இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை

அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய சிறப்பு மிக்க நூல் இறையனார் அகப்பொருள். இந்த நூலுக்கு உரை கண்ட சங்கப்புலவர்கள் பலர் என்று இந்த உரைநூலே குறிப்பிடுகிறது.

நக்கீரனார் உரை மெய்சிலிர்ந்து வியந்து கேட்கப்பட்டதாம். மதுரை மருதன் இளநாகனார் உரை இவரது உரைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டதாம்.

முச்சங்க வரலாறு தொகு

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன என்னும் செய்தியைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூல்தான். இதனை முச்சங்கம் எனச் சொல்லிவருகிறோம்.

உரையின் சிறப்பு தொகு

அம்பலும் அலரும் களவு என்பது இறையனார் களவியலில் உள்ள 22-ஆம் நூற்பா. இதனை நக்கீரனார் உரை இவ்வாறு விளக்குகிறது.

அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல், அலர் என்பது சொல் நிகழ்தல்
அம்பல் என்பது சொல் நிகழ்தல், அலர் என்பது இல் அறிதல்
அம்பல் என்பது இல் அறிதல், அலர் என்பது அயல் அறிதல்
அம்பல் என்பது அயல் அறிதல், அலர் என்பது சேரி அறிதல்
அம்பல் என்பது சேரி அறிதல், அலர் என்பது ஊர் அறிதல்
அம்பல் என்பது ஊர் அறிதல், அலர் என்பது நாடு அறிதல்
அம்பல் என்பது நாடு அறிதல், அலர் என்பது தேயம் அறிதல்

உரையில் வடசொற்கள் தொகு

இந்த நூலில் வடசொற்கள் பலவாக உள்ளன. அவற்றில் சில வருமாறு.
காரணிகன், குமாரசுவாமி, சிட்டர், சிந்திப்பான், சுவர்க்கம், பிராமணன், மூத்திர புரீடங்கள், வாசகம்

உரையின் நடை தொகு

நக்கீரனார் உரைநடை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு

களவியலின் வரலாறு
அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை 2யுள்ளிவம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். வர அரசனும் புடைபடக் கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது 1பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப, மதுரை ஆலவாயில் அழல் நிறக்கடவுள் சிந்திப்பான்: ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடைய தாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்’ என்று, இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான். இட்ட பிற்றைஞான்று, தேவர்குலம் வழிபடுவான், தேவர் கோட்டத்தை எங்குந் துடைத்து, நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின்கீழ் என்றும் அலகிடாதான் அன்று 2தெய்வதத்துக் குறிப்பினான், ‘அலகிடுவென்’ என்று, உள்ளங்குளிர அலகிட்டான்; இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக், கொண்டுபோந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்டப், பிரமன் சிந்திப்பான்: ‘அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றான் என்பது கேட்டுச் செல்லாநின்றது உணர்ந்து நம்பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தன் அகம் புகுதாதே, கோயிற் றலைக்கடைச் சென்று நின்று, கடைகாப்பார்க்கு உணர்த்தக், கடைகாப்பார் அரசற்கு உணர்த்த, அரசன், ‘புகுதுக’ எனப் பிரமனைக் கூவச், சென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப், ‘பொருளதிகாரம்! இது நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது!’ என்று, அத்திசை நோக்கித் தொழுதுகொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து ‘நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம், இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்’ என அவர்கள் அதனைக் கொண்டுபோய்க் கல்மாப்பலகை ஏறியிருந்து ஆராய்வுழி, எல்லாரும் தாந்தாம் உரைத்த உரையே நல்லதென்று சில நாளெல்லாஞ் சென்றன

இணைப்பு தொகு

  1. களவியல் என்ற இறையனார் அகப்பொருள் உரை
  2. தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் சா.வே.சுப்பிரமணியன் பதிப்பு, மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007