தைமூர்

துருக்கிய-மங்கோலிய இராணுவத் தலைவர் மற்றும் படையெடுப்பாளர் (1336-1405)

தைமூர் (9 ஏப்ரல் 1336 – 17–19 பெப்ரவரி 1405) என்பவர் ஒரு துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் ஆவார். இவர் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்தார். தைமூரியப் பேரரசின் பகுதிகள் தற்போதைய ஆப்கானித்தான், ஈரான் மற்றும் நடு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ளன. தைமூரிய அரசமரபையும் இவர் தோற்றுவித்தார். தோற்கடிக்கப்படாத படைத்தலைவரான இவர், வரலாற்றில் முக்கியமான இராணுவத் தலைவர்கள் மற்றும் தந்திரோபாயவாதிகளில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.[4][5] பெரிய கலை மற்றும் கட்டடக் கலைப் புரவலராகக் கருதப்படுகிறார். இப்னு கல்தூன் மற்றும் அபீசி அபுரு போன்ற அறிஞர்களிடம் உரையாடியுள்ளார். இவரது ஆட்சிக் காலம் தைமூரிய மறுமலர்ச்சியை அறிமுகப்படுத்தியது.[4]:341–2

தைமூர்
தெமுர்
தைமூரின் மண்டை ஓட்டில் இருந்து சோவியத் அறிஞர் மிக்கைல் மிக்கைலோவிச் செராசிமோ மறுசீரமைப்பு செய்த தைமூரின் முகம்
தைமூரிய வம்சத்தின் அமீர்
ஆட்சி9 ஏப்ரல் 1370 – 14 பெப்ரவரி 1405
முடிசூட்டு விழா9 ஏப்ரல் 1370[2]
முன்னிருந்தவர்அமீர் உசைன்
பின்வந்தவர்கலில் சுல்தான்
துணைவர்சராய் முல்க் கனும்
வாரிசு(கள்)
முழுப்பெயர்
சுஜாவுதீன் தைமூர்[3]
மரபுதைமூர் வம்சம்
தந்தைஅமீர் தரகை
தாய்தெக்கினா கதுன்
பிறப்பு9 ஏப்ரல் 1336 [2]
கேசு, சகதாயி கானரசு (இன்றைய உசுபெக்கித்தானில் ஷாரிசப்ஸ்)
இறப்பு18 பெப்ரவரி 1405 (அகவை 68)
ஒற்றார், தைமூரியப் பேரரசு (தற்போது ஒற்றார், கசக்கஸ்தான்)
அடக்கம்குர்-இ அமீர், சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்
சமயம்சன்னி இசுலாம்

திரான்சாக்சியானாவில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) இருந்த பர்லாசு கூட்டமைப்பில் 9 ஏப்ரல் 1336ஆம் ஆண்டு தைமூர் பிறந்தார். 1370ஆம் ஆண்டுவாக்கில் சகதாயி கானரசின் மேற்குப் பகுதியின் கட்டுப்பாட்டைத் தைமூர் பெற்றார். அப்பகுதியைத் தன்னுடைய அடிப்படைப் பகுதியாகக் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் நடு ஆசியா, காக்கேசியா மற்றும் தெற்கு உருசியா ஆகிய பகுதிகள் மீதான இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கினார். எகிப்து மற்றும் சிரியாவின் அடிமை வம்சம், வளர்ந்துகொண்டிருந்த உதுமானியப் பேரரசு மற்றும் இந்தியாவின் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த தில்லி சுல்தானகம் ஆகிய நாடுகளைத் தோற்கடித்த பிறகு இசுலாமிய உலகின் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளராகத் தைமூர் உருவானார்.[6] இந்தப் படையெடுப்புகள் மூலமாகத் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்தார். எனினும், இவரது இறப்பிற்குப் பிறகு இப்பேரரசு சிதறுண்டது.

ஐரோவாசியப் புல்வெளியின் பெரிய நாடோடிப் படையெடுப்பாளர்களில் கடைசியானவர் தைமூர். 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நல்ல கட்டமைப்புடைய மற்றும் நீடித்திருந்த இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகள் வளர்வதற்கு தைமூரியப் பேரரசு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.[7][8][9] தைமூர் துருக்கிய மற்றும் மங்கோலிய வழித்தோன்றல் ஆவார். ஆனால், இரண்டு பக்கமும் இவர் நேரடி வழித்தோன்றல் கிடையாது. இவரது தந்தை வழி மூதாதையர் மற்றும் செங்கிஸ் கான் ஆகியோர் ஒரே மூதாதையரைக் கொண்டிருந்தனர்.[10][11][12] சில எழுத்தாளர்கள் தைமூரின் தாய் கானின் வழித்தோன்றலாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.[13][14] தனது வாழ்நாளில் செங்கிஸ் கானின் படையெடுப்புகளின் மரபை மீண்டும் உருவாக்கத் தைமூர் முயற்சி செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.[15] செங்கிஸ் கானின் (இறப்பு 1227) மங்கோலியப் பேரரசை மீட்டெடுப்பதைப் பற்றித் தைமூர் கனவு கண்டார். செரார்டு சலியந்த் என்கிற பிரெஞ்சு அறிஞரின் கூற்றுப் படி தைமூர் தன்னைச் செங்கிஸ் கானின் வாரிசு என்று கருதினார்.[16]

பீட்ரைசு போர்ப்சு மேன்சு என்கிற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி "தனது வாழ்நாள் முழுவதும் தைமூர் தனது அதிகாரப்பூர்வ கடிதத் தொடர்பில் தன்னை செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் உரிமைகளை மீட்டெடுப்பவராக அடையாளம் காட்டிக் கொண்டார். அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீது மீண்டும் மங்கோலிய ஆட்சியை நிறுவுவதற்காக தன்னுடைய ஈரானிய, அடிமை வம்ச மற்றும் உதுமானியப் படையெடுப்புகள் இருந்ததாக நியாயப்படுத்தினார்".[17] தனது படையெடுப்புகளை மேலும் நியாயப்படுத்த தைமூர் இசுலாமியச் சின்னங்கள் மற்றும் மொழியைச் சார்ந்து இருந்தார். தன்னை "இசுலாமின் வாள்" என்று குறிப்பிட்டுக் கொண்டார். கல்வி மற்றும் மத நிறுவனங்களுக்குப் புரவலராக விளங்கினார். தன்னுடைய வாழ்நாளில் கிட்டதட்ட அனைத்து போர்சிசின் தலைவர்களையும் இசுலாம்முக்கு மதம் மாற்றினார். இசுமைர்னா கோட்டை முற்றுகையின் போது தைமூர் கிறித்தவ குதிரை வீரர்களைத் தீர்க்கமாகத் தோற்கடித்தார். தன்னை காசி என்று அழைத்துக் கொண்டார்.[4]:91 தனது ஆட்சிக் காலம் முடியும் போது தைமூர் சகதாயி கானரசு, ஈல்கானரசு மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றின் அனைத்து எஞ்சிய பகுதிகள் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். சீனாவில் யுவான் அரசமரபை மீண்டும் நிறுவுவதற்குக் கூட முயற்சிகள் மேற்கொண்டார்.

தைமூரின் இராணுவங்கள் பல்வேறு இனத்தைச் சேர்ந்த போர் வீரர்களைக் கொண்டிருந்தன. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்கள் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தின.[4] இக்கண்டங்களில் இவரது படையெடுப்புகள் கணிசமான பகுதிகளுக்கு அழிவை ஏற்படுத்தின.[18] அறிஞர்களின் மதிப்பீட்டின் படி இவரது படையெடுப்புகள் 1.7 கோடி மக்களின் இறப்பிற்குக் காரணமாயிருந்தன. இது அந்நேரத்தில் உலக மக்கள் தொகையில் சுமார் 5% ஆகும்.[19][20] இவரால் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், இவரது படையெடுப்பால் அதிக பாதிப்பைச் சந்தித்தது குவாரசமியா பகுதியாகும். ஏனெனில், அப்பகுதி இவருக்கு எதிராக அடிக்கடி கிளர்ந்தெழுந்தது.[21]

நடு ஆசியாவை 1411 முதல் 1449 வரை ஆண்ட தைமூரிய சுல்தான், வானியலாளர் மற்றும் கணிதவியலாளரான உலுக் பெக்கின் தாத்தா இந்தத் தைமூர் ஆவார். இந்தியத் துணைக்கண்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபரின் (1483-1530) சேயோன் இந்தத் தைமூர் ஆவார்.[22][23]

மூதாதையர் தொகு

 
தைமூர் மற்றும் செங்கிஸ் கான் இடையிலான பரம்பரை உறவுமுறை

தனது தந்தை வழியில் துமனய் கானின் வழித்தோன்றல் என்று தைமூர் கோரினார். செங்கிஸ் கானின் ஓட்டன் துமனய் கான்.[12] துமனய் கானின் எள்ளுப் பேரனாகிய கரச்சர் நோயன் பேரரசருக்கு மந்திரியாகப் பணிபுரிந்தார். பிற்காலத்தில் அவரது மகனான சகதாயிக்கு திரான்சாக்சியானாவை ஆள்வதற்கு உதவி புரிந்தார்.[24][25] 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுப் பதிவுகளில் கரச்சரைப் பற்றிக் குறிப்புகள் மிகக் குறைவாகவே இருந்த போதிலும், பிற்காலத் தைமூரிய ஆதாரங்கள் மங்கோலியப் பேரரசின் ஆரம்ப கால வரலாற்றில் கரச்சரின் பங்களிப்பைப் பற்றி பெரிதும் வலியுறுத்தின.[26][27] மேலும், இவ்வரலாறுகளில் சகதாயியின் மகளைக் கரச்சருக்கு மணமுடித்துக் கொடுத்ததன் மூலம், செங்கிஸ் கான் தனக்கும் கரச்சருக்கும் இடையில் தந்தை மகன் உறவு முறையை நிறுவினார் என்றும் கூறுகின்றன.[28] இந்தத் திருமணத்தின் மூலம் வழித்தோன்றலாகத் தான் பிறந்ததாகக் கூறிய தைமூர், சகதாயி கான்களுடனும் உறவு முறை கோரினார்.[29]

தைமூரின் தாயாகிய தெகினா கதுனின் முன்னோர்களைப் பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. சாபர்னாமா நூலில் அவரது பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பின்புலத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. 1403ஆம் ஆண்டு சுல்தானியாவின் ஆர்ச்பிஷப் ஆகிய ஜீனின் குறிப்புகளில், தைமூரின் தாய் தாழ்ந்த சமூக நிலையில் இருந்து வந்தவர் எனப்படுகிறது.[24] தசாப்தங்களுக்கு பிறகு எழுதப்பட்ட முயிசல் அன்சப் நூலில் பர்லாசு இனத்தவரின் நிலங்களுக்கு அண்டை நிலப்பகுதியில் வாழ்ந்த எசௌரி பழங்குடியினத்துடன் தொடர்புடையவர் தைமூரின் தாய் என்று குறிப்பிடப்படுகிறது.[30] புராண நாயகனான மனுச்சேரின் வழித்தோன்றல் தனது தாய் என தைமூர் தன்னிடம் விளக்கியதாக இப்னு கல்தூன் விவரித்துள்ளார்.[31] வரலாற்றாளர் இப்னு அரபுசா தைமூரின் தாய் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் என்று கூறுகிறார்.[14] தைமூரைப் பற்றிய 18ஆம் நூற்றாண்டு நூல்கள் தைமூரின் தாய் சதிரல் சரியாவின் மகள் என்று கூறுகின்றன. சதிரல் சரியா என்பவர் புகாராவின் அனாபி அறிஞராகிய உபயத்தல்லா அல்-மபுபி என்று நம்பப்படுகிறது.[32]

இளமைக் காலம் தொகு

 
சமர்கந்தின் தோட்டங்களில் உணவு உண்ணும் அமீர் தைமூர்.

தைமூர் கேசு நகருக்கு (தற்கால உஸ்பெகிஸ்தானின் சகரிசப்சு) அருகில் திரான்சாக்சியானாவில் பிறந்தார். இது சமர்கந்திற்குத் தெற்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்நேரத்தில் இது சகதாயி கானரசின் ஒரு பகுதியாக இருந்தது.[33] தெமுர் என்கிற இவரது பெயருக்கு "இரும்பு" என்று சகதாயி மொழியில் பொருள்.[34] இது செங்கிஸ் கானின் இயற்பெயரான தெமுசின் உடன் ஒன்று பட்டதாக உள்ளது.[35][36] பிற்காலத் தைமூரிய அரசமரபின் வரலாறுகள் தைமூர் 8 ஏப்ரல் 1336ஆம் ஆண்டு பிறந்ததாகக் கூறுகின்றன. ஆனால், தைமூரின் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களில் இவர் 1320களின் பிற்பகுதியில் பிறந்ததாகவே கூறப்படுகிறது. குலாகு கானின் வழித்தோன்றலான ஈல்கானரசின் கடைசி ஆட்சியாளரான அபு சயித் பகதூர் கான் 1336ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய மரபுடன் தைமூரைத் தொடர்புபடுத்தவே 1336ஆம் ஆண்டு தைமூர் பிறந்த ஆண்டாக குறிப்பிடப்படுவதாக வரலாற்றாளர் பீட்ரைசு போர்ப்சு மேன்சு சந்தேகப்படுகிறார்.[37]

மங்கோலியப் பழங்குடியினமான பர்லாசு இனத்தை சேர்ந்தவர் தைமூர் ஆவார்.[38][39] எனினும், பல்வேறு வழிகளில் பர்லாசு இனமானது துருக்கிய மயமாக்கப்பட்டு இருந்தது.[40][41][42] இவரது தந்தை தரகை பழங்குடியினத்தின் சிறிய உயர்குடியினராக இருந்தார்.[33] எனினும், வரலாற்றாளர் பீட்ரைசு போர்ப்சு மேன்சு தனது வெற்றிகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தைமூர் தனது தந்தையின் சமூக நிலையைப் பிற்காலத்தில் குறைத்துக் கூறியிருக்கலாம் என்று நம்புகிறார். தைமூரின் தந்தை அதிகாரம் மிக்கவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகின்ற போதிலும், அவர் குறிப்பிடத்தக்க வகையில் செல்வம் மற்றும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்துள்ளார்.[43] 1360இல் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு தைமூர் தனது தந்தையின் பண்ணைப் பகுதிகளுக்குத் திரும்பியதன் மூலம் இதனை நாம் அறியலாம்.[44] வரலாற்றாளர் அரபுசா, தைமூரின் தந்தை தரகையின் சமூக முக்கியத்துவத்தை அவர் அமீர் கரௌனாசின் அவையில் செல்வாக்கு செலுத்தியதை வைத்துக் குறிப்பிடுகிறார்.[45] இவற்றுடன் மொகுலிசுதானின் பெரும் அமீர் அமீது கெரயிடுவின் தந்தையானவர் தரகையின் நண்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[46]

தைமூரின் குழந்தைப் பருவத்தில் தைமூரும், இவரது ஆதரவாளர்களின் ஒரு குழுவும் பயணிகளிடம் பொருட்கள், குறிப்பாக செம்மறியாடு, குதிரைகள் மற்றும் கால்நடைகள் போன்ற விலங்குகளைக் கொள்ளையடித்தன.[37]:116 1363ஆம் ஆண்டு வாக்கில் தைமூர் ஒரு கால்நடை மேய்ப்பாளரிடமிருந்து செம்மறி ஆட்டை திருடுவதற்கு முயற்சித்தார் என்று நம்பப்படுகிறது. ஆனால், இரண்டு அம்புகளால் தாக்கப்பட்டார். ஓர் அம்பானது இவரது வலது காலைத் தாக்கியது. மற்றொரு அம்பு இவரது வலது கையைத் தாக்கியது. இதன் காரணமாக வலது கையில் இவர் இரண்டு விரல்களை இழந்தார். இந்தக் காயங்கள் இவரை வாழ்நாள் முழுவதும் மாற்றுத் திறனாளி ஆக்கின. குராசான் பகுதியின் சிசுதானின் கானாக இருந்தவரிடம் கூலிப்படையாக பணியாற்றிய போது இந்தக் காயங்கள் இவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். சிசுதான் பகுதி தற்போதைய தென் மேற்கு ஆப்கானித்தானில் உள்ள தசுதி மார்கோ ஆகும். தைமூரின் காயங்கள் இவருக்கு தைமூர் த லேம் மற்றும் டாமர்லேன் ஆகிய பெயர்களை ஐரோப்பியர்களிடம் பெற்றுத் தந்தன.[4]:31

