புணர்நிலையணி

புணர்நிலையணி என்பது வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது ஆகும்.[1][2].

புணர்நிலையணின் இலக்கணம் தொகு

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் புணர்நிலையணிக் கீழ்வருமாறு விளக்குகிறது:

வினை, பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர
மொழிவது புணர்நிலை ஆகும்
                                   --(தண்டியலங்காரம், 86)

புணர்நிலை அணியின் வகைகள் தொகு

புணர்நிலை அணி வினைப் புணர்நிலை, பண்புப் புணர்நிலை என இரண்டு வகைப்படும்.

வினைப் புணர்நிலை தொகு

கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லை முடிக்கும் சொ ல்லாக அமைத்துக் கூறுவது வினைப் புணர்நிலை எனப்படும்.

(எ.கா.)

வேண்டுருவம் கொண்டு, கருகி, வெளிபரந்து,
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த, - ஆண்தகையோர் மேவல்
விரும்பும் பெருநசையால் மெல்ஆவி
காவல் புரிந்திருந்தோர் கண்

(கருகி - கறுத்து;முகில் - மேகம்; நசை - காதல்; ஆவி - உயிர்.)

பாடல்பொருள்:

ஆண்மை மிக்க தலைவரைச் சேர விரும்பிய பெருங்காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி பாதுகாக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த தலைவியருடைய கண்கள், வேண்டிய உருவத்தைக் கொண்டு, கறுத்த நிறத்தை உடையதாய், வானம் எங்கும் பரந்து நீண்ட முகில்களுடனே நீரைப் பொழிந்தன.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, கண்; மற்றொன்று, முகில். இவ்விரு பொருளுக்கும் பொதுவான 'நீர் பொழிந்த' என்னும் வினை பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, வினைப் புணர்நிலை ஆயிற்று.

பண்புப் புணர்நிலை தொகு

கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு குணம் (பண்பு) பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது பண்புப் புணர்நிலை எனப்படும்.

(எ.கா.)

பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போழ்துடனே, நீங்காத
வெம்மையவாய் நீண்டனவால், - தாம்காதல் வைக்கும்
துணைவர் வரும்அவதி பார்த்து ஆவி
உய்க்கும் தமியார் உயிர்

(புள் -பறவைகள்; அவதி - காலம்;)

பாடல்பொருள்:

தாம் அன்பு வைத்த துணைவர் வரும் காலத்தை எதிர்பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மடவாருடைய உயிரானது, பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளுக்குச் சென்று ஒடுங்கிய புல்லிய மாலைப் பொழுதுடனே, நீங்காத துயரம் செய்து நீண்டு கொண்டிருந்தன.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, தமியார் உயிர்; மற்றொன்று, மாலைப் பொழுது. இவ்விரு பொருளுக்கும் பொதுவான 'நீண்டன' என்னும் பண்பு பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, பண்புப் புணர்நிலை ஆயிற்று.

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புணர்நிலையணி&oldid=3221669" இலிருந்து மீள்விக்கப்பட்டது