குடியரசுத் தலைவர் ஆட்சி

குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு இந்திய அரசு மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.

ஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும், அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது மத்திய அரசின் பரிந்துரைப்படியோ சட்டப்பேரவையைக் கலைக்கலாம். அப்போது சட்ட பேரவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.

மாநில ஆட்சி வழக்கமாக ஓர் முதலமைச்சரின்கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர். ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொள்வார். பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.

விதி 356 தொகு

விதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது மத்திய அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது.

இந்த விதி மத்திய அரசு ஓர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போது (காட்டாக கலவரங்கள்) அதனைக் கட்டுப்படுத்த இயலாத மாநில அரசினை கட்டுக்குள் கொண்டுவர வகை செய்கிறது.ஆயினும் பெரும்பாலான நேரங்களில் இது எதிர்கட்சி அரசுகளை நீக்கவே பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகிறார்கள். ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது.

இந்த விதி முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்டது.

விதி 365 தொகு

விதி 365 யூனியனால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதன் விளைவு, அல்லது நடைமுறைப்படுத்தத் தவறியதன் விளைவு, கொடுக்கப்பட்ட எந்த வழிகாட்டுதலின் கீழும் யூனியனின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் கொடுக்கப்பட்ட எந்த வழிகாட்டுதல்களுக்கும் எந்த மாநிலமும் இணங்கத் தவறினால் அல்லது செயல்படுத்தத் தவறினால். இந்த அரசியலமைப்பின் எந்த விதிகளின் கீழும் ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, ​​மாநில அரசாங்கத்தை விதிகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கருதுவது சட்டப்பூர்வமானது. இந்த

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியரசுத்_தலைவர்_ஆட்சி&oldid=3843715" இலிருந்து மீள்விக்கப்பட்டது