இராணுவத் தலைவர் தொகு

1360ஆம் ஆண்டு வாக்கில் தைமூர் ஓர் இராணுவத் தலைவராக முக்கியத்துவம் பெற்றார். இவரது துருப்புகள் பெரும்பாலும் அப்பகுதியில் இருந்த துருக்கியப் பழங்குடியின வீரர்களாக இருந்தனர். சகதாயி கானரசின் கானுடன் திரான்சாக்சியானா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்தார். வோல்கா பல்கேரியாவின் ஆட்சியாளரைப் பதவியிலிருந்து நீக்கி அந்நாட்டை அழித்த கசகான் உடன், அவசியம் மற்றும் குடும்ப உறவு முறை காரணமாகத் தைமூர் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார். ஆயிரம் குதிரை வீரர்களைக் கொண்ட படையுடன் குராசான் பகுதியைத் தாக்கினார்.[47] தைமூர் தலைமையேற்று நடத்திய இரண்டாவது இராணுவ நடவடிக்கை இதுவாகும். இந்நடவடிக்கையில் தைமூர் பெற்ற வெற்றி காரணமாக மேலும் பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவற்றுள் முக்கியமானவை குவாரசமியா மற்றும் ஊர்கெஞ்ச் ஆகிய பகுதிகளை அடிபணிய வைத்தது ஆகியவை ஆகும்.[48]

கசகான் கொல்லப்பட்ட பிறகு அரியணையில் அமர உரிமை கோரிய பலருக்கு இடையில் பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. செங்கிஸ் கானின் மற்றொரு வழித்தோன்றலும், கிழக்கு சகதாயி கானரசின் கானும் ஆகிய கசுகரின் துக்லுக் தைமூர் படையெடுத்து இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறு தடையை ஏற்படுத்தினார். படையெடுத்து வந்த துக்லுக் தைமூருடன் பேச்சுவார்த்தை நடத்த தைமூர் அனுப்பப்பட்டார். ஆனால், அவருடன் கை கோர்த்துக் கொண்டார். இதற்குப் பரிசாக தைமூருக்குத் திரான்சாக்சியானா வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் தைமூரின் தந்தை இறந்தார். தைமூர் பர்லாசு இனத்தவரின் தலைவரானார். பிறகு திரான்சாக்சியானாவின் ஆட்சியாளராகத் தனது மகன் இலியாசு கோசாவை அரியணையில் அமர வைக்கத் துக்லுக் தைமூர் முயற்சித்தார். ஆனால், சிறு படையைக் கொண்டு இந்தப் படையெடுப்பைத் தைமூர் முறியடித்தார்.[47]

வளர்ச்சி தொகு

 
பல்கு முற்றுகையைத் தைமூர் முன்னின்று நடத்துதல்

இந்த கால கட்டத்தில் தைமூர் சகதாயி கான்களைக் கைப்பாவைகளாக ஆக்கினார். அவர்களின் பெயரைப் பயன்படுத்தி தைமூர் ஆட்சி செய்தார். மேலும், இந்த நேரத்தில் தான் தைமூரும், இவருடன் ஆரம்ப காலம் முதல் இருந்த மைத்துனர் அமீர் உசைனும் எதிரிகளாக மாறினர்.[48] மவரண்ணாவின் முன்னாள் ஆளுநரான இலியாசு கோசாவைத் தாசுகந்துக்கு அருகில் வைத்துக் கொல்ல தைமூர் அமீர் உசைனுக்கு ஆணையிட்டார். ஆனால், அமீர் உசைன் அதற்கென எந்த முயற்சிகளையும் எடுக்காமல் செயலைக் கைவிட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடைப்பட்ட உறவானது முறிந்தது.[4]:40

தனக்குக் கிடைக்கும் பொருட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தைமூரிடம் இருந்தது. இதன் காரணமாக பல்கு நகரத்தில் வணிகர்கள், தன் இனப் பழங்குடியினர், இசுலாமிய மதகுருமார்கள், உயர்குடியினர் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோரைத் தனது ஆதரவாளர்களாகத் தைமூர் பெற்றார். இதற்கு நேர் எதிரானவர் உசைன் ஆவார். அவர் மக்களைக் கைவிட்டு விட்டார். மக்களிடம் இருந்து அதிகப்படியான வரிச் சட்டங்கள் மூலம் ஏராளமான பொருட்களை எடுத்துக் கொண்டார். சுயநலத்துடன் அந்த வரிப்பணத்தை நுட்பமான கட்டடங்கள் கட்டுவதில் செலவழித்தார்.[4]:41–2 1370ஆம் ஆண்டு வாக்கில் உசைன் தைமூரிடம் சரணடைந்தார். பிறகு கொல்லப்பட்டார். இதன் காரணமாக அதிகாரபூர்வமாக பல்கு நகரத்தின் ஆட்சியாளராகத் தைமூர் ஆட்சி செய்தார். உசைனின் மனைவியாகிய சராய் முல்க்கை மணந்து கொண்டார். உசைனின் மனைவி செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார். இதன் காரணமாகச் சகதாயி பழங்குடியினத்தின் ஏகாதிபத்திய ஆட்சியாளராகத் தைமூர் உருவானார்.[4]

ஆட்சியை நியாயப்படுத்துதல் தொகு

மங்கோலியப் பேரரசு மற்றும் இசுலாமிய உலகம் ஆகிய இரண்டையும் ஆள நினைத்த தைமூருக்கு இவரது துருக்கிய-மங்கோலியப் பாரம்பரியமானது வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ஆகிய இரண்டையுமே வழங்கியது. மங்கோலிய பாரம்பரியப் படி தைமூர், கான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்ளவோ அல்லது மங்கோலியப் பேரரசை ஆளவோ முடியாது. ஏனெனில், தைமூர் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் கிடையாது. எனவே தைமூர், சுயுர்கத்மிசு என்கிற ஒரு கைப்பாவை சகதாயி இன கானை பல்குவின் பெயரளவு ஆட்சியாளராக நியமித்தார். "செங்கிஸ் கானின் மூத்த மகன் சூச்சியைப் போல, செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பவராகத்" தன்னைக் காட்டிக் கொண்டார்.[49] மாறாகத் தளபதி என்ற பொருளுடைய அமீர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். திரான்சாக்சியானாவில் இருந்த சகதாயி ஆட்சியாளருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைப் போலக் காட்டிக் கொண்டார்.[37]:106 தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள தைமூர் குர்கான் என்ற பட்டத்தைக் கோரினார். இந்தப் பட்டத்தின் பொருள் இராஜ மாப்பிள்ளை என்பதாகும். செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றலான சராய் முல்க் கனும் என்கிற இளவரசியை மணந்து கொண்ட பிறகு இவர் இவ்வாறு கோரினார்.[50]

கான் என்ற பட்டத்தை எவ்வாறு பயன்படுத்த முடியாதோ அதே போல இசுலாமிய உலகின் தலைமைப் பட்டமான கலீபா என்ற பட்டத்தையும் தைமூரால் பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில், அந்தப் பட்டமானது முகம்மது நபியின் பழங்குடியினமான குறைசி இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஒரு பட்டம் ஆகும். இந்தச் சவால்களை எதிர் கொள்ள தைமூர் கட்டுக் கதையையும், தான் கடவுளால் நியமிக்கப்பட்ட "அமானுஷ்ய தனித்துவ சக்தி" என்ற தோற்றத்தையும் உருவாக்கினார்.[51] சில நேரங்களில் அலீயின் ஆன்மீக வழித்தோன்றல் எனத் தன்னைக் குறிப்பிட்டார். இவ்வாறாக, செங்கிஸ் கான் மற்றும் குறைசி ஆகிய இரு பக்கங்களில் இருந்தும் தான் தோன்றியதாக ஒரு முறைமையை ஏற்படுத்தினார்.[52]

நாடு விரிவடைந்த காலம் தொகு

 
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர்கெஞ்ச் நகரத்தை தைமூர் முற்றுகை இடுதல்.

தைமூர் தனது வாழ்க்கையில் அடுத்த 35 ஆண்டுகளில் பல்வேறு போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாட்டின் மையப் பகுதியில் எதிரிகளை அடி பணிய வைத்ததன் மூலம் தனது ஆட்சியை நிலை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த அயல் நாட்டவரின் நிலங்கள் மீது அத்து மீறியதன் மூலம் தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இவர் மேற்கொண்ட படையெடுப்புகள் காசுப்பியன் கடலுக்கு அருகில் இருந்த நிலங்கள் மற்றும், உரால் மற்றும் வோல்கா ஆறுகளின் கரைகளுக்கு இவரைக் கொண்டு சென்றது. தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இவர் மேற்கொண்ட படையெடுப்புகள் பாரசீகத்திலிருந்த கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இவற்றுள் பாகுதாது, கர்பலா மற்றும் வடக்கு ஈராக் ஆகியவையும் அடங்கும்.[48]

தைமூர் எதிர் கொண்டவர்களில் வல்லமை மிக்க எதிரியாக இருந்தவர் மற்றொரு மங்கோலிய ஆட்சியாளரான தோக்தமிசு ஆவார். இவர் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார். தைமூரின் அரசவையில் அகதியாக வந்த தோக்தமிசு கிழக்கு கிப்சாக் மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகிய இரு நாடுகளுக்கும் மன்னன் ஆனார். அரியணைக்கு வந்த பிறகு கவரிசம் மற்றும் அசர்பைஜான் ஆகிய பகுதிகளை யார் வைத்துக் கொள்வது என்கிற பிரச்சனையில் தோக்தமிசு தைமூருடன் வாதிட்டார்.[48] இருந்த போதிலும், உருசியர்களுக்கு எதிரான போரில் தைமூர் தோக்தமிசை ஆதரித்தார். 1382ஆம் ஆண்டு தோக்தமிசு மாசுகோவி நாட்டின் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி மாசுகோ நகரத்தை எரித்தார்.[53]

உருசிய மரபுவழித் திருச்சபை பாரம்பரியக் கூற்றுப் படி இந்நிகழ்வுக்குப் பிறகு 1395ஆம் ஆண்டு ரியாசன் வேள் பகுதியின் எல்லைகளை அடைந்த தைமூர் எலெத்சு நகரத்தைக் கைப்பற்றினார். மாசுகோவை நோக்கி முன்னேறத் தொடங்கினார். பெரிய இளவரசரான மாசுகோவின் முதலாம் வாசிலி தன் இராணுவத்துடன் கோலம்னா நோக்கிச் சென்றார். ஒகா ஆற்றங்கரையில் ஓய்வெடுக்க இராணுவத்தை நிறுத்தினார். உருசிய கிறித்தவ மதகுருமார்கள் புகழ்பெற்ற விளாதிமிர் சின்னமான தியோதோகோசை விளாதிமிரிலிருந்து மாசுகோவுக்குக் கொண்டு வந்தனர். இந்தச் சின்னம் கொண்டு வரப்பட்ட போது வழி நெடுகிலும் மக்கள் மண்டியிட்டு: "கடவுளின் அன்னையே, உருசிய நிலத்தைக் காப்பாற்று" என்று வழிபட்டனர். திடீரென தைமூரின் இராணுவங்கள் பின் வாங்கின. 26 ஆகத்து அன்று தைமூரிடமிருந்து உருசிய நிலத்தை அதிசயமாகக் காத்த நிகழ்வின் நினைவாக உருசிய மரபு வழி திருச்சபையின் முக்கியமான நாளாகிய, கடவுளின் மிகுந்த புனித அன்னையின் விளாதிமிர் சின்னத்தின் சந்திப்பிற்கு, மரியாதை செய்யும் விதமாக அனைத்து உருசியர்களுக்குமான முக்கிய விழாவான 26 ஆகத்து விழா உருவாக்கப்பட்டது.[54]

பாரசீகத்தை வெல்லுதல் தொகு

 
சியார்சியாவிற்கு எதிராகப் படையெடுக்குமாறு தைமூர் ஆணையிடுகிறார்.
 
1396ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் சியார்சியாவின் நெர்கெஸ் பட்டணத்தில் தப்பிப் பிழைத்தவர்களைத் தைமூரின் இராணுவம் தாக்குகிறது.

1335ஆம் ஆண்டு ஈல்கானரசின் ஆட்சியாளரான அபு சயித்தின் இறப்பிற்குப் பிறகு பாரசீகத்தில் ஓர் அதிகார வெற்றிடம் ஏற்பட்டது. இறுதியாகப் பாரசீகமானது முசாபரியர், கர்தியர், எரெதினியர், சோபனியர், இஞ்சுயர், சலயிரியர் மற்றும் சர்பதர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1383ஆம் ஆண்டு தனது நீண்ட இராணுவப் படையெடுப்பைப் பாரசீகத்தின் மீது தைமூர் மேற்கொண்டார். 1381ஆம் ஆண்டிலேயே சர்பதர் அரசமரபின் கவாஜா மசூத் சரணடைந்த காரணத்தால் பாரசீக குராசான் பகுதியைத் தைமூர் ஏற்கனவே ஆட்சி செய்து கொண்டிருந்தார். தைமூர் தனது பாரசீகப் படையெடுப்பைக் கர்திய அரச மரபின் தலைநகரான ஹெறாத்தில் இருந்து தொடங்கினார். சரணடைய மறுத்த போது அந்நகரம் இடிக்கப்பட்டது. நகர மக்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர். 1415ஆம் ஆண்டு வாக்கில் சாருக் மீண்டும் நகரத்தைக் கட்ட ஆணையிடும் வரை அது இடிபாடுகளாகவே இருந்தது.[55] பிறகு கிளர்ந்தெழுந்த காந்தாரத்தைப் பிடிப்பதற்காகத் தன்னுடைய தளபதி ஒருவரைத் தைமூர் அனுப்பினார். ஹெறாத்தைக் கைப்பற்றியதற்குப் பிறகு கர்திய இராச்சியமானது சரணடைந்தது. தைமூருக்குக் கப்பம் கட்டுபவர்களாக மாறியது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 1379ஆம் ஆண்டு தைமூரின் மகனான மீரான் ஷா இந்த இராச்சியத்தைப் பேரரசில் இணைத்தார்.[56]

பிறகு மேற்கு நோக்கி சக்ரோசு மலைத்தொடரைக் கைப்பற்ற மாசாந்தரான் மாகாணம் வழியாகத் தைமூர் பயணித்தார். பாரசீகத்தின் வடக்குப் பகுதியில் தைமூர் பயணித்த போது தெகுரான் பட்டணத்தைக் கைப்பற்றினார். அந்நகரம் சரணடைந்தது. அதன் காரணமாகக் கருணையுடன் நடத்தப்பட்டது. 1384ஆம் ஆண்டு தைமூர் சுல்தானியே நகரை முற்றுகையிட்டார். ஓர் ஆண்டிற்குப் பிறகு குராசான் பகுதியானது கிளர்ந்தெழுந்தது. இதன் காரணமாக இசுபிசர் நகரைத் தைமூர் அழித்தார். கைது செய்யப்பட்டவர்கள் சுவர்களில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு மிரபனிய அரசமரபின் கீழிருந்த சிசுதான் இராச்சியமானது அழிக்கப்பட்டது. அதன் தலை நகரமான சரஞ்ச் அழிக்கப்பட்டது. பிறகு தனது தலைநகரமான சமர்கந்திற்குத் தைமூர் திரும்பினார். அங்கு சியார்சியா மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகிய நாடுகளின் மீதான படையெடுப்பிற்குத் திட்டம் தீட்டினார். 1386ஆம் ஆண்டு தைமூர் மாசாந்தரான் மாகாணம் வழியாகப் பயணித்தார். கடந்த முறை சக்ரோசு பகுதியைக் கைப்பற்றும் போது எவ்வழியே சென்றாரோ அவ்வழியிலேயே தற்போதும் பயணித்தார். சுல்தானியே நகரத்திற்கு அருகில் சென்றார். இந்நகரம் இவரால் ஏற்கனவே வெல்லப்பட்டிருந்தது. பிறகு வடக்கு நோக்கித் திரும்பி தப்ரீசைச் சிறிய எதிர்ப்பைச் சமாளித்துக் கைப்பற்றினார். மரகா நகரமும் கைப்பற்றப்பட்டது.[57] அம்மக்கள் மீது கடும் வரிகளை விதிக்கத் தைமூர் ஆணையிட்டார். வரியானது அதில் அகாவால் வசூலிக்கப்பட்டது. சுல்தானியே நகரத்தின் மீதும் அதிகாரம் உள்ளவராக அதில் அகா இருந்தார். பிற்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் காரணமாகச் சந்தேகமடைந்த தைமூர் அவரைக் கொன்றார்.[58]

