இரா. இளங்குமரன்

தமிழ்நாட்டு கவிஞர்

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 - சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.[1]

இரா. இளங்குமரன்
பிறப்பு(1927-01-30)30 சனவரி 1927
வாழவந்தாள்புரம், திருநெல்வேலி, தமிழ்நாடு இந்தியா
இறப்பு25 சூலை 2021(2021-07-25) (அகவை 94)
திருநகர், மதுரை, தமிழ்நாடு
பெற்றோர்படிக்கராமர்
வாழவந்தம்மையார்

பிறப்பு தொகு

இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[2] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் முதல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர்த் தனியே தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958-ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் .

நூல்கள் தொகு

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் [3]
திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் இவரது நூலை 1963-ஆம் ஆண்டு நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் வெளியிட்டார்.


வ.எண் வெளியான ஆண்டு நூலின் பெயர் வகை பதிப்பகம் குறிப்புகள்
இலக்கண வரலாறு வரலாறு மணிவாசகர் பதிப்பகம்
காக்கைபாடினியம் இலக்கணம் பதிப்பாசிரியர்
1975 எங்கும் பொழியும் இன்பத் தமிழ் சமூகவாழ்வு தி.தெ.சை.சி.நூற்பதிப்புக்கழகம், சென்னை[4]
குண்டலகேசி காவியம் (1127 பாடல்) சிங்கப்பூர் கோவலன் கண்ணன் வெளியீடு
தமிழிசை இயக்கம் வரலாறு மணிவாசகர் பதிப்பகம்
தனித்தமிழ் இயக்கம் வரலாறு மணிவாசகர் பதிப்பகம்
திருக்குறள் தமிழ் மரபுரை உரை
2004 தேவநேயம் 13 தொகுதிகள் ஆய்வு நூல் பாவாணர் அறக்கட்டளை (2ஆம் பதிப்பு)
1975 நாலடியார் தெளிவுரை இலக்கியம்- உரை தி.தெ.சை.சி.நூற்பதிப்புக்கழகம், சென்னை[4] உரையாசிரியர்
பாவாணர் வரலாறு வரலாறு
யாப்பருங்கலம் இலக்கணம் பதிப்பு
புறத்திரட்டு இலக்கணம் பதிப்பு
செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் (10 தொகுதிகள்) தமிழ்மண் பதிப்பகம்
தென்னாட்டு வணிகம் வரலாறு
திருக்குறளுக்கு உரை திருக்குறளே ஆய்வு நூல்
2009 திருக்குறள் (கருத்துரை) உரை நூல் சேமமடு பதிப்பகம்
2006 உவமைவழி அறநெறி விளக்கம் (3 தொகுதிகள்) ஆய்வு நூல் தமிழ்மண் பதிப்பகம்
2006 திரு.வி.க தமிழ்க்கொடை அறிமுகம் தொகுப்பு நூல் தமிழ்மண் பதிப்பகம்
2006 திரு.வி.க முன்னுரைகள் தொகுப்பு நூல் தமிழ்மண் பதிப்பகம்
2006 ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை வரலாறு தமிழ்மண் பதிப்பகம்

இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சேமமடு பதிப்பகம் ஆகியவற்றின் வாயிலாக வெளிவந்தன. இளங்குமரனார் நூல்கள் யாவும் இப்பொழுது கோ. இளவழகன் அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன.

விருதுகள் தொகு

  • 1978-ல் நல்லாசிரியர் விருது
  • 1991-ல் ஈரோடு வேலா.ராசமாணிக்கத்தின் குரலியம் அமைப்பு இவருக்கு செந்தமிழ் அந்தனர் பட்டம் வழங்கியுள்ளது.
  • 1994-ல் தமிழக அரசின் திருவிக விருது
  • 1995-ல் மதுரை ஆடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் திருக்குறள் செம்மல் விருது
  • 1996-ல் திருச்சி தமிழ் சங்க விருது
  • 1995-ல் திருச்சி மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் வழங்கிய குறள் ஞாயிறு விருது
  • 1997 மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கிய பெரியார் விருது
  • 1999-ல் சென்னை தமிழ் சான்றோர் பேரவை (நகலகம் அருணாசலம்) வழங்கிய மொழிப்போர் மறவர் விருது
  • 2000-ல் சென்னை கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கப்பட்டது.
  • 2003-ல் பதிப்புச் செம்மல் மெய்யப்பன் வழங்கிய தமிழ் இயக்க செம்மல் விருது
  • 2004-ல் திருவாடுதுறை மடம் சிவப்பிரகாச அடிகளார் வழங்கிய திருக்குறள் செம்மல் விருது
  • 2004-ல் பழ.நெடுமாறன் வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது
  • 2004-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் செம்மல் விருது
  • 2012-ல் பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்.
  • பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியுள்ளது.

தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் தொகு

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் பணிகளேயாகும்.பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வருகிறார்.

செந்தமிழ் அந்தணர் இரா இளங்குமரனாரின் மறைவுக்குப் பின்பு அவரது குறளாய முறைத் திருமணங்களை அவரது மாணவர் புலவர்.ச.ந.இளங்குமரன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது.

மறைவு தொகு

முதுமையின் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள தனது வீட்டில் 2021 சூலை 25 அன்று காலமானார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. குறள் ஒலி, மாத இதழ், முரசு 38, முழக்கம்10, சனவரி 2019, பக்கம் 8-10
  2. "மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை". இந்து தமிழ் திசை. 26 சூலை 2021.
  3. (ஏறத்தாழ 550)
  4. 4.0 4.1 தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 17
  5. முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் காலமானார். நியூஸ் 18 தமிழ். 26 சூலை 2021. https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-scholar-ilangumaran-passed-away-sur-514509.html. 
  6. தமிழறிஞா் இரா.இளங்குமரனாா் மறைவு. தினமணி. 25 சூலை 2021. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jul/25/tamil-litreture-ilankumaran-died-3667092.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இளங்குமரன்&oldid=3786534" இலிருந்து மீள்விக்கப்பட்டது