மலையாள மொழியில் தமிழ்ப்பாட்டு இலக்கியத்தின் தொடர்ச்சி

திராவிட மொழிகள் அனைத்தும் ஒன்றிற்கொன்று தொடர்புடைய மொழிகளாகும். அதிலும் தென் திராவிட மொழிகளான தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் மிகுந்த ஒற்றுமை உள்ள மொழிகளாகும். கால்டுவெல் அவர்கள் மலையாள மொழியைத் தமிழின் உபமொழியாகக் கூறுகிறார் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பக்.24). கேரள பாணினியம் ஆசிரியரான இராஜராஜவர்மா அவர்கள் கி.பி. 1187 - முன்பு மலையாளம் தமிழாகிய தாயின் கர்ப்பத்தில் இருந்தது என்றும் தற்போது இளமையை அடைந்ததால் பெற்றோரை விட்டு வரனான ஆரியக் குடும்பத்தில் பொருந்தியது என்ற கூறுகிறார். அதாவது மலையாள மொழியை தமிழ் மொழியின் மகளாகக் கூறுகிறார் ( கேரள பாணினியம பக்.51- 56).இதே கருத்தை “தமிழ் ஆய்வுகள் ” என்னும் புத்தகத்தில் எம்.எஸ.அய்யங்கார் அவர்களும் கூறுகின்றார் (பக்.375). ஆகவே கி.பி.ஒன்பதாம் நுாற்றாண்டுக்கு முன்பவரை அதாவது கொல்லம் ஆண்டு தொடங்கும்வரை மலையாள மொழி தோன்றவில்லை என உணரலாம். அவர்கள் தங்கள இலக்கியங்களை தமிழ் மொழி வாயிலாகவே படைத்துக் கொண்டனர். அதற்கு ஆதாரமாக மலையாள மொழி இலக்கண, இலக்கியங்களைக் கூறலாம்.

மலையாளம் தனி மொழியாக வளர்ச்சி பெறும் வேளையில் எழுந்த இலக்கிய வளர்ச்சியின் வழியே மலையாள மொழி இலக்கிய வரலாற்றை ஆராய்வது தேவையாகிறது. மலையாள இலக்கியம் இக்கால கட்டத்தில் பாட்டு இலக்கியம், மணிப்பிரவாள இலக்கியம எனும் இரு பிரிவாக தோற்றம் பெற்றது. பாட்டு இலக்கியம் தமிழ் மரபு சார்ந்தும், மலையாள இலக்கியம் சமஸ்கிருதம் சார்ந்தும் அமைந்தன. தமிழ்ப்பாட்டு மரபில் எழுந்த இலக்கியங்களாக இராமசரிதம், திருநிழல்மாலை, கண்ணசர் படைப்புகள் குறிப்பிடத்தக்கன. இவ்வகையில் திருநிழல்மாலை என்னும் புத்தகத்தை இக்கட்டுரை ஆராய்கிறது. இப்புத்தகத்தை கி.பி.1981 - ஆம் ஆண்டு திரு.புருசோத்தமன்நாயர் அவர்கள் பதிப்பித்தார்.

மலையள மொழியின் முதல் புத்தகமான லீலாதிலகம் (இலக்கணம்) ”த்ரமிட சங்காதக்சர நிபந்தம் எதுக மோன வ்ருத்த விஷேஷ யுக்தம் பாட்டு” (லீலாதிலகம் சூத்திரம் 11). என பாட்டு இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றது.

இவ்விலக்கணத்தின்படி மலையாள மொழியில் இரண்டு புத்தகங்களே கிடைத்துள்ளன. ஒன்று இராமசரிதம், மற்றொன்று திருநிழல்மாலை. ஏனைய மலையாள மொழி இலக்கியங்கள் இதினின்று மாறி அமைந்துள்ளன. இவ்விரு இலக்கியங்களும் தமிழ்ப்பாட்டு மரபின்படியே அமைந்துள்ளன. இராமசரிதத்தின் யாப்பு ஆசிரியவிருத்தத்தில மட்டுமே அமைந்திருக்க, திருநிழல்மாலையின் யாப்போ ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், கலித்துறை, ஈரடிக்கண்ணியிலும் அமைந்துள்ளது.

”கோவிந்தென் சொல் திருநிழல்மாலை” என்னும் ஆசிரியரின் கூற்றின்படி இப்புத்தக ஆசிரியர் பெயர் கோவிந்தன் என்பதும் இப்புத்தகத்தின் பெயர் திருநிழல்மாலை என்பதையும் அறியலாம்.

இவ்விலக்கியம் திருவாறென்விளையில் (கேரள மாநிலம்) குடிகொண்டுள்ள இறைவன் கிருஷ்ணனுக்கு மலையர்கள் வழங்கும் பலியைக் குறிப்பிடுகிறது. இவ்விலக்கியம் நுால்தோற்றம் (காவ்யோபக்ரமம்), நாகூறு ( நாவல), பலிபடைத்தல் (பலியர்ப்பிக்கல்) என்னும் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. வைணவர்களின் திருப்பதிகளில் 13- திருப்பதிகள் கேரளாவில் அமைந்துள்ளன. அவை திருவனந்தபுரம், திருவெண்பரிசாரம் ( திருப்பதிசாரம்), திருக்காரிக்கரை ( திருக்காக்கரை), திருமூழிக்களம், திருப்புலியுார், திருச்செங்குன்றுார் (திருச்செங்ஙன்னுார்), திருச்சிற்றார,திருவல்லவாழ்( திருவல்லா), திருவண்வண்டூர், திருவடடாறு, திருவாறென்விளை, திருக்கடித்தானம்ஈ திருவித்தவக்கோடு ( திருமிற்றக்கோடு),திருநாவாய் போன்றவையாகும்.

திருநிழல்மாலையின் காப்புப் பாடலாக பிள்ளையார் வாழ்த்து, கலைமகள் வாழ்த்து, அம்மையப்பர் வாழ்த்து, திருவாறென்விளை திருமால் வாழ்த்து, போன்றவை அமைந்துள்ளன. இதன் பின்னர் பாரதநாடு பற்றியும் அதன் பதினெட்டு பிரிவுகள் பற்றியும் பற்றியும் கூறுகிறார் ஆசிரியர். மேலும் ஆறென்விளை கிராமம்இ கோயில், ராமத்தின் ஊராளர்கள் போன்ற செய்திகள் முதல பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் ஆறென்விளை இறைவனுக்கு திருநிழல் அமைப்பது பற்றிய செய்திகளைக் கூறுகிறார். மூன்றாம் பாகத்தில் மலையர்கள் இறைவனுக்கு வழங்கும் பலி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.