வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமை தொகு

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வரதட்சணை சாவுகள் தொகு

2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]

இந்திய அரசின் சட்டங்கள் தொகு

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:

  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும். அறிவியல் விரோத மாக ஸ்டவ் வெடித்து மருமகள் மட்டும் சாகிற பிரச்னைக்கு இவ்வாறாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ் திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப் படுத்தப்பட்டது. 2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில் திருமணத்துக்காக கொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.[1]

மகளிர் காவல் நிலையங்கள் தொகு

தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "வரதட்சணை வெறுப்போம்! மனிதர்களாய் நடப்போம்!". தீக்கதிர். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

யாழ்ப்பாணத்துச் சீதன முறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதட்சணை&oldid=3498985" இலிருந்து மீள்விக்கப்பட்டது