பிறகு வடக்கு நோக்கித் திரும்பிய இவர் தனது சியார்சியா மற்றும் தங்க நாடோடிக் கூட்டப் படையெடுப்புகளைத் தொடங்கினார். முழு இராணுவத்தையும் கொண்டு பாரசீகத்தின் மீது நடத்தப்பட்ட படையெடுப்பானது நிறுத்தி வைக்கப்பட்டது. திரும்பி வந்த போது பாரசீகத்தில் கைப்பற்றப்பட்ட நகரங்கள் மற்றும் நிலங்களைத் தனது தளபதிகள் நல்ல முறையில் பாதுகாத்திருப்பதை உணர்ந்தார்.[59] பல நகரங்கள் கிளர்ந்தெழுந்தன. எனினும், மீரான் ஷா கிளர்ந்தெழுந்த கப்பம் கட்டிய அரசமரபுகளை வலுக்கட்டாயமாகப் பேரரசில் இணைத்தார். இந்த நிகழ்வுகளின் போது மீரான் ஷா அரசப் பிரதிநிதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எஞ்சிய பாரசீகத்தை, முக்கியமாக இரண்டு முக்கியத் தெற்கு நகரங்களான இசுபகான் மற்றும் சீராசு ஆகியவற்றைக் கைப்பற்ற முன்னேறினார். 1387ஆம் ஆண்டு இசுபகானுக்குத் தைமூர் தனது இராணுவத்துடன் வந்த போது அந்த நகரம் உடனடியாகச் சரணடைந்தது. மற்ற சரணடைந்த நகரங்களைப் போலவே இந்த நகரமும் கருணையுடன் (ஹெறாத் தவிர) நடத்தப்பட்டது.[60] தைமூரின் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் இவரது சில படைவீரர்களைக் கொன்றதன் மூலம் இசுபகான் நகரமானது தைமூரின் வரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. இதன் காரணமாக அந்நகர மக்களைக் கொல்லத் தைமூர் உத்தரவிட்டார். இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1 முதல் 2 லட்சம் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.[61] இந்தப் படுகொலைகளை நேரில் கண்ட ஒருவர் ஒவ்வொரு கோபுரமும் 1,500 தலைகளைக் கொண்டவாறு 28 கோபுரங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.[62] "பட்டணங்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பயங்கரவாதம்...தைமூரின் அபாயத்தின் ஒரு பொதுவான பகுதி" என இது விளக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்டு இரத்தம் சிந்துவது தடுக்கப்படுவதாகத் தைமூர் கருதினார். படு கொலைகள் தேர்ந்தெடுத்துச் செய்யப்பட்டன. கலைஞர்கள் மற்றும் படித்தவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[63] இக்கொள்கைகள் அடுத்த பெரிய பாரசீகப் படையெடுப்பாளரான நாதிர் ஷாவின் நடவடிக்கைகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.[64]

1392இல் தனது ஐந்து ஆண்டு காலப் படையெடுப்பை மேற்கு நோக்கித் தைமூர் தொடங்கினார். பாரசீக குர்திஸ்தான் தாக்கப்பட்டது.[65][66][67] 1393ஆம் ஆண்டு சரணடைந்த பிறகு சீராசு நகரமானது கைப்பற்றப்பட்டது. முசாபரியர் தைமூருக்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டனர். எனினும், இளவரசர் ஷா மன்சூர் கிளர்ச்சி செய்தார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். முசபரியரின் நாடானது தைமூரின் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பிறகு சிறிது காலத்திலேயே சியார்சியா அழிவுக்கு உட்படுத்தப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டம் சியார்சியாவைப் பயன்படுத்தி வடக்கு ஈரானை மிரட்டக் கூடாது என்பதன் காரணமாகவே சியார்சியா அழிவுக்கு உட்படுத்தப்பட்டது.[68] அதே ஆண்டு பகுதாதுவைத் தைமூர் ஆகத்து மாதத்தில் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றினார். தாக்குதலுக்காக சீராசு நகரத்திலிருந்து எட்டே நாட்களில் அணி வகுத்து பகுதாதுவை இவரது இராணுவம் அடைந்தது. சுல்தான் அகமது சலயிர் சிரியாவுக்குத் தப்பி ஓடினார். அங்கு அடிமை வம்ச சுல்தானான புர்குக் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்தார். தைமூரின் தூதுவர்களைக் கொன்றார். சர்பதர் இளவரசனான கவாஜா மசூதைப் பகுதாதுவின் அரியணையில் வைத்து விட்டுத் தைமூர் கிளம்பினார். எனினும், அகமது சலயிர் திரும்பி வந்த போது கவாஜா மசூத் துரத்தப்பட்டார். அகமது மக்கள் மத்தியில் விருப்பத்தைப் பெற்றவராக இல்லை. எனினும், காரா கோயுன்லு நாட்டின் காரா யூசுப்பிடமிருந்து சில உதவிகளை அகமது சலயிர் பெற்றார். 1399ஆம் ஆண்டு அகமது சலயிர் மீண்டும் தப்பி ஓடினார். இந்த முறை உதுமானியர்களிடம் சென்றடைந்தார்.[69]

தோக்தமிசு-தைமூர் போர் தொகு

அதே நேரத்தில் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய தோக்தமிசு தன்னுடைய புரவலர் தைமூருக்கு எதிராகத் திரும்பினார். 1385ஆம் ஆண்டு அசர்பைஜான் மீது படையெடுத்தார். தைமூரால் பதிலடி கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தோக்தமிசு-தைமூர் போர் ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் தைமூர் கோன்டுர்ச்சா ஆற்று யுத்தத்தில் வெற்றி பெற்றார். இந்த யுத்தத்திற்குப் பிறகு தோக்தமிசு மற்றும் அவரது இராணுவத்தில் சிலர் தப்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். தோக்தமிசின் ஆரம்ப காலத் தோல்விக்குப் பிறகு தோக்தமிசின் பகுதிகளுக்கு வடக்கில் இருந்த மாசுகோவி மீது தைமூர் படையெடுத்தார். தைமூரின் இராணுவம் ரியாசான் நகரத்தை எரித்தது. மாசுகோவை நோக்கி முன்னேறியது. இந்நேரத்தில் தெற்குப் பகுதியில் தன்னுடைய படையெடுப்பைத் தோக்தமிசு மீண்டும் ஆரம்பித்தார். ஒகா ஆற்றை அடையும் முன்னர் இந்தத் தாக்குதல் காரணமாக தைமூர் தனது தாக்குதலைக் கைவிட்டு விட்டுத் திரும்பினார்.[70]

தோக்தமிசுக்கு எதிரான இந்தப் போரின் ஆரம்ப கட்டத்தில் தைமூர் 1,00,000 போர் வீரர்களுக்கு மேல் கொண்ட இராணுவத்தை வடக்கு நோக்கிக் கூட்டிச் சென்றார். புல்வெளிப் பகுதிகளுக்குள் சுமார் 700 மைல்களுக்குப் பயணித்தார். பிறகு மேற்கு நோக்கி 1,000 மைல்களுக்குப் பயணித்தார். தன் இராணுவத்தினர் 10 மைல்கள் அகலமுள்ள நிலையாக இருந்தவாறு முன்னேறினார். இவ்வாறு முன்னேறிய போது தைமூரின் இராணுவமானது தங்களது நாட்டை விட்டு வடக்கு நோக்கி தொலை தூரத்திற்குப் பயணித்திருந்தது. அங்கு கோடை கால நாட்கள் மிக நீண்டதாக இருந்தன. இதன் காரணமாக தொழுகைக்கு அதிக நேரம் பிடிப்பதாகத் தைமூரின் இசுலாமியப் போர் வீரர்கள் முறையிட்டனர். ஓரன்பர்க் பகுதியில் உள்ள வோல்கா ஆற்றின் கிழக்குக் கரையில் அணைக்கப்பட்ட தோக்தமிசின் இராணுவமானது 1391ஆம் ஆண்டு கோன்டுர்ச்சா ஆற்று யுத்தத்தில் அழிக்கப்பட்டது.

இந்தப் போரின் இரண்டாவது கட்டத்தில் தனது எதிரிக்கு எதிராக தைமூர் வேறு ஒரு வழியைப் பயன்படுத்தினார். காக்கேசியா பகுதி வழியாகச் சென்று தோக்தமிசின் நாட்டின் மீது படையெடுத்தார். 1395ஆம் ஆண்டு தெரெக் ஆற்று யுத்தத்தில் தைமூர் தோக்தமிசைத் தோற்கடித்தார். இவ்வாறாக இரு மன்னர்களுக்கும் இடையிலான போரானது முடிவுக்கு வந்தது. போருக்குப் பிறகு தன்னுடைய அதிகாரம் அல்லது கௌரவத்தைத் தோக்தமிசால் மீண்டும் பெற இயலவில்லை. உருசியாவின் தியூமன் என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் ஒரு தசாப்தத்திற்குப் பிறகுத் தோக்தமிசு கொல்லப்பட்டார். தைமூரின் இப்படையெடுப்புகளின் போது இவரது இராணுவம் தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைநகரமான சராய், மற்றும் ஆசுத்திரகான் ஆகிய நகரங்களை அழித்தது. இறுதியாகத் தங்க நாடோடிக் கூட்டத்தின் பட்டுப் பாதை சிதறுண்டது. தைமூரிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு தங்க நாடோடிக் கூட்டத்தால் அதிகாரத்தைப் பெற இயலவில்லை.

இசுமாயிலிகள் தொகு

1393ஆம் ஆண்டு மே மாதம் தைமூரின் இராணுவம் அஞ்சுதான் பகுதி மீது படையெடுத்தது. இதன் காரணமாக அந்த இசுமாயிலி கிராமம் முடக்கப்பட்டது. இதற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர் தான் மாசாந்தரன் மாகாணத்திலுள்ள இசுமாயிலிகள் மீது தைமூர் தாக்குதல் நடத்தியிருந்தார். அந்த கிராமமானது தாக்குதலுக்குத் தயாராகி இருந்தது. அந்த கிராமத்தின் கோட்டை மற்றும் சுரங்கப் பாதைகள் மூலம் இது நமக்குத் தெரிய வருகிறது. இதற்கெல்லாம் அசராத தைமூரின் போர் வீரர்கள் கால்வாய் வெட்டிச் சுரங்களுக்குள் வெள்ளம் ஏற்படுத்தினர். எதற்காக இந்தக் கிராமத்தைத் தைமூர் தாக்கினார் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. தைமூரின் மத ரீதியான தூண்டுதல்கள் மற்றும் தெய்வீக எண்ணத்தை நடத்திக் கொடுப்பவர் தான் ஆகிய எண்ணங்கள் இவரது இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.[71] பாரசீக வரலாற்றாளர் குவந்தமிர், பாரசீக ஈராக்கில் அரசியல் ரீதியாக மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இசுமாயிலிகளின் நிலை உயர்ந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். இப்பகுதியில் இசுமாயிலிகள் வளர்வது அங்கிருந்த உள்ளூர் மக்களின் ஒரு குழுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் குவந்தமிர் எழுதியதாவது, இந்த உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து தைமூரிடம் புகார் செய்தனர். இப்புகாரே இசுமாயிலிகள் மீது தைமூர் தாக்குதல் நடத்தத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[71]

துக்ளக் அரசமரபுக்கு எதிரான படையெடுப்பு தொகு

 
1397-1398ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் தில்லி சுல்தானாகிய நசீருதின் மகமுத் துக்ளக்கைத் தைமூர் தோற்கடித்தல். வரைபட ஆண்டு 1595- 1600.

1398ஆம் ஆண்டு தைமூர் வட இந்தியா மீது படையெடுத்தார். தில்லி சுல்தானகத்தைத் தாக்கினார். அந்நேரத்தில் தில்லியானது துக்ளக் அரசமரபின் சுல்தானான நசீருதீன் மகமூது ஷா துக்ளக்கால் ஆளப்பட்டு வந்தது. 1398ஆம் ஆண்டு செப்தெம்பர் 30ஆம் தேதி சிந்து ஆற்றைத் தைமூர் கடந்தார். துலம்பா பட்டணத்தைச் சூறையாடினார். அங்கு வாழ்ந்த மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். பிறகு முல்தான் நோக்கி முன்னேறிய தைமூர் அக்டோபர் மாதத்தில் அந்நகரைக் கைப்பற்றினார்.[72] தைமூரின் படையெடுப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு காணப்படவில்லை. பெரும்பாலான இந்திய உயர்குடியினர் சண்டையிடாமலேயே சரணடைந்தனர். எனினும், இராசபுத்திரர்கள் மற்றும் முசுலிம்கள் இணைந்த இராணுவமானது பத்னேர் நகரத்தில்[73] தைமூரை எதிர்த்தது. இந்த இராணுவத்திற்கு ராவ் துல் சந்த் தலைமை தாங்கினார். ஆரம்பத்தில் தைமூரை எதிர்த்துச் சண்டையிட்ட ராவ் பிறகு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டதால் சரணடைய முயற்சித்தார். நகரச் சுவர்களுக்கு வெளியே ராவை அவரது சகோதரர் நிறுத்தி விட்டு வாயில் கதவுகளை அடைத்தார். ராவ் பின்னர் தைமூரால் கொல்லப்பட்டார். பிறகு நகரத்தின் கோட்டை வீரர்கள் தைமூரை எதிர்த்துப் போரிட்டனர். கடைசி மனிதன் வரை ஒவ்வொருவரும் தைமூரால் கொல்லப்பட்டனர். பத்னேர் நகரமானது சூறையாடப்பட்டு எரித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.[74]

தில்லியை நோக்கி அணி வகுத்துச் சென்ற போது ஜாட் விவசாயிகள் தைமூருக்கு எதிர்ப்பைக் கொடுத்தனர். அவர்கள் வண்டிகளைக் கொள்ளையடித்து விட்டு காடுகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 2,000 ஜாட்களைக் கொன்ற தைமூர், மேலும் பலரை சிறைப்பிடித்தார்.[74][75] ஆனால் தில்லியிலிருந்த சுல்தானகமானது தைமூரின் முன்னேற்றத்தைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.[76][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

தில்லியைக் கைப்பற்றுதல் (1398) தொகு

17 திசம்பர் 1398ஆம் ஆண்டு யுத்தமானது நடைபெற்றது. சுல்தான் நசீருதீன் மகமூது ஷா துக்ளக் மற்றும் மல்லு இக்பாலின் இராணுவமானது[77] யானைப் படையைக் கொண்டிருந்தது. யானைகள் வலைக் கவசச் சங்கிலி ஆடையுடனும், தந்தத்தில் விஷம் தடவப்பட்டும் கொண்டு வரப்பட்டன.[4]:267 தைமூரின் தாதர் படைகள் யனைகளைக் கண்டு அஞ்சின. தங்களது அணி வகுப்பிற்கு முன் நின்ற நிலப் பகுதியில் அகழிகளைத் தோண்டத் தனது வீரர்களுக்குத் தைமூர் ஆணையிட்டார். இவரிடமிருந்த ஒட்டகங்களில் அவை எந்த அளவுக்குத் தாங்க முடியுமோ அந்த அளவிற்கு மரக் கட்டைகளும், வைக்கோலும் ஏற்றப்பட்டன. யானைகள் முன்னேறிய போது தைமூர் வைக்கோலில் நெருப்பைப் பற்ற வைக்கக் கூறினார். ஒட்டகங்களுக்கு முன்னால் நீட்டியிருக்குமாறு இரும்புக் குச்சிகளும் கட்டப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஒட்டகங்கள் யானைகளை நோக்கி வேகமாக வலியுடன் கத்திக் கொண்டு ஒடி வந்தன. யானைகள் சீக்கிரமே பதட்டம் அடைந்ததை தைமூர் புரிந்து கொண்டார். முதுகில் எரிந்து கொண்டிருந்த நெருப்புடன் ஒட்டகங்கள் தங்களை நோக்கி ஓடி வரும் விசித்திரமான காட்சியைக் கண்ட யானைகள் திரும்பி ஓட ஆரம்பித்தன. இதன் காரணமாக தங்களது இராணுவ வீரர்களையே மிதித்துக் கொன்றன. நசீருதீன் மகமூது ஷா துக்ளக்கின் படைகளில் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தைத் தைமூர் பயன்படுத்திக் கொண்டார். எளிதான வெற்றியைப் பெற்றார். தன்னுடைய எஞ்சிய படைகளுடன் நசீருதீன் ஷா துக்ளக் தப்பித்து ஓடினார். தில்லி சூறையாடப்பட்டு சிதிலமாக்கப்பட்டது. தில்லி யுத்தத்திற்கு முன்னர் தைமூர் கைதிகளில் 1,00,000 பேரைக் கொன்றார்.[23]

