ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி தொகு

மயிலம் பொம்மபுர ஆதீனம் பதினெட்டாம் பட்டம் குருமகா சந்நிதானங்கள் சைவத்தையும், தமிழையும் இரு கண்களெனப் போற்றி அருளாட்சி செய்தவர்கள். மயிலம் பொம்மபுரத் திருமடங்களிலும் சைவத்தையும் தமிழையும் வளர்க்கப் புலவர் பெருமக்களைக் கொண்டும் தானும் ஒரு புலவராகவும் நின்று பல்வேறு சொற்பொழிவுகளை நடத்தி யருளியவர்கள். அச்சமயத்தில் தமிழ்மீது கொண்ட பற்றினால் முருகன் செந்தமிழ்க் கழகத்தை கி.பி. 1937ஆம் ஆண்டில் தோற்றி வைத்து தமிழ்க் கல்லூரியைத் தொடங்க விழைந்தார்கள்.

கல்லூரித் தோற்றம் தொகு

ஸ்ரீலஸ்ரீசந்நிதானங்கள் ஆசியோடு மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றிய திரு. இராஜா முதலியார் அவர்களும், தென்னார்க்காடு மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய திரு. ச. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் திரு. டி.எம். நாராயணசாமிப் பிள்ளை அவர்களும், மேலும் கோவைகிழார் உயர்திரு சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களும், உயர்திரு ஏ.எஸ். மன்னாடி நாயர், உயர்திரு பி. காமேஸ்வரராவ் ஆகியோரது நல்லுதவியால் 14. 07. 1938இல் முருகன் செந்தமிழ்க் கழகத்தின் சார்பில் தமிழ்க் கல்லூரி உருவெடுத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப் பெற்ற ஆணையர் வித்துவான் உயர்திரு டி.கே. நடேஸசர்மா அவர்களின் அறிக்கை அடிப்படையில் (கடித எண் கி/336/ஞி/03.08.1941) சென்னைப் பல்கலைக் கழக இணைப்பாணை பெறப்பெற்றது.

கல்லூரியின் நோக்கமும் சிறப்பும் தொகு

கிராமப்புற மாணவர்கள் தமிழில் புலமை பெற வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப் பெற்றது இக்கல்லூரி. தென்னார்க்காடு, வடஆர்க்காடு, சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இக்கல்லூரியில் பயின்று ஆதீன கர்த்தர்களாகவும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவும், முதல்வர்களாகவும், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் தமிழாசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றும் பணியாற்றிக் கொண்டும் உள்ளனர். சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வில் தமிழ்ப் புலமையில் முதன்மை பெறும் மாணவர்க்கு அளிக்கப் பெறும் பரிசுத் தொகை ரூபாய் ஆயிரத்தினை ஆண்டுதோறும் இக்கல்லூரி மாணவர்களே பெற்று வந்துள்ளனர்.

கல்லூரிப் பாடப்பிரிவுகள் தொகு

இக்கல்லூரியில் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பாணையுடன் பதினெட்டாம் பட்டம் குருமகா சந்நிதானங்களின் அருட்பார்வையின் வண்ணம்

வித்துவான் - தமிழ்ப் பட்டயப் படிப்பு நான்கு ஆண்டுகள் 1938 - 39 முதல் 1969 - 70 வரை சீரும் சிறப்புமாக இயங்கி வந்தது. அவர்கள் காலத்திற்குப் பின் பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவற்றை மெருகூட்ட முயன்று,

புலவர் தமிழ் - பட்டயப் படிப்பு நான்கு ஆண்டுகள் 1970 - 71 முதல் 1974 - 75 வரை.

பி.லிட் தமிழ்ப் பட்டப் படிப்பு நான்கு ஆண்டுகள் 1975 - 76 முதல் 1979 - 80 வரை

பி.லிட் தமிழ்ப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள் 1980 - 81 முதல் இன்றுவரை சிறந்த முறையில் இயங்கி வருகிறது. மேலும்,

முதுகலைத் தமிழ் - பட்டப் படிப்பு இரண்டாண்டுகள் (சுயநிதிப் பிரிவு) 2002 - 03 முதல் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பாணையுடன் தொடங்கப் பெற்று 2003-04 முதல் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இணைக்கப் பெற்று இயங்கி வருகிறது.

கூடுதல் படிப்புகள் தொகு

இந்நிலையில் திருமட வளர்ச்சிக்கும், கல்லூரியின் மேம்பாட்டிற்கும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களும், 19ஆம் பட்டம் குருமகா சந்நிதானங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் திகழ்ந்த திரு. குமார. சிவ.இராஜேந்திரன், B.Sc. B.L. அவர்கள் 2004 முதல் கல்லூரிச் செயலராகப் பொறுப்பேற்று கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கீழ்க்கண்ட பாடப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தார்கள். எம்ஃபில் தமிழ் - ஆய்வுப் படிப்பு பகுதி நேரம் - முழுநேரம் 2005 - 06 முதல் பி.எச்.டி தமிழ் ஆய்வுப் படிப்பு பகுதி நேரம் - முழுநேரம் 2005 - 06 முதல்

கலை அறிவியல் துறைகள் தொடக்கம் தொகு

மேலும் 2007 - 08 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற மாணவர்கள் தமிழில் மட்டுமின்றி பல்துறையில் பயின்று உலக அரங்கில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி என்பது ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி எனத் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை அரசு கடிதம் (நிலை) எண்: 223, நாள் 09.07.2007 அரசு ஆணையின் வண்ணம் பெயர் மாற்றம் செய்யப் பெற்று

  • 2008 - 2009ஆம் ஆண்டு முதல்,
  • B.Sc கணினி அறிவியல் மூன்றாண்டுகள் 2008 - 09 முதல்
  • B.Com வணிகவியல் மூன்றாண்டுகள் 2008 - 09 முதல்
  • B.C.A கணினி பயன்பாடு மூன்றாண்டுகள் 2009 - 10 முதல்
  • B.A ஆங்கிலம் மூன்றாண்டுகள் 2011 - 12 முதல்
  • M.Com வணிகவியல் இரண்டாண்டுகள் 2011 - 12 முதல்

ஆகிய பாடப்பிரிவுகள் சுயநிதிப் பிரிவில் தொடங்கப் பெற்று கிராமப்புற ஏழை மாணவர்களின் ஏற்றத்திற்கு வழி வகுத்துக் கொண்டு வருகிறது. தற்போது இக்கல்லூரி 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகளின் குருவருள் ஆசியுடன் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது.