வல்லினம் மிகும் இடங்கள்

ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும்

வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.[1]

வல்லெழுத்து மிகுமிடங்கள் தொகு

  • அ,இ,உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும்.
அக்கனி,
இப்பையன்,
......
எச்சிறுவன்?
  • அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்தக் கனி,
இந்தப் பையன்,
... ... ...
எந்தக் குதிரை?.
  • அப்படி,இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அப்படிக் கற்றான்,
இப்படிச் சொன்னான்,
எப்படித் தருவான்.
  • அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அங்குக் கண்டான்,
இங்குப் பெற்றான்.
எங்குச் சென்றனை?
  • இனி, தனி, திரு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
இனிச் செய்யலாம்,
தனித்தமிழ்,
திருச்செந்தூர்
திருக்குறள்

வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள் தொகு

  • இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
மயிலைக் கண்டேன்‌.
மலையைச் சார்ந்தேன்.
உணவைத் தந்தேன்.
குறளைப் படித்தேன்.
  • நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
தந்தைக்குக் கொடுத்தான்
தாய்க்குச் சொன்னான்
தங்கைக்குத் தந்தான்
  • நான்காம் வேற்றுமைத் தொகையில் முன்நின்ற சொல் (நிலைமொழி) அஃறிணைப் பெயராக இருந்தால் பின்வரும் வல்லினம் மிகும்.
குறிஞ்சித் தலைவன்
படைத்தளபதி.
கூலிப்படை.
  • ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணைப்பெயராக இருப்பின் பின்வரும் வல்லினம் மிகும்.
நாய்க்குட்டி
புலித்தலை
நரிப்பல்
  • ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
மனைப் பிறந்தாா்
சென்னைப் பல்கலைக்கழகம்.

அல்வழிப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள் தொகு

  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
ஓடாக்குதிரை,
கூடாச்சந்தை,
ஆடாத்தசை,
பாடாப் பாட்டு.
  • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
இனிப்புப் பண்டம்,
வட்டப்பலகை,
வெள்ளைத்தாள்,
சிவப்புச்சட்டை.
  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
ஆவணித் திங்கள்,
சாரைப்பாம்பு,
உழவுத்தொழில்,
செவ்வாய்க்கிழமை.
  • அரை,பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அரைக்காசு,
பாதிப்பணம்,
எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு.
  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
மலர்க்கை,
தாமரைப்பாதம்,
சங்குக்கழுத்து,
புலிப்பாய்ச்சல்.
  • ஆய், போய் என்னும் வினையெச்சச் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
போய்க் கண்டேன்,
நன்றாய்ச் சொன்னாய்.
  • இகர, அகர ஈற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
தேடிப் பார்த்தேன்,
தேடப் போனேன்.
  • ஆக, என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்.
தருவதாகச் சொன்னான்,
பார்ப்பதாகக் கூறினாள்,
தாயெனக் கூறினார்,
படி எனக் கூறினார்.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் மொழி கற்பித்தல் வளநூல்-முதலாம் ஆண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லினம்_மிகும்_இடங்கள்&oldid=3845393" இலிருந்து மீள்விக்கப்பட்டது