தில்லி சுல்தானகத்தினைக் கைப்பற்றிய நிகழ்வானது தைமூரின் பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். ஏனெனில், அந்நேரத்தில் உலகத்தில் இருந்த செல்வ வளம் மிக்க நகரங்களில் தில்லியும் ஒன்றாகும். தில்லி தைமூரின் இராணுவத்திடம் வீழ்ந்த பிறகு, துருக்கிய-மங்கோலியர்களுக்கு எதிராகத் தில்லி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதை ஒடுக்குவதற்காக தில்லியின் சுவர்களுக்குள் ஒரு குருதி தோய்ந்த படு கொலை நடத்தப்பட்டது. தில்லிக்குள் 3 நாட்கள் நடந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு மக்களின் சிதைந்த உடல்களால் துர் நாற்றம் வீசியதாகக் கூறப்பட்டது. அவர்களின் தலைகளைக் கொண்டு கோபுரம் அமைக்கப்பட்டது. தைமூரின் வீரர்களால் இறந்த மக்களின் உடல்கள் பறவைகளுக்கு உணவாக விடப்பட்டன. தில்லி மீதான தைமூரின் படையெடுப்பு மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட அழிவானது இன்றும் இந்தியாவில் ஒரு பெரும் குழப்பமாக உட்கொண்டு கொண்டு இருக்கிறது. இந்த பெரிய இழப்பைச் சந்தித்த தில்லி நகரமானது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு அதிலிருந்து மீளவில்லை.[4]:269–274

லெவண்ட் படையெடுப்புகள் தொகு

 
எகிப்தின் அடிமை வம்சச் சுல்தானாகிய நசிருதீன் பரஜை தைமூர் தோற்கடித்தல்.
 
தைமூரால் கைதியாக முதலாம் பயேசித் வைக்கப்பட்டுள்ளதை விளக்கும் 19ஆம் நூற்றாண்டு ஓவியம்.

1399ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னர் உதுமானியப் பேரரசின் சுல்தானாகிய முதலாம் பயேசித் மற்றும் எகிப்திய அடிமை வம்சச் சுல்தானாகிய நசீருதீன் பரச் ஆகியோருக்கு எதிராக தைமூர் போரை ஆரம்பித்தார். அனத்தோலியாவில் இருந்த துருக்குமேனிய மற்றும் இசுலாமிய ஆட்சியாளர்களின் பகுதிகளைத் தன்னுடைய பேரரசில் தைமூர் இணைக்க ஆரம்பித்தார். துருக்குமேனிய ஆட்சியாளர்களின் தலைவனாகத் தன்னைக் கோரிய தைமூருக்குப் பின்னால் துருக்குமேனிய ஆட்சியாளர்கள் தஞ்சமடைந்தனர்.

1400ஆம் ஆண்டு தைமூர் ஆர்மீனியா மற்றும் சியார்சியா மீது படையெடுத்தார். போருக்குப் பின்னர் உயிருடன் வாழ்ந்த உள்ளூர் மக்களில் சுமார் 60,000க்கும் மேற்பட்டவர்களை அடிமையாகத் தைமூர் சிறைப் பிடித்தார். பல மாவட்டங்களில் மக்கள் தொகை குறைந்தது.[78] மேலும், ஆசியா மைனரில் இருந்த சிவாசு நகரமும் சூறையாடப்பட்டது.[79]

பிறகு தனது கவனத்தைச் சிரியா மீது தைமூர் திருப்பினார். அலெப்போ[80] மற்றும் திமிஷ்கு[81] ஆகிய நகரங்கள் சூறையாடப்பட்டன. கலைஞர்கள் தவிர மற்ற நகர மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். கலைஞர்கள் சமர்கந்திற்கு அனுப்பப்பட்டனர். திமிஷ்குவின் மக்களைத் தான் படு கொலை செய்ததற்குத் தைமூர் கூறிய காரணங்களானவை கலீபாவான முதலாம் முஆவியா, ஹசன் இபின் அலியைக் கொன்றது மற்றும் முதலாம் யசீத், உசைன் இபின் அலியைக் கொன்றது ஆகியவையாகும்.

1401ஆம் ஆண்டு சூன் மாதம் பகுதாது மீது தைமூர் படையெடுத்தார். நகரம் கைப்பற்றப்பட்ட பிறகு 20,000 மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு படை வீரனும் குறைந்தது இரண்டு துண்டிக்கப்பட்ட தலையையாவது தன்னிடம் காண்பிக்க வேண்டும் என்று தைமூர் ஆணையிட்டார். தைமூரின் படை வீரர்கள் கொல்லப்பட ஆண்கள் கிடைக்காத போது படையெடுப்பில் முன்பு கைது செய்யப்பட்ட கைதிகளைக் கொன்றனர். கொல்லப்பட கைதிகள் கிடைக்காத போது பலர் தங்களது சொந்த மனைவிகளைக் கொன்றனர்.[82]

அனத்தோலியப் படையெடுப்பு தொகு

மேற்குறிப்பிட்ட யுத்தம் நடைபெறுவதற்கு இடையில் சில ஆண்டுகளுக்கு தைமூர் மற்றும் பயேசித் இடையில் அவமதிக்கும் கடிதங்கள் பரிமாறப்பட்டன. இரண்டு மன்னர்களும் தங்களது பாணியில் ஒருவரையொருவர் அவமதித்துக் கொண்டனர். ஒரு மன்னனாகப் பயேசித்தின் நிலையைக் குறைத்து கூறுதல் மற்றும் அவரது இராணுவ வெற்றிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுதல் ஆகிய அவமதிப்புகளைத் தைமூர் செய்தார்.

உதுமானிய சுல்தானுக்கு அனுப்பப்பட்ட தைமூரின் கடிதங்களில் இருந்து ஒரு பகுதி பின்வருமாறு:

"என்னை நம்பு, நீ ஒரு பிஸ்மயர் எறும்பைத் தவிர வேறு எதுவும் கிடையாது. யானைகளுடன் சண்டையிட விரும்பாதே, அவற்றின் காலுக்கடியில் உன்னை நசுக்கி விடும். உன்னைப் போன்ற ஒரு சிறிய இளவரசன் எங்களுக்குச் சமமா? ஒரு போதும் தீர்மானம் எடுத்து விட்டுப் பேசாத என்னைப் போன்ற ஒரு துருக்குமேனியனிடம் உனது தற்பெருமைகள் அசாதாரணமானவையாக இல்லை. எங்களது ஆலோசனைகளைக் கேட்காவிட்டால் நீ வருத்தப்படுவாய்".[83]

இறுதியாகத் தைமூர் அனத்தோலியா மீது படையெடுத்தார். 20 சூலை 1402 அன்று அங்காரா யுத்தத்தில் பயேசித்தைத் தோற்கடித்தார். பயேசித் கைது செய்யப்பட்டார். கைதில் இருக்கும் போது பயேசித் இறந்தார். இந்நிகழ்வு ஏற்படுத்திய வெற்றிடம் காரணமாக உதுமானிய உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளுக்கு நடந்தது. பயேசித் மற்றும் உதுமானியப் பேரரசைத் தாக்கியதன் நோக்கமாகத் தைமூர் கூறியதாவது, செல்யூக் அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்துவதே ஆகும். அனத்தோலியாவை ஆட்சி செய்யும் உரிமையானது செல்யூக் அரசமரபினருக்கே இருந்ததாகத் தைமூர் நினைத்தார். ஏனெனில், மங்கோலியப் படையெடுப்பாளர்களால் செல்யூக் அரசமரபினருக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது. செங்கிஸ் கான் வழித்தோன்றல்களின் மரபில் தைமூருக்கு இருந்த ஆர்வத்தை இந்நிகழ்வு மீண்டும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.[சான்று தேவை]

திசம்பர் 1402ஆம் ஆண்டு இசுமைர்னா நகரத்தை முற்றுகையிட்ட தைமூர் அதனைக் கைப்பற்றினார். அந்நகரம் கிறித்தவக் குதிரை வீரர்களின் கோட்டையாக இருந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு தைமூர் தன்னை காசி அல்லது "இசுலாமின் போர் வீரன்" என்று அழைத்துக் கொண்டார். பின்னர் அந்நகரத்தில் தைமூரின் படையினர் படு கொலைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.[84][85][86][87]

பெப்பிரவரி 1402ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கல்லிபோலி ஒப்பந்தம் காரணமாக செனோவா மற்றும் வெனிசு நகரத்தினர் மீது தைமூருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ஏனெனில், அவர்களது கப்பல்கள் திரேசிற்கு உதுமானிய இராணுவத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றன. ஐக்கிய இராச்சியத்தின் பிரபு கின்ரோசு தனது உதுமானிய நூற்றாண்டுகள் எனும் நூலில், தங்களால் கையாள முடியாத எதிரிகளை விட தங்களால் கையாளக் கூடிய எதிரிகளை இத்தாலியர்கள் தேர்ந்தெடுத்ததாக இது குறித்து எழுதினார்.[சான்று தேவை]

உதுமானிய உள்நாட்டுப் போரின் ஆரம்பத்தில் முதலாம் பயேசித்தின் மகன் மெகமெது செலேபி தைமூரிடம் கப்பம் கட்டுபவராகச் செயல்பட்டார். மற்றவர்களைப் போல் இல்லாமல் தைமூரின் பெயர் கொண்ட நாணயங்களை அச்சிட்டார். நாணயங்களில் "தெமுர் கான் குர்கான்" (تيمور خان كركان‎) எனத் தைமூரையும், "மெகமெது பின் பயேசித் கான்" (محمد بن بايزيد خان) என தன்னைப் பற்றியும் அச்சிட்டார்.[88][89] உலுபத் யுத்தத்திற்குப் பிறகு புர்சா நகரை மெகமெது கைப்பற்றியிருந்தார். அந்த நகரைத் தான் கைப்பற்றியதை நியாயப்படுத்துவதற்காகத் தைமூரின் பெயரையும் நாணயத்தில் அவர் அச்சிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உரூம் நகரத்தில் மெகமெது தன்னை நிறுவிக் கொண்ட அதே நேரத்தில் தைமூர் நடு ஆசியாவிற்குத் திரும்புவதற்காகத் தனது ஏற்பாடுகளைச் செய்தார். இதற்குப் பிறகு அனத்தோலியாவின் ஆட்சி நிலையை மாற்ற எந்த விதமான முயற்சிகளையும் தைமூர் எடுக்கவில்லை.[88]

அனத்தோலியாவில் தைமூர் இருந்த அதே நேரத்தில் 1402ஆம் ஆண்டு காரா யூசுப் பகுதாதுவைத் தாக்கினார். அதனைக் கைப்பற்றினார். தைமூர் பாரசீகத்திற்குத் திரும்பினார். பகுதாதுவை மீண்டும் வெல்லத் தனது பேரன் அபு பக்கிர் இபின் மீரான் ஷாவை அனுப்பினார். இவரது பேரன் பகுதாதுவுக்குச் சென்றார். பிறகு அருதவீல் நகரத்தில் சில காலத்தைத் தைமூர் கழித்தார். அங்கு சபாவியா சூபித்துவப் பிரிவின் தலைவரான அலி சபாவிக்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான கைதிகளைக் கொடுத்தார். இறுதியாக குராசான் பகுதிக்கு அணி வகுத்தார். பிறகு சமர்கந்திற்குச் சென்றார். அங்கு 9 மாதங்களைக் கழித்தார். கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். மங்கோலியா மற்றும் சீனா மீது படையெடுப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்.[90]

மிங் அரசமரபைத் தாக்க முயற்சிகள் தொகு

 
தைமூர் படையெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக சீனப் பெருஞ்சுவரில் சியாயு கணவாயிலிருந்த கோட்டையானது வலுவாக்கப்பட்டது.[91]
 
1405ஆம் ஆண்டு தைமூர் இறந்தபோது தைமூரியப் பேரரசு

1368ஆம் ஆண்டு வாக்கில் ஆன் சீனப் படைகள் சீனாவிலிருந்து மங்கோலியர்களை விரட்டியடித்தன. புதிய மிங் அரசமரபின் முதல் பேரரசர்களான கோங்வு பேரரசர் மற்றும் அவரது மகன் ஓங்லே பேரரசர் ஆகியோர் பல நடு ஆசிய நாடுகளைக் கப்பம் கட்ட வைத்தனர். மேலாட்சி செய்பவர் மற்றும் கப்பம் கட்டுபவர் உறவானது முறையே மிங் பேரரசு மற்றும் தைமூரிய அரசு ஆகியவற்றுக்கு இடையே நீண்ட நாட்களுக்கு நீடித்திருந்தது. 1394ஆம் ஆண்டு கோங்வுவின் தூதுவர்கள் தைமூரிடமும் ஒரு கடிதத்தை அளித்தனர். அக்கடிதத்தில் தைமூர் தங்கள் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தைக் கொண்டு வந்த பூ ஆன், குவோ சி மற்றும் லீயூ வெயி ஆகிய தூதர்கள் திரும்பிச் செல்லவிடப்படாமல் தடுக்கப்பட்டனர். கோங்வுவின் அடுத்த தூதரான சென் தெவென் (1397) மற்றும் ஓங்லேயின் முடிசூட்டலைத் தெரிவித்த குழுவும் இதை விட நல்ல விதமாக நடத்தப்படவில்லை.

இறுதியாகச் சீனா மீது படையெடுக்கத் தைமூர் திட்டமிட்டார். மங்கோலியாவில் எஞ்சியிருந்த மங்கோலியப் பழங்குடியினருடன் கூட்டணி ஏற்படுத்தினார். புகாரா வரை இருந்த அரசுகளுடன் கூட்டணி ஏற்படுத்தினார். எங்க் கான் தனது பேரன் ஒல்சே தெமுர் கானை அனுப்பி வைத்தார். ஒல்சே தெமுர் கான் மற்றொரு பெயரான "புயன்சிர் கான்" என்றும் அழைக்கப்படுகிறார். புயன்சிர் கான் தைமூரின் அரசவையில் இசுலாம் மதத்திற்கு மாறினார்.[92]

இறப்பு தொகு

தன்னுடைய யுத்தங்களை இளவேனிற் காலத்தில் நடத்தவே தைமூர் விரும்புவார். எனினும், சீனா மீது தனது குணத்திற்கு முரணாக குளிர் காலத்தில் படையெடுக்க முயற்சி மேற்கொண்டார். செல்லும் வழியிலேயே இறந்தார். திசம்பர் 1404ஆம் ஆண்டு மிங் சீனாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மிங் தூதுவனை திரும்பிச் செல்ல விடாமல் தடுத்தார். சிர் தாரியா ஆற்றிலிருந்து தொலை தூரப் பகுதியில் முகாமிட்டிருந்த போது இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 17 பெப்பிரவரி 1405 அன்று[93] சீன எல்லையை அடையும் முன்னரே பரப் நகரத்தில் தைமூர் இறந்தார்.[94] தைமூரின் இறப்பிற்குப் பிறகு பூ ஆன் உள்ளிட்ட மீதமிருந்த மிங் தூதுவர்களைத் தைமூரின் பேரன் கலீல் சுல்தான் விடுதலை செய்தார்.[95]

ஆங்கிலேயப் புவியியலாளர் கிளமென்ட்சு மார்கமின், கிளாவிசோசின் தூதுக்குழு பற்றிய அறிமுகக் கதையில், தைமூரின் இறப்பிற்குப் பிறகு, இவரது உடலானது "கத்தூரி மற்றும் பன்னீர் பூசிப் பாதுகாக்கப்பட்டு, லினன் துணியால் சுற்றப்பட்டு, கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டது, பிறகு சமர்கந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கு புதைக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.[96] குர்-இ-அமீர் என்று அழைக்கப்படும் இவரது சமாதி இன்றும் சமர்கந்தில் எழுந்து நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமாதியானது அதிகமாக மறு சீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.[97]

அடுத்த மன்னன் தொகு

 
உசுபெக்கிசுத்தானின் சமர்கந்திலுள்ள தைமூரின் சமாதி.

