உலகப் புத்தக நாள்
உலகப் புத்தக நாள் (World Book Day) என்பது வாசித்தல், பதிப்பித்தல், பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995-ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.[1] இது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) என்றும் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ தீர்மானம்
தொகுபாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் பின்வருமாறு:
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படும்"
பங்கேற்பாளர்கள்
தொகுயுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிக்கின்றன. பின்வரும் அமைப்புகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
- நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு
- அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)
- உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்
தொகுஉலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும் ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக நாள் என்று ஒரு நாள் உருவாக்க வேண்டும் என்ற கருத்து அனைத்துலகப் பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Book Day 2021: Theme, Quotes, History, Significance | Sa News". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-23. Retrieved 2021-04-23.
வெளியிணைப்புகள்
தொகு- யுனெஸ்கோ இணையதளத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் - (ஆங்கில மொழியில்)
- 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ தீர்மானம் - (ஆங்கில மொழியில்)