் கொண்டாள். கார்குழலியை தனது மடியில் மல்லார்ந்த நிலையில் கிடைமட்டமாக படுக்க வைத்து அவளது வயிற்றைக் கிழித்து கருப்பையின் மேற்புறத்தை திறந்து (Caesarean section) குழந்தையை வெளியே எடுத்தாள். அந்த ஆண் குழந்தை பூமியைத் தொடாதபடி அவளது கையால் மேலுயர்த்திப் பிடித்து தாங்கினாள். கார்குழலிக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வெற்றிகரமாக பிரசவத்தை செய்து முடித்தாள்.

அப்பொழுது வல்லாளன், அஞ்சனக்காரர் அறிவுறுத்திய படி, குழந்தையையும் மருத்துவச்சியையும் கொல்வதற்காக தனது உடைவாளை உருவிக் கொண்டு மருத்துவச்சியை நோக்கி வந்தான். அவன் குழந்தையை கொல்ல வருவதைக் கண்டு கோபத்தில் கொதித்த மருத்துவச்சி அவளது சுய உருவான பெரியாச்சி ஆயினாள்.

ஆயுதம் தாங்கிய நான்கு கரங்களும் விரிந்த கேச பந்தமும் அவள் உருவினை வெளிக்காட்ட சிவந்திருந்த கண்கள் கோபத்தைக் கொப்பளித்தன. ஒரு கையால் குழந்தையை உயர்த்திப் பிடித்து இன்னொரு கையால் வல்லாளனின் இதயத்தை வாளால் அரிந்து எடுத்தாள். அவனை அவளது காலடியில் தள்ளி ஓங்கி மிதித்துக் கொன்றாள். வல்லாளனைக் காப்பாற்றுவதற்காக எழ முயற்சித்த கார்குழலியின் ஈரக்குலையை (கல்லீரல்) அரிந்து விட்டு மற்ற இரு கரங்களால் அவளது குடலை அள்ளி உண்டாள். இவ்வாறாக, பெரியாச்சி, ராட்சச தொழில் செய்த வல்லாளனையும் அவனுக்குத் துணை சென்ற கார்குழலியையும் அழித்தாள்.

மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆசனம் கொண்டிருந்த பெரியாச்சியை நமஸ்கரித்த மக்கள் கோபம் தணிந்து தங்களைக் காப்பாற்றி அருளுமாறு கைகூப்பி வேண்டினர். அதுவரை தனது கையால் தாங்கிப் பிடித்து பாதுகாத்து வைத்திருந்த வல்லாளனின் குழந்தையை பூமியில் தவழ விட்டாள். அவனுக்கு “சீராளன்” எனப் பெயரிட்டு வளர்த்தாள். அன்றிலிருந்து கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாக பெரியாச்சியை மக்கள் வழிபடத் தொடங்கினர். கி.பி.1475 ஆம் ஆண்டிலிருந்து பெரியாச்சி இறை தேவதையாக உயர்வடைந்து பெரியாச்சி அம்மனாக வணங்கப்படுகிறாள். அவளைத் துதித்து வணங்கி வந்தால், அவள் குடியிருக்கும் ஊரைக் காப்பதாகவும், அவளை நம்பி வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவத்தில் குலம் தழைக்க பாதுகாவலாக இருப்பதாகவும் உறுதி தந்தாள். பெரியாச்சி தன்னை வழிபடும் கர்ப்பவதிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க உறுதுணையாக இருந்து அருள்புரிகிறாள்.


பெரியாச்சியின் பேறுகால அறிவுரைகள் :-

அவள் தம்பதியரை ஆடி மாதத்தில் சேர்ந்து இருக்க வேண்டாம் என வலியுறுத்தினாள். ஆடி மாதத்தில் கருவுற்றால் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும். சித்திரை மாதத்தில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பிரசவிக்கும் பொழுது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான ரத்தப் போக்கினால் தாய்-சேய் இறப்பு விகிதம் (Infant Mortality rate) அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் பெரியாச்சியின் இந்தப் பேறுகால அறிவுரையை மக்கள் இன்றளவும் நடைமுறை வழக்கத்தில் கடைபிடிக்கின்றனர்.


ஆதார தளங்கள் :- 1. http://www.phenomenalplace.com/2014/01/periyachi-amman-worlds-most-fearsome.html 2. http://keetru.com/semmalar/apr09/c_thangavel.php 3. http://thenitthendral.blogspot.in/2016/02/blog-post_25.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ViswaChandra/மணல்தொட்டி&oldid=2037351" இலிருந்து மீள்விக்கப்பட்டது