தைமூர் இறப்பதற்கு முன்னர் இரண்டு முறை தனது வாரிசுகளை நியமித்தார். ஆனால் அந்த இரண்டு வாரிசுகளும் தைமூர் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டனர். தைமூரின் முதல் வாரிசான, இவரது மகன் சகாங்கீர், உடல்நலக் குறைவு காரணமாக 1376ஆம் ஆண்டு இறந்தார்.[98][99]:51 இரண்டாவதாக நியமிக்கப்பட்டது தைமூரின் பேரன் முகம்மது சுல்தான் ஆவார். 1403ஆம் ஆண்டு யுத்தத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் இறந்தார்.[100] இரண்டாமவர் இறப்பிற்குப் பிறகு தைமூர் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தைமூர் மரணப் படுக்கையில் இருந்த போது முகம்மது சுல்தானின் தம்பியாகிய பீர் முகமத்தைத் தனக்கு அடுத்த மன்னனாக நியமித்தார்.[101]

தன்னுடைய உறவினர்களிடமிருந்து போதிய ஆதரவைப் பீர் முகமத்தால் பெற இயலவில்லை. இதன் காரணமாக தைமூரின் வழித்தோன்றல்களுக்கு இடையே கசப்பான உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. பல்வேறு இளவரசர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கடைசியாக 1409ஆம் ஆண்டு தைமூரின் கடைசி மகனாகிய சாருக் தனது எதிராளிகளைத் தோற்கடித்து அரியணையில் ஏறினார்.[102]

தைமூரின் மனைவிகள் மற்றும் துணைவிகள் தொகு

தைமூருக்கு 18 மனைவிகளும் 24 துணைவியர்களும் இருந்துள்ளனர்.

  • துருமிசு அகா, சகாங்கீர் மிர்சாவின் தாய்
  • ஒல்ஜே துர்கான் அகா (தி. 1357/58), அமீர் மாஸ்லாவின் மகள் மற்றும் அமிர் குர்கெனின் பேத்தி
  • செரே முல்க் கானும் (தி. 1367), அமீர் உசைன் இறப்பால் விதவையானவர் மற்றும் கசன் கானின் மகள்;
  • இசுலாம் அகா (தி. 1367), அமீர் உசைன் இறப்பால் விதவையானவர், மற்றும் அமிர் பயான் சல்துசின் மகள்;
  • உலுஸ் அகா (தி. 1367), அமீர் உசைன் இறப்பால் விதவையானவர்,மற்றும் அமிர் கிசிர் யாசுரியின் மகள்;
  • திச்சாத் அகா (தி. 1374), சமசிதின் மகள் மற்றும் புசன் அகாவின் மனைவி ;
  • தௌமன் அகா (தி. 1377), எமிர் மூசாவின் மகள், அர்சு மூக்னாவின் மனைவி,
  • சுல்பன் முல்ச் அகா, ஜெட்டாவின் ஹாஜி பேக்கின் மகள்;
  • துகல் கானும் (தி. 1395) மங்கோல் கான் கீர் காஜ்வா ஆக்லெனின் மகள்
  • தொலுன் அகா, முதலாம் உமர் சேக் மிர்சாவின் தாய்
  • மெங்லி அகா, மிரான் சா இபின் தைமூரின் தாய்
  • தொகே துர்கான் அகா,
  • துகுதி பே அகா , அக் சூபி கொங்கிராட்டின் மகள்

தைமூரின் வழித்தோன்றல்கள் தொகு

தைமூரின் மகன்கள் தொகு

  • சகாங்கீர் மிர்சா இபின் தைமூர் - துர்மிசு அகா என்ற மனைவிக்குப் பிறந்தவர்;
  • முதலாம் உமர் சேக் மிர்சா - தொலுன் அகா என்ற மனைவிக்குப் பிறந்தவர்;
  • மீரான் ஷா இபின் தைமூர் - மெங்லி அகா என்ற மனைவிக்குப் பிறந்தவர்;
  • சாருக் மிர்சா இபின் தைமூர் - தொகே துர்கான் அகா என்ற மனைவிக்குப் பிறந்தவர்;
  • கலீல் சுல்தான் இபின் தைமூர் - சராய் முல்க் கனும் என்ற மனைவிக்குப் பிறந்தவர் .

தைமூரின் மகள்கள் தொகு

  • அகியா பெகி (இவர் அமீர் மூசாவின் மகனான முகம்மது பெகி என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
  • பெயர் தெரியவில்லை, (சுலைமான் மிர்சாவுக்கு மணமுடிக்கப்பட்டார்)
  • பெயர் தெரியவில்லை, ( குமலேசா மிர்சா என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
  • சுல்தான் பக்த் பேகம் (முதலில் முகம்மது மிரேகி பின்னர் சுலைமான் சாவுக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்டார்)

சகாங்கீரின் மகன்கள் தொகு

  • பீர் முகமது பின் சகாங்கீர் மிர்சா

முதலாம் உமர் சேக் மிர்சாவின் மகன்கள் தொகு

  • முதலாம் பீர் முகமது இபின் உமர் ஷேக் மிர்சா
  • முதலாம் இஸ்கந்தர் இபின் உமர் ஷேக் மிர்சா
  • முதலாம் ருஸ்தம் இபின் உமர் ஷேக் மிர்சா
  • முதலாம் பேகார் இபின் உமர் ஷேக் மிர்சா
    • மன்சூர் இபின் பேகார்
      • உசைன் இபின் மன்சூர் பின் பேகார்
        • பாடி அல் ஸமான் ( திமுருத்தின் ஆட்சியாளர்)
          • முகமது மூமின்
        • முசாபர் உசைன்
        • இப்ராகிம் உசைன்

மீரான் ஷாவின் மகன்கள் தொகு

சாருக் மிர்சாவின் மகன்கள் தொகு

  • மிர்சா முகம்மது தரகே (உலுக் பெக் எனப் பரவலாக அறியப்படுபவர்)
    • அப்தல் லத்தீப் இபின் முகம்மது தரகே உலுக் பெக்
  • கியாதல்தீன் பெசோங்கோர்
    • அலாவுத்துலா மிர்சா இபின் பெசோங்கோர்
      • இப்ராகிம் மிர்சா (திம்ரூத் அரசாட்சி)
    • சுல்தான் முகம்மது இபின் பெசோங்கோர் (திம்ரூத் அரசாட்சி)
      • யதிகார் முகம்மது
    • மிர்சா அபுல் காசிம் பபூர் இபின் பேசுங்கூர்
  • சுல்தான் இப்ராகிம் மிர்சா
    • அப்துல்லா மிர்சா
  • மிர்சா சொயுர்காத்மிசு கான்
  • மிர்சா முகம்மது சூகி

மதம் தொகு

தைமூர் சன்னி இசுலாமியப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய ஒரு முஸ்லீம் ஆவார். அந்நேரத்தில் திரான்சாக்சியானாவில் பிரபலமானதாக இருந்த நகக்சுபந்திப் பிரிவைச் சேர்ந்தவராக தைமூர் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தைமூரின் அதிகாரப்பூர்வ தலைமை மத ஆலோசகர் மற்றும் அறிவுரையாளர் அனாபி அறிஞரான அப்துல் சாபர் குவாரசமி ஆவார். திர்மித் நகரத்தில் தைமூர் தனது ஆன்மீக வழிகாட்டியான சயித் பராகாவைச் சந்தித்தார். சயித் பராகா என்பவர் பல்கு நகரத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் ஆவார். இவர் தைமூருக்கு அருகில் குர்-இ-அமீரில் புதைக்கப்பட்டுள்ளார்.[103][104][105]

தைமூர், அலீ மற்றும் அலால்-பயத் ஆகியோரைப் பெரிதும் மதித்தார். பல்வேறு அறிஞர்கள் தைமூர் சியாக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறுகின்றனர். எனினும் சகபாக்களின் நினைவுகளை இழிவுபடுத்தியதற்காக சியாக்களுக்குத் தைமூர் தண்டனை கொடுத்துள்ளார்.[106] மதரீதியாகச் சியாக்கள் தைமூரால் தாக்கப்பட்டுள்ளனர். வேறு சில நேரங்களில் மதரீதியாகச் சன்னி இசுலாமியர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.[107] அலமுத் நகரில் இசுமாயிலிகளைத் தாக்கியதற்காகத் தைமூர், செல்யூக் சுல்தான் அகமத் சஞ்சரைப் பெரிதும் மதித்தார். அதேநேரத்தில் அஞ்சுதான் கிராமத்தில் இருந்த இசுமாயிலிகள் மீது தைமூர் நடத்திய தாக்குதலும் அகமத் சஞ்சரின் தாக்குதலுக்குச் சமமாக மிருகத் தனமாக இருந்தது.[107]

குணங்கள் தொகு

 
தைமூரிய அரசமரபின் காலத்தில் வரையப்பட்ட தைமூரின் வரைபடம்.

தைமூர் ஓர் இராணுவ மேதையாகவும், ஒரு சிறந்த தந்திரோபாயவாதியாகவும் கருதப்படுகிறார். நிலையற்ற அரசியல் அமைப்பில் வெற்றிபெறுவதிலும், நடு ஆசியாவில் தனது ஆட்சியின் போது நாடோடிகளின் விசுவாசத்தைப் பெறுவதிலும் ஒரு விசித்திரமான திறமையைப் பெற்றவராக தைமூர் இருந்தார். உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அறிவாற்றலின் அடிப்படையிலும் அசாதாரண புத்திசாலியாகத் தைமூர் கருதப்படுகிறார். சமர்கந்தில் தான் இருந்த நேரம் மற்றும் தனது பல பயணங்களின்போது, புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதலில் பாரசீகம், மங்கோலியம் மற்றும் துருக்கிய[4]:9 மொழிகளைத் தைமூர் கற்றார் (அரேபிய எழுத்தாளர் அகமத் இபின் அரபுசாவின் கூற்றுப் படி தைமூருக்கு அரபு மொழியில் பேசத் தெரியாது)[108]. யோவான் யோசோப்பு சான்டர்சு என்கிற பிரித்தானிய வரலாற்றாளரின் கூற்றுப் படி, தைமூர் "இசுலாமிய மயமாக்கப்பட்ட மற்றும் ஈரானிய மயமாக்கப்பட்ட சமூகத்தின் ஒரு படைப்பு" ஆவார், புல்வெளி நாடோடி கிடையாது[109]. மிக முக்கியமாக, தைமூர் ஒரு சந்தர்ப்பவாதியாகக் கருதப்படுகிறார். தனது துருக்கிய-மங்கோலியப் பாரம்பரியத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இசுலாமிய மதம் அல்லது ஷரியா சட்டம், மற்றும் மங்கோலியப் பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி தனது இராணுவ இலக்குகள் அல்லது உள்நாட்டு அரசியல் குறிக்கோள்களைச் சாதிக்கத் தைமூர் பயன்படுத்திக் கொண்டார்[4]. தைமூர் ஒரு கற்றறிந்த மன்னன் ஆவார். அறிஞர்களுடன் உரையாடுவதை விரும்பினார். அறிஞர்களிடம் சகிப்புத் தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் நடந்து கொண்டார். பாரசீகக் கவிஞர் ஹபீஸ் காலத்தில் தான் தைமூரும் வாழ்ந்தார். ஹபீசைத் தைமூர் சந்தித்ததாக ஒரு கதை உள்ளது. தைமூரைப் பற்றி பின்வருமாறு வரிகளைக் கொண்ட ஒரு கசலை ஹபீஸ் எழுதினார்:

உங்களது கன்னத்தில் உள்ள கருப்பு மச்சத்திற்காக

நான் சமர்கந்து மற்றும் புகாரா நகரங்களைக் கொடுப்பேன்.

இந்த வரிகளுக்காக தைமூர் ஹபீசை கடிந்துகொண்டார். பிறகு தைமூர் "எனது வாள் வீச்சைக்கொண்டு சமர்கந்து மற்றும் புகாராவை விரிவுபடுத்த உலகின் பெரிய பகுதிகளை நான் வென்றுள்ளேன். இவை எனது தலைநகரங்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகும். பரிதாபத்திற்குரிய உயிரினமான நீ, இந்த இரண்டு நகரங்களையும் ஒரு மச்சத்திற்காகக் கொடுப்பாயா?" என்றார். அச்சமடையாத ஹபீஸ், "இதனைப் போன்ற தாராள மனப்பான்மையுடன் இருந்ததனால்தான், நீங்கள் தற்போது என்னைக் காணும் ஏழ்மை நிலைக்கு நான் வந்துள்ளேன்" என்று கூறிச் சமாளித்தார். கவிஞரின் அறிவாற்றல் நிறைந்த பதிலை கண்ட மன்னர் மகிழ்ச்சி அடைந்தார். அற்புதமான பரிசுகளுடன் கவிஞர் அரசவையில் இருந்து வெளியேறினார்.[110][111]

தைமூரின் விடாமுயற்சி செய்யும் குணமானது அருகிலிருந்த ஒரு கிராமத்தின் மீது நடத்திய ஒரு தோல்விகரமான தாக்குதலுக்குப் பிறகு உருவானதாகக் கூறப்பட்டது. இந்நிகழ்வு அவரது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புராணக் கதையின்படி எதிரியின் அம்பால் காயமடைந்த தைமூர், பாலைவனத்தில் இருந்த கைவிடப்பட்ட ஒரு பழைய கோட்டையின் சிதிலங்களில் ஒதுங்கியிருந்தார். தன்னுடைய விதியை எண்ணி புலம்பிய தைமூர், இடிந்த சுவற்றின் பக்கத்தில் ஒரு சிறிய எறும்பு ஒரு தானியத்தை மேலே எடுத்துச் செல்ல முயல்வதைக் கண்டார். தன்னுடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என எண்ணிய தைமூர், தனது கவனம் முழுவதையும் அந்த எறும்பின் மீது திருப்பினார். காற்று அல்லது பொருளின் எடையால் அந்த எறும்பு கலக்கம் அடைந்ததைக் கண்டார். ஒவ்வொருமுறை சுவற்றின் மீது ஏறும் போதும் அந்த எறும்பு கீழே விழுந்தது. ஒவ்வொரு முறையும் அது கீழே விழுவதைத் தைமூர் எண்ணிக் கொண்டிருந்தார். 69 முறை முயற்சித்த அந்த எறும்பு 70 ஆவது தடவையாக வெற்றி கண்டது. அந்த சிறிய எறும்பு தன்னுடைய கூட்டிற்கு மதிப்புடைய பரிசுடன் சென்றது. ஒரு எறும்பு இவ்வாறு விடா முயற்சி செய்யும்போது ஒரு மனிதனும் நிச்சயமாக விடாமுயற்சியைக் கொண்டிருக்க முடியும் என்று தைமூர் எண்ணினார். மனம் தளராத அந்த எறும்பால் ஈர்க்கப்பட்ட தைமூர் மீண்டும் தான், நம்பிக்கையை இழக்கவே கூடாது என முடிவு செய்தார். இறுதியாக நடந்த நிகழ்வுகள், தைமூரின் விடாமுயற்சி மற்றும் இராணுவ அறிவு ஆகியவை அவரை அவர் காலத்தில், விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், அதிக சக்தி வாய்ந்த மன்னன் ஆக்கியது.[112]

தைமூரின் படையெடுப்புகளுக்கு உண்மையான உந்துதலானது அவரது ஏகாதிபத்தியக் குறிக்கோளேயாகும் என பரவலான கருத்து உள்ளது. எனினும் தைமூரின் வார்த்தைகளான "உலகின் மக்கள் வாழும் முழு பகுதியும் 2 மன்னர்களை கொண்டிருக்க போதாது ஆகும்" என்பவை இவரது உண்மையான எண்ணமானது உலகத்தை வியப்படைய செய்ய வேண்டும் என்பதே ஆகும் என நமக்கு உணர்த்துகின்றன. தனது அழிவை ஏற்படுத்திய படையெடுப்புகள் மூலம் நீடித்த முடிவுகளை அடைவதை விட, உலகத்தை வியப்படைய வைக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்கவே தைமூர் விரும்பினார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் உண்மையாதெனில், ஈரானை தவிர மற்ற நாடுகளை சூறையாட தைமூர் விரும்பினார். அதன் மூலமாக தன்னுடைய தாயகமான சமர்கந்தை வளமாக்கத் தைமூர் விரும்பினார். வெல்லப்பட்ட மற்ற பகுதிகளை அவர் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாகவே தைமூரின் இறப்பிற்கு பிறகு, அவரது பேரரசு உடனேயே சிதறுண்டதாகக் கருதப்படுகிறது.[113]

தனது உரையாடல்களில் அடிக்கடி பாரசீகச் சொற்றொடர்களைத் தைமூர் பயன்படுத்தினார். தைமூரின் பொதுவான வாக்கியமானது, பாரசீகச் சொற்றொடரான ரஸ்டி ருஸ்டி (rāstī rustī, راستی رستی) என்பது ஆகும். இதன் பொருள் "உண்மையே பாதுகாப்பு" என்பதாகும்.[108] சதுரங்கத்தின் ஒரு வகை விளையாட்டான தைமூர் சதுரங்க விளையாட்டைத் தைமூரே உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. 10x11 பலகையில் இது விளையாடப்படும்.[114]

ஐரோப்பாவுடனான தொடர்பு தொகு

 
1402ஆம் ஆண்டு பிரான்சின் ஆறாம் சார்லஸ் தைமூருக்கு எழுதிய கடிதம். இது ஐரோப்பாவுடன் தைமூர் கொண்டிருந்த தொடர்புக்குச் சான்றாகும். இது தற்போது பாரிஸில் உள்ள தேசிய காப்பகத்தில் உள்ளது.

