இராணி தித்தா

காஷ்மீரின் பெண் ஆட்சியாளர்

தித்தா (Didda) ( சுமார் 924 பொ.ச. – 1003 ), "காஷ்மீரின் கத்தரின்"[1] என்றும் "சூனியக்கார ராணி" [2] என்றும் அறியப்படும் இவர்,பொ.ச.980 முதல் 1003 வரை காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தார். பொ.ச.958 முதல் 980 வரை இவர் தனது மகன் மற்றும் பல்வேறு பேரப்பிள்ளைகளுக்கு அரசப் பிரதிநிதி ஆகவும், 980 முதல் தனி ஆட்சியாளராகவும், அரசியாகவும் செயல்பட்டார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கல்கணரால் எழுதப்பட்ட இராஜதரங்கிணி என்ற படைப்பிலிருந்து இவரைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் கிடைக்கப்பட்டது.

தித்தா
காஷ்மீரின் இராணி[1][2]
இராணி தித்தா இடம்பெற்றுள்ள நாணயம்.
காஷ்மீரின் இராணி
ஆட்சிக்காலம்பொ.ச.980 – 1003
முன்னையவர்பீமகுப்தன் (r. 975 – 980)
பின்னையவர்சம்கிரமராஜன் (r. 1003–1028)
காஷ்மீரின் அரசப் பிரதிநிதி
அரசப் பிரதிநிதிபொ.ச.958 – 980
மன்னராட்சி
  • இரண்டாம் அபிமன்யு (r. 958 – 972)
  • நந்திகுப்தன் (r. 972 – 973)
  • திரிபுவனகுதன் (r. 973 – 975)
  • பீமகுப்தன் (r. 975 – 980)
பிறப்புஅண். 924
இறப்பு1003 (வயது 79)
துணைவர்சேமகுதன்
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் அபிமன்யு
மரபு
தந்தைசிம்மராஜா, இலோகராவின் மன்னன்
மதம்இந்து சமயம்
இராணி தித்தா

வாழ்க்கை தொகு

தித்தா இலோகராவின் மன்னரான சிம்மராஜாவின் மகளும், தனது தாய்வழியில் காபூலின் இந்து ஷாகிகளில் ஒருவரான பீமதேவன் என்பவரின் பேத்யுமாவார். இலோகரா, மேற்கு பஞ்சாப் மற்றும் காஷ்மீர் இடையே வர்த்தக பாதையில் உள்ள பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது.[3][4]

இவர் தனது 26 வயதில்[5] காஷ்மீர் மன்னரான சேமகுப்தனை மணந்தார். இதனால் இலோகரா இராச்சியத்தை தனது கணவருடன் இணைத்தார். அரசப் பிரதிநிதி ஆவதற்கு முன்பே, தித்தா அரசு விவகாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தார். மேலும் இவரது பெயரையும் சேமகுப்தனை அடையாளம் காட்டக்கூடிய பல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[6]

அரசப் பிரதிநிதி தொகு

பொ.ச.958-இல் வேட்டையாடும்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சேமகுப்தன் இறந்த பின்னர் அவரது மகன் இரண்டாம் அபிமன்யு ஆட்சிக்கு வந்தார். அபிமன்யு இன்னும் குழந்தையாக இருந்ததால், தித்தா அரசப் பிரதிநிதியாக செயல்பட்டார். மேலும், திறம்பட தனது அதிகாரத்தை பயன்படுத்தினார்.[7] அந்தக் காலத்தின் பிற சமூகங்களுடன் ஒப்பிடுகையில், காஷ்மீரில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்.[8]

தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரச்சனைக்குரிய அமைச்சர்களிடமிருந்தும், பிரபுக்களிடமிருந்தும் தன்னை விடுவிப்பதே இவருடைய முதல் பணியாக இருந்தது. நிலைமை பதட்டமாக இருந்தது. இவர் கட்டுப்பாட்டை இழக்கும் நிலைக்கு வந்தார். ஆனால் மற்றவர்களின் ஆதரவுடன் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதால், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் தூக்கிலிடுவதில் தித்தா இரக்கமற்ற தன்மையைக் காட்டினார். 972-இல் அபிமன்யு இறந்தபோது மேலும் பிரச்சனை வெடித்தது. அபிமன்யுவின் மகன் நந்திகுப்தன், இன்னும் சிறு குழந்தையாக இருந்தான். மேலும் இது நிலப்பிரபுக்களாக இருந்த தாமரர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது.இது இலோகரா வம்சத்திற்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.[7]

