மயிலைநாதர்

மயிலைநாதர் நன்னூலுக்கு உரை எழுதிய ஆசிரியர். இவர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண மதத்தவர். சீயகங்கன் இவரைப் பேணிய மன்னன்.

கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே பழமையானது. எனினும் இவருக்கு முன்னர் நன்னூலுக்கு எழுதிய உரையும் உண்டு என்பதை இவர் “இதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்.[1] எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

அகத்தியனார் நூற்பாக்கள் பலவற்றை இவர் தம் உரைக்குத் தரும் விளக்கமாக எடுத்தாண்டுள்ளார்.

வினா-விடைகள், மறுப்புரைகள் போன்றவை மயிலைநாதர் உரையில் குறைவு.

இவரது உரை பொழிப்புரை நடையில் உள்ளது. சில பாடல்களுக்குப் பதவுரையாகப் பொருள் எழுதியுள்ளார். [2]

இவர் தமக்கு முந்திய இலக்கண ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தி உரைக்கிறார். “மிகத் தெளி கேள்வி அகத்தியனார்”, “ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் [3] “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர்கேள்வி இளம்பூரணர் எனும் ஏதமில் மாதவர் ஓதிய உரை என்று உணர்க.” [4]

பொருத்தமான இலக்கிய உதாரணங்களைத் தேர்ந்தெடுப்பதில் மயிலைநாதர் கைதேர்ந்தவர். அவர் காட்டியுள்ள உதாரணப் பாடல்களைப் பல இடங்களில் சங்கர நமச்சிவாயர் தழுவிக்கொள்வார். காட்டாக இடையியல் இறுதிச் சூத்திரங்கள் இரண்டிலும் மயிலைநாதர் காட்டிய உதாரணப் பாடல்கள் அனைத்தையும் சங்கர நமச்சிவாயர் தமது உரையில் எடுத்தாளுகிறார்.

அடிக்குறிப்பு தொகு

  1. நன்னூல் 271
  2. நன்னூல் 55, 107, 150, 187
  3. நன்னூல் 130
  4. நன்னூல் 359

மேலொட்டு உரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலைநாதர்&oldid=3147202" இலிருந்து மீள்விக்கப்பட்டது