தைமூர் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் ஏராளமான கடிதம் மற்றும் தூதரகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார். முக்கியமாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உடன் அவர் இத்தொடர்புகளைக் கொண்டிருந்தார். தற்போதைய ஸ்பெயினில் நடுக்காலத்தில் அமைந்திருந்த கேஸ்டில் நாட்டின் மூன்றாம் ஹென்றியின் அவைக்கும் தைமூருக்கும் இடைப்பட்ட உறவானது நடுக்கால கேஸ்டில் நாட்டு தூதரக உறவுகளில் ஒரு முக்கியப் பங்காற்றியது. 1402ஆம் ஆண்டு அங்கார யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டு எசுப்பானிய தூதுவர்கள் தைமூருடன் இருந்தனர். அவர்களின் பெயர் பெலயோ டி சோடோமேயர் மற்றும் பெர்னான்டோ டி பலசியூலோஸ். பிற்காலத்தில் லியோன் மற்றும் கேஸ்டில் இராச்சியத்தின் அவைக்கு ஹாஜி முகம்மது அல்-காசி என்ற ஒரு சகதாயி தூதுவரைக் கடிதங்கள் மற்றும் பரிசுகள் உடன் தைமூர் அனுப்பி வைத்தார்.

கிளாவிசோவின் கூற்றுப் படி, எசுப்பானியத் தூதுவர்களைத் தைமூர் நல்லவிதமாக நடத்தினார். அதே நேரத்தில் சீன மன்னனான "காத்தே பிரபுவின்" (ஓங்லே பேரரசர்) தூதுவர்களைத் தைமூர் வெறுப்புடன் நடத்தினார். சமர்கந்திற்குச் சென்ற கிளாவிசோவால் காத்தேயிலிருந்து (சீனா) வந்த செய்திகளை ஐரோப்பியப் பார்வையாளர்களுக்குக் கொடுக்க முடிந்தது. ஏனெனில் மார்க்கோபோலோவின் பயணங்களுக்குப் பிறகு சில ஐரோப்பியர்கள் மட்டுமே அந்த நூற்றாண்டில் அங்கு பயணித்து இருந்தனர்.

பிரஞ்சுக் காப்பகங்கள் பின்வருவனவற்றைப் பாதுகாத்து வருகின்றன:

  • 30 சூலை 1402ஆம் ஆண்டு தைமூரின் கடிதம். இது பிரான்சின் ஆறாம் சார்லசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆசியாவுக்கு அவர் வணிகர்களை அனுப்பி இருப்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.[115]
  • மே 1403ஆம் ஆண்டு கடிதம். தைமூருக்கு ஆறாம் சார்லஸ் எழுதிய கடிதத்தின் இலத்தின் படியெடுப்பு இக்கடிதம் ஆகும். மற்றொரு கடிதம் தைமூரின் மகன் மீரான் ஷா, கிறித்தவ இளவரசர்களுக்கு அனுப்பியது ஆகும். இசுமைர்னாவில் முதலாம் பயேசித்தைத் தாங்கள் தோற்கடித்ததை இந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.[116]

15 சூன் 1403ஆம் ஆண்டு ஆறாம் சார்லசு தைமூருக்கு எழுதிய பதில் கடிதத்தின் நகல்.[117]

மேலும் பைசாந்திய யோவான் ஏழாம் பலையலோகோஸ் ஒரு தொமினிக்கா கிறித்தவரை ஆகஸ்ட் 1401ஆம் ஆண்டு தைமூரிடம் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் பலையலோகோஸ் தனது உறவினர் இல்லாத சமயத்தில் பிரதிநிதியாக ஆட்சி செய்து வந்தார். தைமூர் துருக்கியர்களைத் தோற்கடித்த பிறகு அவருக்கு மரியாதை செய்யவும், தானே முன்வந்து கப்பம் கட்டுவதற்காகவும் பலையலோகோஸ் இத்தூதுவர்களை அனுப்பினார்.

மரபு தொகு

தைமூரின் மரபானது கலவையான ஒன்றாகும். இவரது ஆட்சிக்காலத்தில் நடு ஆசியா மலர்ந்தது. மற்ற இடங்களான பகுதாது, திமிஷ்கு, தில்லி மற்றும் பிற அரேபிய, சியார்சிய, பாரசீக மற்றும் இந்திய நகரங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. அங்கிருந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆசியா முழுவதும் இருந்த நெசுத்தோரியக் கிறித்தவ கிழக்கின் திருச்சபை அழிக்கப்பட தைமூர் தான் காரணம். இவ்வாறாக முஸ்லீம் நடு ஆசியாவில் நேர்மறையான தோற்றத்தை தைமூர் இன்றும் கொண்டுள்ளார். அதே நேரத்தில் அரேபியா, ஈராக், பாரசீகம் மற்றும் இந்தியா ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலானவர்களால் இழிவுபடுத்தப்படுகிறார். இப்பகுதிகளில் தான் தைமூரின் பெரிய அட்டூழியங்களில் சில நடத்தப்பட்டன. அந்நேரத்தில் இருந்த பிற படையெடுப்பாளர்களால் செய்ய முடியாத முஸ்லீம் உலகத்தை ஒன்றிணைக்கும் பணியைச் செய்ததற்காக இப்னு கல்தூன் தைமூரைப் புகழ்கிறார்.[118] மத்திய கிழக்கின் மற்றொரு பெரிய படையெடுப்பாளரான நாதிர் ஷா மீது தைமூர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நாதிர் ஷா தனது இராணுவ நடவடிக்கைகளில் தைமூரின் படையெடுப்புகள் மற்றும் யுத்த உத்திகளைக் கிட்டத்தட்ட மீண்டும் பயன்படுத்தினார். தைமூரைப் போலவே நாதிர் ஷா பெரும்பாலான காக்கேசியா, பாரசீகம் மற்றும் நடு ஆசியா ஆகிய பகுதிகளை வென்றார். தில்லியையும் சூறையாடினார்.

சிறிது காலமே நிலைத்திருந்த தைமூரின் பேரரசானது, திரான்சோக்சியானாவில் துருக்கிய-பாரசீக பாரம்பரியத்தை இணைத்தது. தைமூரின் ஆளுமைக்குக் கீழ் வந்த பெரும்பாலான பகுதிகளில் இனங்களைத் தாண்டி நிர்வாகம் மற்றும் இலக்கியக் கலாச்சாரத்திற்கு முதன்மை மொழியாகப் பாரசீகம் உருவானது. மேலும் தைமூரின் ஆட்சியின்போது துருக்கிய இலக்கியங்களும் எழுதப்பட்டன. இதன் காரணமாகத் துருக்கியக் கலாச்சாரச் செல்வாக்கு விரிவடைந்து வளர்ந்தது. சகதாயி துருக்கிய மொழியின் ஓர் இலக்கிய வடிவமானது பாரசீகத்துடன் ஒரு கலாச்சார மற்றும் அலுவலக மொழியாகப் பயன்பாட்டுக்கு வந்தது.[119]

 
தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய தோக்தமிசிற்கு எதிராக அமீர் தைமூர் மற்றும் அவரது படைகள் முன்னேறுகின்றன.

தைமூர் கிழக்குத் திருச்சபையைக் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்து விட்டார். தைமூருக்கு முன்னர் கிறித்தவ மதத்தின் ஒரு முக்கியமான பிரிவாக அது இருந்தது. ஆனால் பிறகு அசிரிய முக்கோணம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பகுதிக்குள் மட்டுமே அடங்கிப்போனது.[120]

தைமூர் தனது இறப்பிற்குப் பிறகு ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் பிரபலமான நபராக உருவானார். இதற்கு முக்கியக் காரணம் உதுமானிய சுல்தான் பயேசித்திற்கு எதிராக அவர் பெற்ற வெற்றியேயாகும். அந்த நேரத்தில் உதுமானிய இராணுவங்களானவை கிழக்கு ஐரோப்பா மீது படையெடுத்துக் கொண்டிருந்தன. ஒரு முரண்பட்ட தன்மையாகத் தைமூர் கூட்டாளியாகப் பார்க்கப்பட்டார்.

 
உசுப்பெக்கிசுத்தானில் தைமூரின் சிலை. பின்புலத்தில் ஷாரிசப்சில் இருந்த தைமூரின் கோடைகால அரண்மனையின் சிதிலங்கள்.

உசுபெக்கிசுத்தானில் தைமூர் அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தாஷ்கந்தில் ஒருகட்டத்தில் கார்ல் மார்க்சின் சிலை நின்றுகொண்டிருந்த இடத்தைத் தற்போது தைமூரின் நினைவுச்சின்னம் ஆக்கிரமித்துள்ளது.

பாகிஸ்தானிய இயக்கத்திற்குக் காரணமாக பெரும்பாலானவர்களால் கருதப்படும் பிரித்தானிய இந்தியாவின் தத்துவவாதி, கவிஞர் மற்றும் அரசியல்வாதியான முகமது இக்பால்[121] தைமூரின் கனவு என்று தலைப்பிடப்பட்ட ஒரு பாடலை உருவாக்கினார். இந்தப் பாடல் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷாவின் ஒரு வழிபாட்டைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

ஹிஜாசின் ஷரீப் தனது நம்பிக்கையில் உள்ள பிரிவுகளின் காரணமாகப் பாதிக்கப்படுகிறார். அந்த இளம் தாதர் (தைமூர்) மகத்தான படையெடுப்பின் பெரும் வெற்றிகளைத் தைரியமாக மீண்டும் கற்பனை செய்துள்ளார்.

1794ஆம் ஆண்டு சேக் தீன் முகமது தனது தீன் முகமதின் பயணங்கள் என்கிற பயணப் புத்தகத்தைப் பதிப்பித்தார். இந்தப் புத்தகமானது செங்கிஸ் கான், தைமூர் மற்றும் முக்கியமாக முதல் முகலாயப் பேரரசரான பாபர் ஆகியோரைப் புகழ்வதுடன் தொடங்குகிறது. அவர் மேலும் அப்போதைய முகலாயப் பேரரசரான இரண்டாம் ஷா ஆலமைப் பற்றிய முக்கியமான தகவல்களையும் கொடுக்கிறார்.

வரலாற்று ஆதாரங்கள் தொகு

 
தைமூரின் வாழ்க்கை பற்றிய அகமத் இபின் அரபுசாவின் நூல்.

தைமூரின் ஆட்சியைப் பற்றி அறியப்பட்ட முதல் வரலாறானது நிஜாமுதீன் சமியின் ஜாபர் நாமா ஆகும். இது தைமூரின் வாழ்நாளில் எழுதப்பட்டது. 1424 மற்றும் 1428 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராபுதீன் அலி எஸ்டி இரண்டாவது ஜாபர் நாமாவை எழுதினார். இது சமியின் முந்தைய நூலை அதிகமாகத் தழுவி எழுதப்பட்டது. அகமத் இபின் அரபுசா, அரபு மொழியில் தைமூரைப் பற்றி நல்ல முறையில் கூறாத நூலை எழுதினார். அரபுசாவின் வரலாறானது இலத்தீன் மொழிக்கு 1636ஆம் ஆண்டு டச்சு கிழக்கியலாளர் ஜாகோபஸ் கோலியசால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.

தைமூரிய வழித்தோன்றல்களால் ஆதரவளிக்கப்பட வரலாறுகளாக இருந்த காரணத்தினால் இரண்டு ஜாபர் நாமாக்களும் அரபுசாவின் நூலிலிருந்து வேறுபட்ட தோற்றத்தை சித்தரித்த நூல்களாக இருந்தன. வில்லியம் ஜோன்சின் கூற்றுப் படி, முந்தைய நூல்கள் தைமூரை "தாராளவாத, இரக்கமுள்ள மற்றும் சிறப்பான இளவரசனாகச்" சித்தரித்தன. அரபுசாவின் நூலானது தைமூரைச் "சிதைந்த மற்றும் இழிவான, தாழ்ந்த பிறப்பு உடைய மற்றும் வெறுக்கத்தக்கக் கொள்கைகளை உடைய" நபராகச் சித்தரித்தது.[48]

மல்புசத்-இ தைமூரி தொகு

மல்புசாத்-இ தைமூரி மற்றும் தைமூரின் சொந்த சுயசரிதை எனக் கருதப்பட்ட, சேர்த்து எழுதப்பட்ட துசுக்-இ தைமூரி ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டு புனைகதைகள் ஆகும்.[23][122] அபுதாலிப் உசைனி என்ற அறிஞர் இந்த நூல்களை முகலாயப் பேரரசர் ஷாஜகானிடம் 1637-38ஆம் ஆண்டு வழங்கினார். ஷாஜகான் தைமூரின் தூரத்து வழித்தோன்றல் ஆவார். ஏமனிய ஆட்சியாளரின் நூலகத்தில் சகதாயி மொழியில் இருந்த நூல்களைக் கண்டுபிடித்த பிறகு இவ்வாறு வழங்கியதாக உசைனி கூறினார். ஏமன் மற்றும் தைமூரின் தாயகமான திரான்சோக்சியானா ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தொலைவு மற்றும் உண்மையான நூல்களைப் பற்றிய மற்ற ஆதாரங்கள் இல்லாத காரணம் ஆகியவற்றால் பெரும்பாலான வரலாற்றாளர்கள் இக்கதையை நம்ப முடியாததாகக் கருதுகின்றனர். நூல் மற்றும் அது உருவான கதை இரண்டுமே உசைனியால் புனையப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.[122]

ஐரோப்பியர்களின் பார்வையில் தொகு

விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், மறுமலர்ச்சி கலாச்சாரம் மற்றும் ஆரம்பகால நவீன ஐரோப்பா ஆகியவற்றின் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தைத் தைமூர் ஏற்படுத்தியிருந்தார்.[123] தைமூரின் சாதனைகள் ஐரோப்பியர்களை 15ஆம் நூற்றாண்டு முதல் ஆரம்பகால பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கவரவும் செய்தன திகிலடையவைக்கவும் செய்தன.