சர் மார்க் ஆரல் இசுடெய்ன் மொழிபெயர்த்த இராஜதரங்கிணியின் உரையின்படி, 972-இல் அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, இவர் தனது பேரன்களான நந்திகுப்தன், திரிபுவனகுப்தன், பீமகுப்தன் ஆகியோருக்கு இதே போன்று ஆட்சி செய்தார். இவர் இந்த பேரக்குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்றார். அரசப் பிரதிநிதியாக இவர் இராச்சியத்தின் மீது திறம்பட ஒரே அதிகாரத்தைக் கொண்டிருந்தார். மேலும் 980-இல் பீமகுப்தன் கொல்லப்பட்டதன் மூலம் இவர் தன் சொந்த உரிமையில் ஆட்சியாளரானாள்.[9] [10][7]

ஆட்சி தொகு

தித்தா, 980 முதல் 1003 வரை தனது 79 வயதில் தான் இறக்கும் வரை இராணி ஆட்சியாளராக இருந்தார்.[5] இந்திய வரலாற்றில் இவ்வாறு ஆட்சி செய்த மிகச் சில பெண் மன்னர்களில் இவரும் ஒருவர்.[11] இவர் சில சமயங்களில் காஷ்மீரின் கத்தரின் என்று அழைக்கப்படுகிறார் (இரக்கமற்ற உருசியாவின் இரண்டாம் கத்தரீன்). இவர் தனது விருப்பமானவர்களின் உதவியுடன் நீண்ட காலமாகவும் சிறப்பாகவும் ஆட்சி செய்தார்.[1][12][13]

தித்தா, பின்னர் காஷ்மீரில் தனது வாரிசாக சம்கிரமராஜா என்ற தனது மருமகனைத் தத்தெடுத்தார்.[14] ஆனால் இலோகராவின் ஆட்சியை விக்ரகராஜாவிடம் விட்டுவிட்டார். அவர் மற்றொரு மருமகனாகவோ அல்லது சகோதரர்களில் ஒருவராகவோ இருக்கலாம். இந்த முடிவிலிருந்து காஷ்மீரின் இலோகரா வம்சம் மீண்டது. விக்ரகராஜா தனது வாழ்நாள் முழுதும் அந்த பகுதிக்கும் இலோகராவிற்கும் தனது உரிமையை நிலைநாட்ட முயன்றார். [15] மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் "முடிவற்ற கிளர்ச்சிகளும் பிற உள் நாட்டுப் பிரச்சனைகளும்" தொடர்ந்து வரவிருந்தன. [16]

கசினியின் மகுமூது காஷ்மீர் மீது படையெடுத்தார். மகுமூதுவின் படையெடுப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே தித்தா 1003 இல் இறந்தார்.[17][18] தித்தா தனது ஆட்சியின் போது எந்த அண்டை நாட்டு ஆட்சியாளருடனும் மோதலை உள்ளடக்கிய எந்த சாகசத்திலும் ஈடுபடவில்லை. [18] இவரது வாரிசான சம்கிராமராஜாவின் ஆட்சியின் போது மகுமூது வட இந்தியாவின் மீது படையெடுத்தார். 1015 ஆம் ஆண்டில், லோஹர்கோட் கோட்டையைக் கைப்பற்ற இயலாமை, சீரற்ற வானிலை மற்றும் இப்பகுதியின் மலைப்பாங்கான புவியியல் ஆகியவற்றால் கசினியின் காஷ்மீர் பயணம் தோல்வியடைந்தது.[19][20]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Kashmir's Women Rulers". Greater Kashmir. 4 August 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.
  2. 2.0 2.1 "Who is the character of Kangana Ranaut's next film 'Didda', who was called 'Witch Queen'". Archived from the original on 2021-08-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  3. Stein (1989b), ப. 293-294
  4. Stein (1989a), ப. 104
  5. 5.0 5.1 Kashmir's 'Ruthless' Queen Didda
  6. Ganguly (1979), ப. 68-69
  7. 7.0 7.1 7.2 Stein (1989a), ப. 105
  8. Kaw (2004), ப. 91
  9. Stein (1900), Vol. 2, p. 294.
  10. Stein (1900), Vol. 1, pp. 104-105.
  11. Kalia (1994), ப. 21
  12. "Queen Didda: Between facts and fantasy". Free Press Kashmir. 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  13. Giri, Dipak (2021), Gender Perspectives in Indian Context: Critical Responses, Booksclinic Publishing, p. 174, ISBN 9789390655281
  14. Stein (1989a), ப. 106
  15. Stein (1900), Vol. 2, p. 294.
  16. Stein (1900), Vol. 2, p. 370.
  17. "Did Didda fight Ghaznavi? Kangana Ranaut is wrong".
  18. 18.0 18.1 "FACT CHECK: Queen Didda did not face Ghaznavi in battle".
  19. Chandra 2006, ப. 18.
  20. Mohibbul Hasan (2005). Kashmīr Under the Sultāns pp31. Aakar Books. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187879497. https://www.google.co.uk/books/edition/Kashm%C4%ABr_Under_the_Sult%C4%81ns/EUlwmXjE9DQC. 

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_தித்தா&oldid=3609744" இலிருந்து மீள்விக்கப்பட்டது