உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்

உகரமும் ஊகாரமும் உயிர்மெய் மூல மெய்யெழுத்தைச் சிதைத்து எழுதப்படுவதால் தமிழில் மேலதிக 24 தனி வடிவங்கள் தேவைப்படுவது தமிழுக்கு ஒரு குறையாக சிலரால் பார்க்கப்படுகின்றது.[1] இப்போது கணினியில் தமிழைக் குறிக்க (12 உயிர் + 18 மெய் + 1 ஆய்தம் + 12 குறியீடுகள் + 24 உகர ஊகார வடிவங்கள் = 67) 67 குறியீடுகள் தேவை. இவ் 24 எழுத்து வடிவங்களையும் மேலதிக இரு கீற்றுக்களால் குறித்தால் அனைத்து தமிழ் எழுத்துக்களையும் 41+2=43 வடிவங்களால் எழுதமுடியும். அதாவது 12 உயிர்+ 1 ஆய்தம் + 18 மெய் + 12 குறியீடுகள் = 43. இப்போது தேவைப்படும் இந்த மாற்றம் வேண்டும் என்று சில தமிழ் கணிமையாளர்களும் அறிஞர்களும் வேண்டி வருகின்றனர்.

ஆதரவுக் காரணங்கள் தொகு

இந்த மாற்றம் தமிழை எளிமைப்படுத்தி தமிழ் கற்பதை இலகுவாக்கும் என்றும், தமிழ் கணிமையை இலகுவாக்கும் என்றும், இச்சீர்திருத்தத்தை வேண்டுவோர் கருதுகின்றார்கள்.

எதிர்ப்புக்கான காரணங்கள் தொகு

தொடர்ச்சி அற்றுப்போதல் தொகு

நூல்களிலும் இணையத்திலும் ஏற்கனவே இருக்கும் எழுத்துவடிவங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது இதுவரை இருக்கும் படைப்புக்களை பயனற்றதாக்கும். யாழ்ப்பாணத் தமிழ் நூலகத்தில் உள்ள நூல்களை எரித்தது போலவும், மதுரைத் தமிழ்ச்சங்க நூலகளை எரித்தது போலவும் காலங்காலமாக ஏராளமான ஏடுகள் அழிக்கப்பட்டன போலவும் ஆனால் இவற்றினும் கொடுமையாக மில்லியன் கணக்கான பக்கங்களும் நூறாயிரக்கணக்கான தமிழ்நூல்களும் (ஏறத்தாழ எல்லாத் தமிழ் நூல்களுமே) சில ஆண்டுகளிலேயே படிக்க இயலாமல் போகும். இதனால் நேரம், பொருள், உழைப்பு ஏராளமாக வீணாவதும், தொடர்பறுவதால் குறிப்பிட்ட ஒருசில கருத்துடைய நூல்கள் மட்டுமே வசதி படைத்தவர்கள் வெளியிட நேரிடலாம், என்றும் பற்பல கரணியங்கள் உள்ளன என்று எதிர்ப்பாளர்கள் சுட்டுகின்றனர்.

கற்பது கடினமல்ல தொகு

சீன மொழியை கற்க ஒருவர் 3000 மேற்பட்ட குறியீடுகளைக் கற்ற வேண்டும். தமிழை ஆக 67 குறியீடுகளுடன் கற்றுக்கொள்ள முடியும். ஆங்கிலமும் (Capital letters) சேர்த்தால், 52 குறியீடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்றாக தமிழை ஏற்கனவே கற்றவர்களுக்கு புதிய முறைகள் வந்தால் அதைக் கற்பதில், நடைமுறையில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும்.

21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும், மேலும் வருங்காலத்திலும், எழுத்துகளை எழுதுவதும் படிப்பதும் பனையோலைகளில் எழுதிய நாட்களில் இருந்து மிகவும் வேறுபட்டது என்றும், இதனால் இவ்வகையான "சீர்திருத்தம்" ஏதும் தேவையில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

எழுத்துமுறை பிளவு தொகு

தமிழ்மொழியை கட்டுப்படுத்த செல்வாக்கு பெற்ற ஒரு அமைப்பு இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கையிலும் சிங்கப்பூரிலும் தமிழ் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற மொழி. மலேசியாவிலும் தமிழ் ஒரு கல்வி மொழி. பிறநாடுகள் பலவற்றிலும் தமிழ் பயிலப்படுகிறது. தமிழ்நாடு அரசு மட்டும் இதை நிறைவேற்றினால், இதர நாடுகளிலில் இருப்போர் பின்பற்றாமல் இருக்க கூடும். எனவே தமிழ் எழுத்துமுறை பிளவு பட இந்த மாற்றம் உந்தும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. காசி ஆறுமுகம். (2006). தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!. [1]

வெளி இணைப்புகள் தொகு

ஆதரவு தொகு

விமர்சனம் தொகு

  • செ. இரா. செல்வகுமார். (2008). எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு. தமிழ்வெளி வலைப்பதிவு. [4]