15ம் நூற்றாண்டு முழுவதும் தைமூரைப் பற்றிய ஐரோப்பியர்களின் பார்வைகளானது கலவையானதாக இருந்தது. சில ஐரோப்பிய நாடுகள் தைமூரைக் கூட்டாளி என்று அழைத்தன. மற்ற நாடுகள், தைமூரின் வேகமான விரிவாக்கம் மற்றும் மிருகத் தன்மை காரணமாக அவரை ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல் எனப் பார்த்தன.[124]:341

அங்காராவில் உதுமானிய சுல்தான் பயேசித்தைப் பிடித்தபோது தைமூர் புகழப்பட்டார். பிரான்சின் ஆறாம் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றி உள்ளிட்ட ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தைமூரை ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகப் பார்த்தனர். ஏனெனில் மத்தியகிழக்கில் துருக்கிய பேரரசிடம் இருந்து கிறித்துவத்தைத் தைமூர் காப்பதாக அவர்கள் நம்பினர். அங்காராவில் தைமூர் பெற்ற வெற்றியானது கிறித்தவ வணிகர்கள் மத்திய கிழக்கிலேயே தொடர்ந்து இருக்க அனுமதி வழங்கியது. மேலும் அவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்குப் பாதுகாப்பாக வீடு திரும்ப அனுமதி வழங்கியது. இதன் காரணமாக அந்த இரு மன்னர்களும் தைமூரைப் புகழ்ந்தனர். புனித நிலத்திற்குப் பயணிப்பதற்கான கிறித்தவப் புனிதப் பயணிகளின் உரிமையை மீண்டும் நிலைநாட்ட தைமூர் உதவியதாக நம்பப்பட்டது. இதன் காரணமாகவும் தைமூர் புகழப்பட்டார்.[124]:341–44

மற்ற ஐரோப்பியர்கள் தைமூரை, ஐரோப்பியக் கலாச்சாரம் மற்றும் கிறித்தவ மதம் ஆகிய இரண்டிற்குமே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு காட்டுமிராண்டி எதிரியாகப் பார்த்தனர். அதிகாரத்தை நோக்கிய தைமூரின் வளர்ச்சியானது பல தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்களில் முக்கியமானவர் கேஸ்டிலின் மூன்றாம் ஹென்றி ஆவார். இதன் காரணமாக தைமூரை உளவு பார்க்க, தைமூரின் மக்களைப் பற்றி அறிய, அவருடன் கூட்டணி வைக்க மற்றும் தைமூருடன் போரைத் தவிர்ப்பதற்காகத் தைமூரைக் கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு சம்மதிக்க வைப்பதற்காக சமர்கந்திற்கு தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டன.[124]:348–49

எஸ்டியின் ஜாபர் நாமாவின் 1723ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கு எழுதப்பட்ட அறிமுகத்தில் மொழிபெயர்ப்பாளர் பின்வருமாறு எழுதினார்:[125]

[எம். பெட்டிஸ் டி லா க்ரோயிக்ஸ்] நமக்குக் கூறுவது, போலி மற்றும் மோசடித் தனமான நூல்கள் உள்ளன. அவை ஆசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. தைமூரின் எதிரிகள் மற்றும் அவரது புகழைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் என துருக்கிய எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் அகமத் பின் அரப்ஷா ... துருக்கியர்கள் மற்றும் சிரியாவின் அரேபியர்களை தைமூர்-பெக் வென்றுள்ளார். சுல்தான் பயேசித்தைக் கூட கைதியாகப் பிடித்துள்ளார். உண்மை தெரிகின்றபோதிலும், வரலாற்றுக்கு நேர்மை இல்லாதவர்களாக, இந்த விஷயத்தில் பெருமளவிற்கு எல்லை மீறியவர்களாக, அந்த நாடுகளின் வரலாற்றாளர்கள், தவறான தகவல்களைத் தருவதில் வியப்பு ஒன்றுமில்லை.

உடலைத் தோண்டுதல் மற்றும் சாபமாகக் கூறப்படுவது தொகு

 
துருக்கியில் செய்யப்பட்ட தைமூரின் ஒரு மெழுகுச் சிலை

தைமூரின் உடலானது அவரது சமாதியில் இருந்து 19 சூன் 1941ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. சோவியத் மானுடவியலாளர்கள் மிக்கைல் எம். செராசிமோ, லெவ் வி. ஓஷானின் மற்றும் வி.ல. செசென்கோவா ஆகியோர் தைமூரின் உடலில் எஞ்சியவற்றை ஆய்வு செய்தனர். மண்டை ஓட்டில் இருந்து அவரது முக அமைப்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை செராசிமோ மீள் உருவாக்கம் செய்தார். அதில் தைமூரின் முக அமைப்பானது பொதுவான மங்கோலிய இன (சரியான நவீன பிரிவுச் சொல்லானது கிழக்கு ஆசியர் என்று மாற்றப்பட்டுள்ளது) சிறப்புகளுடன் காணப்பட்டதைக் கண்டுபிடித்தார்.[126][127][128] தைமூரின் மண்டையோட்டில் நடத்தப்பட்ட மானுடவியல் ஆய்வானது அவர் பெரும்பாலும் தெற்கு சைபீரிய மங்கோலிய இன அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பதைக் காட்டியது.[129] தைமூரின் உயரம் 5 அடி 8 அங்குலமாக (173 சென்டி மீட்டர்கள்) இருந்தது. அக்கால மனிதர்கள் உடன் ஒப்பிடுகையில் தைமூர் உயரமானவராக இருந்தார். தைமூர் காலில் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மற்றும் அவர் பட்ட காயங்கள் காரணமாக வலதுகையானது வாடியிருந்தது ஆகிய தகவல்கள் அவரது உடலில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டன. தைமூரின் வலது தொடை எலும்பானது முழங்கால் உடன் பின்னப்பட்டிருந்தது. அவரது முழங்கால் மூட்டு உள்ளமைப்பானது அவர் எப்போதுமே தனது காலை வளைத்தவாறு வைத்திருந்திருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. எனவே தைமூர் மாற்றுத்திறனாளியாகவே அழைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.[130] தைமூர் அகன்ற மார்புடையவராக இருந்துள்ளார். அவரது முடி மற்றும் தாடியானது சிவப்பு நிறத்தில் இருந்தது.[131][132] தைமூரின் சமாதியில், "நான் இறப்பிலிருந்து எழுந்திருக்கும்போது, உலகம் நடுங்கும்" என்று எழுதி இருந்ததாகக் கூறப்பட்டது. செராசிமோ உடலைத் தோண்டி எடுத்த போது, பெட்டியில் மேலும், "என்னுடைய சமாதியை திறப்பவர்கள் என்னை விடப் பயங்கரமான படையெடுப்பாளரை அவிழ்த்துவிடுவார்கள்" என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.[133] செராசிமோவுக்கு நெருக்கமான நபர்கள் இதை ஒரு புனைகதை என்று கூறுகின்றனர். இருந்தாலும் இக்கதை ஒரு புராணக் கதையாக இன்றும் உள்ளது.[134] எது எவ்வாறாயினும், செராசிமோ தைமூரின் உடலைத் தோண்ட ஆரம்பித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அடால்ப் இட்லர் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவப்படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையைச் சோவியத் யூனியன் மீது மேற்கொண்டார்.[135] நவம்பர் 1942ஆம் ஆண்டு தைமூர் முழு இசுலாமியச் சடங்குகளுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். சுடாலின்கிராட் யுத்தத்தில் சோவியத் யூனியன் வெல்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டார்.[136]

இந்தச் சாபத்தினால் பாதிக்கப்பட்ட முதல் நபராகப் பாரசீகத்தின் அப்சரித்து ஆட்சியாளரான நாதிர் ஷா கூறப்படுகிறார். தைமூரின் சமாதியில் இருந்த ஒரு பச்சை மாணிக்கக்கல் பலகையை நாதிர் ஷா 1740ஆம் ஆண்டு பாரசீகத்திற்குக் கொண்டு சென்று அதனை இரண்டு துண்டுகளாக உடைத்தார். பச்சை மாணிக்கக் கற்களானது பாரசீகத் தலைநகருக்கு வந்தவுடனேயே நாதிர் ஷாவின் மகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன. நாதிர் ஷாவின் ஆலோசகர்கள் பச்சை மாணிக்கக் கல் பலகையை மீண்டும் தைமூரின் சமாதியிலேயை வைத்து விடுமாறு மன்றாடிக் கேட்டனர். அப்பலகையானது சமர்கந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நாதிர் ஷாவின் மகன் குணமடைந்தார். எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நாதிர் ஷாவே கொல்லப்பட்டார்.[137]

