வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்றாகும். இது அம்புகளை எய்வதற்குப் பயன்படுகின்றது. அம்பு எய்வதற்கான ஆற்றலைப் பெறுவது, வில்லின் மீள்தகவுத் தன்மையில் தங்கியுள்ளது. இறைவனுக்கும் வில் ஓர் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது.

இராமன் வில்லை முறிக்கும் காட்சி

இதிகாசங்களில் வில் தொகு

இதிகாச நாயகர்கள் வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். வில் அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்காக அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொள்வர். வில் போர்க்கலையாக விளங்கியது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் நடைபெற்ற போர்களில் வில்வழி சண்டை செய்வதே வழக்கமாக இருந்திருக்கிறது. வில்வித்தையில் சிறந்த வீரர்களை “வில்லாளிகள்” என்று போற்றுவது வழக்கமாக இருந்தது. வில்வித்தைக்கு அஸ்திரப் பயிற்சி என்றும் பெயர் உண்டு. வில்லுக்கு விஜயன் என்பது பழமொழி.

மகாபாரதத்தில் வில் தொகு

மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமமாக வில்வித்தை பயிற்றுவித்தார். துரோணரிடம் வில்வித்தை பயில விரும்பி இயலாமல் போனவன் ஏகலைவன். எனினும் துரோணரின் பிரதிமையைச் செய்து வைத்து வில்வித்தை பயின்றான் என்பது வரலாறு. அருச்சுனன் இரவில் வில்மூலம் அம்பு எய்யவும், நுண்ணிய அம்புகளால் எதிரிகளைப் பயமுறுத்தவும் கற்றிருந்தான். துரோணர் வைத்த வில்வித்தை சோதனையில் அருச்சுனன் ஒருவனே வென்றான் என்பதற்குப் பறவையின் கழுத்தைக் குறித்த கதை இன்றும் வழங்கப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் சிகண்டியால் வீழ்த்தப்பட்ட வீடுமன் அம்புகளால் ஆன படுக்கையிலேயே கிடத்தப்பட்டான். இது வீரர்களுக்குரிய மரபாக இருந்துள்ளது.

இராமாயணத்தில் வில் தொகு

இராமன் உள்ளிட்ட சகோதரர்களுக்கு விசுவாமித்திரரே வில்வித்தைகளைக் கற்றுத் தந்தார். இராமனும் இலக்குவனும் வில்லில் சிறந்த வீரர்களாக விளங்கினர். சனகன் வைத்திருந்த சிவதனுசு வில்லை உடைத்தே இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டான் என்பதும் பரசுராமனின் வில்லை ஒடித்தவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராமன் மராமரம் ஏழும் எய்தவன் என்பது அவனுடைய வில்திறமைக்குச் சான்றாகும்.

வில்லின் சக்தி வில்லில் பூட்டப்படும் அம்புகள் (அஸ்திரங்கள்) தற்காலத்து ஏவுகணைகள் போலவும் செயல்பட்டுள்ளன. பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னியாஸ்திரம், வருணாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்றவை அத்தகு சக்தி படைத்தவையாக திகழ்ந்திருக்கின்றன.

நாயகர்களும் வில்களும் தொகு

வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.

  • சிவனின் வில் - பிநாகம்
  • கண்ணனின் வில் - சாரங்கம்
  • இராமனின் வில் - கோதண்டம்
  • கர்ணனின் வில் - விஜயம்
  • அருச்சுனனின் வில் - காண்டீபம்
  • மன்மதனின் வில் - கரும்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்&oldid=3081566" இலிருந்து மீள்விக்கப்பட்டது