இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம், தமிழகத்தில் நடைபெறும் விளையாட்டாகும். இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை இப்பந்தய விளையாட்டில் பயன்படுத்துவர். குறிப்பிட்ட துரத்தினை இத்தட்டு வண்டியின் மூலம் முதலில் கடந்து திரும்பி வருவது பந்தயத்தின் நோக்கமாக உள்ளது. கிராமிய தேவதைகளின் வழிபாட்டு விழாவினை ஒட்டி இவ்விளையாட்டு நடைபெறும்.

மாட்டுவண்டிப் பந்தயம்

பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வண்டிக்கும் இரண்டு பேர் இருக்கலாம். ஒருவர் வண்டியினை ஓட்டுபவர். இன்னொருவர் உதவியாளர். ஓட்டுபவருக்கு உதவியாளர் திறமையுள்ளவராக அமைய வேண்டும். ஏனெனில் ஓட்டுபவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு காளைகளை விரட்டி ஓட்டிக் கொண்டிருப்பார். உதவியாளர் வண்டியில் ஏறாமல் பின் தொடர்ந்து ஓடி வர வேண்டும். மாட்டின் வேகத்தினை அதிகப்படுத்த ஓட்டுபவர் பல உத்திகளைக் கையாள்வார். கூர் ஆணி வைத்த தார்க்குச்சியினைக் கொண்டு மாட்டின் குதப்பகுதியில் குத்துவார். வலி தாங்காத காளைகளும் வேகமாக ஓடும்.

பந்தயத்தில் கலந்து கொள்ள நினைப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் வண்டிகளின் எண்ணிக்கையில் வரையரையேதுமில்லை. பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்குக் கிராமத்தலைவர் பரிசுகளை வழங்குவார். குதிரைப் பந்தயத்திற்கு நகரத்தில் உள்ளவர்கள் எவ்வளவு முதன்மை கொடுக்கின்றனரோ, அது போலவே கிராமத்தார் மாட்டுப் பந்தயத்திற்கு முதன்மை கொடுக்கின்றனர்.

வெளி இணைப்புகள் தொகு