தைமூரிய கட்டடக் கலையின் உதாரணங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  • வந்தார்கள் வென்றார்கள் புத்தகம், விகடன் பிரசுரம், சென்னை.
  1. "Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland". 9. (1847). Royal Asiatic Society of Great Britain and Ireland. 
  2. 2.0 2.1 Muntakhab-ul-Lubab, Khafi Khan Nizam-ul-Mulk, Vol I, p. 49. Printed in Lahore, 1985
  3. W. M. Thackston, A Century of Princes: Sources on Timurid History and Art, (1989), p.239
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 Marozzi, Justin (2004). Tamerlane: Sword of Islam, conqueror of the world. HarperCollins. 
  5. Josef W. Meri (2005). Medieval Islamic Civilization. Routledge. பக். 812. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415966900. https://books.google.com/books?id=H-k9oc9xsuAC. 
  6. "Counterview: Taimur's actions were uniquely horrific in Indian history".
  7. John Darwin (historian) (2008). After Tamerlane: the rise and fall of global empires, 1400–2000. Bloomsbury Press. பக். 29, 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59691-760-6. 
  8. Manz 1999, ப. 1.
  9. Marozzi, Justin (2006). Tamerlane: Sword of Islam, Conqueror of the World. Da Capo Press. பக். 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-306-81465-5. https://archive.org/details/isbn_9780306814655. 
  10. Donald M. Seekins, Richard F. Nyrop (1986) (in English). Afghanistan A Country Study · Volume 550, Issues 65-986. The Studies. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780160239298. "Timur was of both Turkish and Mongol descent and claimed Genghis Khan as an ancestor" 
  11. International Association for Mongol Studies; Secretariat, Kokusai Kōryū Kikin; ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (2002) (in English). Eighth International Congress of Mongolists being convened under the patronage of N. Bagabandi, president of Mongolia. OUMSKh-ny Nariĭn bichgiĭn darga naryn gazar. பக். 377. "First of all, Timur's genealogy gives him a common ancestor with Chinggis Khan in Tumbinai - sechen or Tumanay Khan" 
  12. 12.0 12.1 John E. Woods (historian) (2002). Timur and Chinggis Khan. Eighth International Congress of Mongolists being convened under the patronage of N. Bagabandi, president of Mongolia. Ulaanbaatar: OUMSKh-ny Nariĭn bichgiĭn darga naryn gazar. பக். 377. https://books.google.com/books?id=tZ2fAAAAMAAJ. 
  13. Henry Cabot Lodge (1916) (in English). The History of Nations Volume 14. P. F. Collier & son. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780160239298. "Timur the Lame, from the effects of an early wound, a name which some European writers have converted into Tamerlane, or Tamberlaine. He was of Mongol origin, and a direct descendant, by the mother's side, of Genghis Khan" 
  14. 14.0 14.1 Ahmad ibn Arabshah; McChesney, Robert D. (2017). Tamerlane: The Life of the Great Amir. Bloomsbury Academic. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78453-170-6. https://books.google.com/books?id=mAOUrgEACAAJ. 
  15. Richard C. Martin, Encyclopedia of Islam and the Muslim World A-L, Macmillan Reference USA, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-865604-5, p. 134.
  16. Gérard Chaliand, Nomadic Empires: From Mongolia to the Danube translated by A.M. Berrett, Transaction Publishers, 2004. translated by A.M. Berrett. Transaction Publishers, p.75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7658-0204-X. Limited preview கூகுள் புத்தகங்களில். p. 75., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7658-0204-X, p.75., "Timur Leng (Tamerlane) Timur, known as the lame (1336–1405) was a Muslim Turk. He aspired to recreate the empire of his ancestors. He was a military genius who loved to play chess in his spare time to improve his military tactics and skill. And although he wielded absolute power, he never called himself more than an emir.", "Timur Leng (Tamerlane) Timur, known as the lame (1336–1405) was a Muslim Turk from the Umus of Chagatai who saw himself as Genghis Khan's heir."
  17. Forbes Manz, Beatrice (April 1998). "Temür and the Problem of a Conqueror's Legacy". Journal of the Royal Asiatic Society. Third 8 (1): 21–41. doi:10.1017/S1356186300016412. 
  18. Matthew White: Atrocitology: Humanity's 100 Deadliest Achievements, Canongate Books, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857861252, section "Timur"
  19. "The Rehabilitation of Tamerlane". Chicago Tribune. 17 January 1999. http://articles.chicagotribune.com/1999-01-17/news/9901170256_1_uzbek-islam-karimov-tashkent. 
  20. J.J. Saunders, The history of the Mongol conquests (page 174), Routledge & Kegan Paul Ltd., 1971, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0812217667
  21. Barthold, V.V. (1962). Four studies on the History of Central Asia, vol. 1 (Second Printing, 1962 ). Leiden, E.J.Brill. பக். 61. 
  22. "Timur". Encyclopædia Britannica, Online Academic Edition. 2007.
  23. 23.0 23.1 23.2 Beatrice F. Manz (2000). "Tīmūr Lang". Encyclopaedia of Islam (2nd) 10. Brill.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  24. 24.0 24.1 John E. Woods (historian) (1990). "Timur's Genealogy". Intellectual Studies on Islam: Essays Written in Honor of Martin B. Dickson (University of Utah Press): 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87480-342-6. https://books.google.com/books?id=yxmCAAAAIAAJ. 
  25. Mackenzie, Franklin (1963). The Ocean and the Steppe: The Life and Times of the Mongol Conqueror Genghis Khan, 1155-1227. Vantage Press. பக். 322. https://books.google.com/books?id=2iQKAQAAIAAJ. 
  26. (Woods 1990, ப. 90)
  27. John E. Woods (historian) (1991). The Timurid dynasty. Indiana University, Research Institute for Inner Asian Studies. பக். 9. https://books.google.com/books?id=0XcMAQAAMAAJ. 
  28. Haidar, Mansura (2004). Indo-Central Asian Relations: From Early Times to Medieval Period. Manohar. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-508-0. https://books.google.com/books?id=zSZuAAAAMAAJ. 
  29. Henry George Keene (1826–1915) (2001). The Turks in India. Honolulu: University Press of the Pacific. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89875-534-3. https://books.google.com/books?id=KYvjZN6pXYEC&pg=PA20. 
  30. Manz 1999, ப. 164–65.
  31. Fischel, Walter J. (1952). Ibn Khaldun and Tamerlane. Berkeley and Los Angeles: University of California Press. பக். 37. https://books.google.com/books?id=fT5w5bk4ZLMC&pg=PA37. 
  32. Sela, Ron (2011). The Legendary Biographies of Tamerlane: Islam and Heroic Apocrypha in Central Asia. Cambridge University Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-49834-0. https://books.google.com/books?id=1jphXQRPnpgC&pg=PA27. 
  33. 33.0 33.1 "Tamerlane". AsianHistory. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 November 2013.
  34. Richard Peters, The Story of the Turks: From Empire to Democracy (1959), p. 24
  35. Glassé, Cyril (2001). The new encyclopedia of Islam (Rev. ). Walnut Creek, CA: AltaMira Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7591-0189-2. இணையக் கணினி நூலக மையம்:48553252. https://archive.org/details/newencyclopediao0000glas_u8y1. 
  36. Sinor, Denis (1990-03-01), "Introduction: the concept of Inner Asia", The Cambridge History of Early Inner Asia, Cambridge University Press, pp. 1–18, doi:10.1017/chol9780521243049.002, ISBN 978-0-521-24304-9, பார்க்கப்பட்ட நாள் 2021-04-06
  37. 37.0 37.1 37.2 Manz, Beatrice Forbes (1988). "Tamerlane and the symbolism of sovereignty". Iranian Studies 21 (1–2): 105–122. doi:10.1080/00210868808701711. 
  38. "Central Asia, history of Timur", in பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Online Edition, 2007. (Quotation:"Under his leadership, Timur united the Mongol tribes located in the basins of the two rivers.")
  39. "Islamic world", in பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Online Edition, 2007. Quotation: "Timur (Tamerlane) was of Mongol descent and he aimed to restore Mongol power."
  40. Carter V. Findley, The Turks in World History, Oxford University Press, 2005, Oxford University Press, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517726-8, p. 101.
  41. G. R. Garthwaite, The Persians, Malden, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55786-860-2, MA: Blackwell Pub., 2007. (p.148) Quotation: "Timur's tribe, the Barlas, had Mongol origins but had become Turkic-speaking ... However, the Barlus tribe is considered one of the original Mongol tribes and there are "Barlus Ovogton" people who belong to Barlus tribe in modern Mongolia."
  42. M.S. Asimov & Clifford Edmund Bosworth, History of Civilizations of Central Asia, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் Regional Office, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-103467-7, p. 320: "One of his followers was [...] Timur of the Barlas tribe. This Mongol tribe had settled [...] in the valley of Kashka Darya, intermingling with the Turkish population, adopting their religion (Islam) and gradually giving up its own nomadic ways, like a number of other Mongol tribes in Transoxania ..."
  43. Beatrice Forbes Manz, Tamerlane and the Symbolism of Sovereignty (1988), p. 116
  44. Sharaf ad-Din Ali Yazdi, Zafarnama (1424-1428), p. 35
  45. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Arabshah, p. 4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  46. Sharaf ad-Din Ali Yazdi, Zafarnama (1424-1428), p. 75
  47. 47.0 47.1 Ian C. Hannah (1900). A brief history of eastern Asia. T.F. Unwin. பக். 92. https://archive.org/details/briefhistoryofea00hann. பார்த்த நாள்: 30 December 2015. 
  48. 48.0 48.1 48.2 48.3 48.4 Goldsmid 1911, ப. 994.
  49. Manz, Beatrice Forbes (2002). "Tamerlane's Career and Its Uses". Journal of World History 13: 3. doi:10.1353/jwh.2002.0017. 
  50. Manz 1999, ப. 14.
  51. Manz, Beatrice Forbes (2002). "Tamerlane's Career and Its Uses". Journal of World History 13: 3. doi:10.1353/jwh.2002.0017. 
  52. Denise Aigle The Mongol Empire between Myth and Reality: Studies in Anthropological History BRILL, 28 October 2014 p. 132
  53. Nicholas V. Raisanovsky; Mark D. Steinberg: A History of Russia Seventh Edition, pg 93
  54. "Commemoration of the Vladimir Icon of the Mother of God and the deliverance of Moscow from the Invasion of Tamerlane". oca.org. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
  55. Wescoat, James L.; Wolschke-Bulmahn, Joachim (1996). Mughal Gardens. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780884022350. https://books.google.com/books?id=96ec98LieGsC&q=siege+of+herat+timur&pg=PA39. 
  56. Charles, ப. 32.
  57. Timur (18 April 2013) (in en). The Mulfuzat Timury, Or, Autobiographical Memoirs of the Moghul Emperor Timur: Written in the Jagtay Turky Language. Cambridge University Press. பக். vii-xxxvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-108-05602-1. https://books.google.com/books?id=iG9GfiknnZQC. 
  58. Melville 2020, ப. 56.
  59. Manz 1999, ப. 67-71.
  60. Charles, ப. 97-100.
  61. Chaliand, Gerard; Arnaud Blin (2007). The History of Terrorism: From Antiquity to Al Qaeda. University of California Press. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24709-3. https://archive.org/details/historyofterrori00grar. "isfahan Timur." 
  62. Fisher, W.B.; Jackson, P.; Lockhart, L.; Boyle, J.A. : The Cambridge History of Iran, p55.
  63. Chaliand, Gerard; Arnaud Blin (2007). The History of Terrorism: From Antiquity to Al Qaeda. University of California Press. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0520247093. https://books.google.com/books?id=YmpfgNqmVXYC&pg=PA87&dq=isfahan+Timur%7Ctamerlane+genocidal&hl=en&sa=X&ei=UoGjUI7aJKe80QWAk4CAAQ&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=isfahan%20Timur. 
  64. Strange 1905, ப. 267-287.
  65. Manz 1999, ப. 123-125.
  66. Charles 2020, ப. 109.
  67. Shterenshis, Michael (2002) (in en). Tamerlane and the Jews. Psychology Press. பக். 144–189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7007-1696-8. https://books.google.com/books?id=vJZm9amnoAoC. 
  68. Strange, Guy Le (1905) (in en). The Lands of the Eastern Caliphate: Mesopotamia, Persia, and Central Asia, from the Moslem Conquest to the Time of Timur. University Press. பக். 235. https://books.google.com/books?id=-vOf7uE1APYC. 
  69. Morgan, David (19 September 2014) (in en). Medieval Persia 1040-1797. Routledge. பக். 167–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-87140-8. https://books.google.com/books?id=X6iQBAAAQBAJ. 
  70. Nicholas V. Raisanovsky; Mark D. Steinberg: A History of Russia Seventh Edition, pg 94
  71. 71.0 71.1 Virani, Shafique N. The Ismailis in the Middle Ages: A History of Survival, A Search for Salvation (New York: Oxford University Press), 2007, p. 116.
  72. William Wilson Hunter (1909). "The Indian Empire: Timur's invasion 1398". The Imperial Gazetteer of India. 2. பக். 366. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_401.gif. 
  73. [1] The History of India, edited by Kenneth Pletcher Senior Editor, Geography and History pg.131
  74. 74.0 74.1 History of India, as Told by Its Own Historians: The Muhammadan Period By Henry Miers Elliot pg.489-493 [2]
  75. Ganga: The Many Pasts of a River
  76. Singh, Raj Pal (1 January 1988). Rise of the Jat power. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185151052. https://books.google.com/books?id=TKhuAAAAMAAJ&q=ahirs+and+jats. பார்த்த நாள்: 22 May 2012. 
  77. Mallu, who later received the title of Iqbal Khan, was a noble in Siri and an ally of Muqarrab Khan, but later on betrayed him and Nusrat Khan, and allied with Nasir-ud-din Mahmud Shah. History Of Medieval India; V. D. Mahajan p.205
  78. "The Turco-Mongol Invasions". Rbedrosian.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.
  79. Nicol 1993, ப. 314.
  80. "Aleppo:the Ottoman Empire's caravan city". The Ottoman City Between East and West: Aleppo, Izmir, and Istanbul. (1999). Cambridge University Press. 
  81. Margaret Meserve, Empires of Islam in Renaissance Historical Thought, (Harvard University Press, 2008), 207.
  82. Ibn Arabshah, Timur the Great Amir, p. 168
  83. Rhoads Murphey, Exploring Ottoman Sovereignty: Tradition, Image and Practice in the Ottoman Imperial Household 1400-1800; published by Continium, 2008; page-58
  84. Kevin Reilly (2012). The Human Journey: A Concise Introduction to World History. Rowman & Littlefield. பக். 164–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4422-1384-5. https://books.google.com/books?id=v12nkhHzD7UC&pg=PA164. 
  85. Henry Cabot Lodge (1913). The History of Nations. P.F.Collier. பக். 51–. https://books.google.com/books?id=M6Q-AAAAYAAJ&pg=PA51. 
  86. Marina Belozerskaya (4 September 2012). Medusas Gaze: The Extraordinary Journey of the Tazza Farnese. Oxford University Press. பக். 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-987642-6. https://books.google.com/books?id=ykRpAgAAQBAJ&pg=PA88. 
  87. Vertot (abbé de) (1856). The History of the Knights Hospitallers of St. John of Jerusalem: Styled Afterwards, the Knights of Rhodes, and at Present, the Knights of Malta. J.W. Leonard & Company. பக். 104–. https://books.google.com/books?id=3u9EAQAAMAAJ&pg=PA104. 
  88. 88.0 88.1 Dimitris J. Kastritsis (2007). The Sons of Bayezid: Empire Building and Representation in the Ottoman Civil War of 1402-1413. Brill. பக். 49. 
  89. Nuri Pere (1968). Osmanlılarda madenî paralar: Yapı ve Kredi Bankasının Osmanlı madenî paraları kolleksiyonu. Yapı ve Kredi Bankası. பக். 64. 
  90. Stevens, John. The history of Persia. Containing, the lives and memorable actions of its kings from the first erecting of that monarchy to this time; an exact Description of all its Dominions; a curious Account of India, China, Tartary, Kermon, Arabia, Nixabur, and the Islands of Ceylon and Timor; as also of all Cities occasionally mention'd, as Schiras, Samarkand, Bokara, &c. Manners and Customs of those People, Persian Worshippers of Fire; Plants, Beasts, Product, and Trade. With many instructive and pleasant digressions, being remarkable Stories or Passages, occasionally occurring, as Strange Burials; Burning of the Dead; Liquors of several Countries; Hunting; Fishing; Practice of Physick; famous Physicians in the East; Actions of Tamerlan, &c. To which is added, an abridgment of the lives of the kings of Harmuz, or Ormuz. The Persian history written in Arabick, by Mirkond, a famous Eastern Author that of Ormuz, by Torunxa, King of that Island, both of them translated into Spanish, by Antony Teixeira, who liv'd several Years in Persia and India; and now render'd into English.
  91. Stephen_Turnbull_(historian) (30 January 2007). The Great Wall of China 221 BC-1644 AD. Osprey Publishing. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84603-004-8. https://books.google.com/books?id=umbyD8fIYTAC&pg=PA23. பார்த்த நாள்: 26 March 2010. 
  92. C. P. Atwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, see: Northern Yuan Dynasty
  93. Adela C.Y. Lee. "Tamerlane (1336–1405) – The Last Great Nomad Power". Silkroad Foundation. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.
  94. Tsai 2002, ப. 161.
  95. Tsai 2002, ப. 188–189.
  96. James Louis Garvin, Franklin Henry Hooper, Warren E. Cox, The Encyclopedia Britannica, Volume 22 (1929), p. 233
  97. Abdulla Vakhabov, Muslims in the USSR (1980), p. 63-4
  98. Roya Marefat, Beyond the Architecture of Death: Shrine of the Shah-i Zinda in Samarqand (1991), p. 238
  99. Vasilii Vladimirovitch Barthold, Four Studies on the History of Central Asia, Vol. 2 (1959)
  100. Marthe Bernus-Taylor, Tombs of Paradise: The Shah-e Zende in Samarkand and Architectural Ceramics of Central Asia (2003), p. 27
  101. Beatrice Forbes Manz, Power, Politics and Religion in Timurid Iran (2007), p. 16
  102. William Bayne Fisher, Peter Jackson, Peter Avery, Lawrence Lockhart, John Andrew Boyle, Ilya Gershevitch, Richard Nelson Frye, Charles Melville, Gavin Hambly, The Cambridge History of Iran, Volume VI (1986), p. 99-101
  103. "The Descendants of Sayyid Ata and the Rank of Naqīb in Central Asia" by Devin DeWeese Journal of the American Oriental Society, Vol. 115, No. 4 (Oct. – Dec. 1995), pp. 612–634
  104. Four studies on the history of Central Asia, Volume 1 By Vasilij Vladimirovič Bartold p.19
  105. Islamic art By Barbara Brend p.130
  106. Michael Shterenshis Tamerlane and the Jews Routledge பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136873669 p. 38
  107. 107.0 107.1 Virani, Shafique N. The Ismailis in the Middle Ages: A History of Survival, A Search for Salvation (New York: Oxford University Press), 2007, p. 114.
  108. 108.0 108.1 Walter Joseph Fischel, Ibn Khaldūn in Egypt: His Public Functions and His Historical Research, 1382–1406; a Study in Islamic Historiography, University of California Press, 1967, page 51, footnote
  109. John Joseph Saunders (March 2001). The History of the Mongol Conquests. University of Pennsylvania Press. பக். 173–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-1766-7. https://books.google.com/books?id=nFx3OlrBMpQC&pg=PA173. 
  110. Holden, Edward S. (2004). The Mogul Emperors of Hindustan (1398–1707 A.D). New Delhi, India: Westminster, Archibald Constable and Co.. பக். 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1883-1. 
  111. Cowell, Professor (first name not given). MacMillan's Magazine, vol. XXX (via Google Books). London: MacMillan & Co., 1874, p. 252.
  112. John C. Johnson, "Tamerlane and the ant", Stories, 2011
  113. Barthold, V.V. (1962). Four studies on the History of Central Asia, vol. 1 (Second Printing, 1962 ). Leiden, E.J.Brill. பக். 59–60. 
  114. Cazaux, Jean-Louis and Knowlton, Rick (2017). A World of Chess, p.31. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786494279. "Often known as Tamerlane chess, [its invention] is traditionally attributed to the conqueror himself."
  115. Document preserved at Le Musée de l'Histoire de France, code AE III 204. Mentioned Dossier II, 7, J936
  116. Mentioned Dossier II, 7 bis
  117. Mentioned Dossier II, 7 ter
  118. Frances Carney Gies (September–October 1978). "The Man Who Met Tamerlane". Saudi Aramco World 29 (5). http://www.saudiaramcoworld.com/issue/197805/the.man.who.met.tamerlane.htm. பார்த்த நாள்: 26 July 2011. 
  119. Roy, Olivier (2007). The new Central Asia. I. B. Tauris. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84511-552-4. 
  120. "History of the Nestorians".
  121. "Iqbal'S Hindu Relations". The Telegraph (Calcutta, India). 30 June 2007 இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171211213510/https://www.telegraphindia.com/1070630/asp/opinion/story_7992715.asp. 
  122. 122.0 122.1 Hameed ud-Din (2011). "Abū Ṭāleb Ḥosaynī". Encyclopædia Iranica.  
  123. Milwright, Marcus (2006). "So Despicable a Vessel: Representations of Tamerlane in Printed Books of the Sixteenth and Seventeenth Centuries". Muqarnas 23: 317. doi:10.1163/22118993-90000105. 
  124. 124.0 124.1 124.2 Knobler, Adam (November 1995). "The Rise of Timur and Western Diplomatic Response, 1390–1405". Journal of the Royal Asiatic Society. Third Series 5 (3): 341–349. doi:10.1017/s135618630000660x. 
  125. ad-DīnʿAlī Yazdī, Sharaf (1723). The History of Timur-Bec. 1. பக். xii–ix. https://books.google.com/books?id=5e5WAAAAcAAJ&q=editions%3AbiiMjtRlZFEC&pg=PR8.  Punctuation and spelling modernized.
  126. Lev Vasil'evich Oshanin (1964). Anthropological composition of the population of Central Asia: and the ethnogenesis of its peoples. 2. Peabody Museum. பக். 39. https://books.google.com/books?id=guxKAAAAYAAJ. 
  127. Berna Özcan, Gül (2018). Diverging Paths of Development in Central Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1351739429. https://books.google.com/books?id=OuZ3DwAAQBAJ&pg=PT48. 
  128. Yah, Lim Chong (2001). Southeast Asia: The Long Road Ahead. Singapore: World Scientific Publishing Company. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-310-584-3. https://books.google.com/books?id=EYFIDQAAQBAJ&pg=PA3. 
  129. Russian Translation Series of the Peabody Museum of Archaeology and Ethnology. Harvard University. 1964. https://books.google.com/books?id=f5ZAAQAAIAAJ&q=cranium+. 
  130. Mikhail Mikhailovich Gerasimov (1971). The face finder. Hutchinson. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-09-105510-3. 
  131. Congress, United States. Congressional Record: Proceedings and Debates of the United States Congress. U.S. Government Printing Office. பக். A7238. https://books.google.com/books?id=PKDGIuJg16YC&pg=SL1-PA7238. 
  132. Blanc, Pauline (2 October 2009). Selfhood on the Early Modern English Stage. Cambridge Scholars Publishing. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781443815628. https://books.google.com/books?id=SQIaBwAAQBAJ&pg=PA72. 
  133. "Uzbekistan: On the bloody trail of Tamerlane". The Independent (London). 9 July 2006 இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220050634/http://www.independent.co.uk/travel/asia/uzbekistan-on-the-bloody-trail-of-tamerlane-407300.html. 
  134. "Facial Reconstruction, Nazis, and Siberia: The story of Mikhail Gerasimov". 25 January 2011. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
  135. Mark & Ruth Dickens. "Timurid Architecture in Samarkand". Oxuscom.com. Archived from the original on 2 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  136. Marozzi 2004
  137. Max Lovell-Hoare, Sophie Ibbotson (2016). Uzbekistan (2 Revised ). Bradt Travel Guides. பக். 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781784770174. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமூர்&oldid=3910861" இலிருந்து மீள்விக்கப்பட்டது