தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்து.
(ஊகாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

() தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இஃது ஆறாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஊகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊவன்னா" என்பது வழக்கம்.

ஊ
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

"ஊ" வின் வகைப்பாடு தொகு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

இனவெழுத்து தொகு

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.

  • இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது , க்கு இன எழுத்தாக அமையும்.
  • உங்கு, ஊங்கு போன்ற சொற்களில் உகரத்துக்குப் பதிலாக ஊகாரம் இடம்பெற்றாலும் பொருள் மாற்றம் இல்லாதிருப்பதைக் காணலாம். இதனால் , க்குப் பொருள் அடிப்படையில் இன எழுத்து ஆகிறது.

சொல்லில் ஊகாரம் வரும் இடங்கள் தொகு

 
'ஊ' எழுதும் முறை

தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[2]. எனினும் யகர மெய்யும் ஊகாரத்துடன் சேர்ந்து சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல். இதிலிருந்து ஙூ, ஞூ, டூ, ணூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ றூ, ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வருவது மரபல்ல என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் எழுதுவோர் சிலர் டூ, ரூ, லூ போன்ற எழுத்துகளும், சில வேளைகளில் றூ வும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டூர், ரூபா, லூட்டி, றூபன் போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஊகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.

"ஊ" வும் மெய்யெழுத்துகளும் தொகு

வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஊகார உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன.[3]. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஊகாரத்தைக் குறிக்கும் பல்வேறு துணைக் குறியீடுகளையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துகளோடும் ஊகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மெய்யெழுத்துகள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஊ கூ கூவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஊ ஙூ ஙூவன்னா
ச் இச்சன்னா ச் + ஊ சூ சூவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஊ ஞூ ஞூவன்னா
ட் இட்டன்னா ட் + ஊ டூ டூவன்னா
ண் இண்ணன்னா ண் + ஊ ணூ ணூவன்னா
த் இத்தன்னா த் + ஊ தூ தூவன்னா
ந் இந்தன்னா ந் + ஊ நூ நூவன்னா
ப் இப்பன்னா ப் + ஊ பூ பூவன்னா
ம் இம்மன்னா ம் + ஊ மூ மூவன்னா
ய் இய்யன்னா ய் + ஊ யூ யூவன்னா
ர் இர்ரன்னா ர் + ஊ ரூ ரூவன்னா
ல் இல்லன்னா ல் + ஊ லூ லூவன்னா
வ் இவ்வன்னா வ் + ஊ வூ வூவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஊ ழூ ழூவன்னா
ள் இள்ளன்னா ள் + ஊ ளூ ளூவன்னா
ற் இற்றன்னா ற் + ஊ றூ றூவன்னா
ன் இன்னன்னா ன் + ஊ னூ னூவன்னா

வரிவடிவம் தொகு

தமிழில் ஊகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஊகாரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் மாறிவந்த முறை பற்றிக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்குத் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.

 

ஊகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஊகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஊகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.

 

பிரெய்லியில் ஊகாரம் தொகு

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துகான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் இடப்பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் இடப்பக்கப் புள்ளியும், மூன்றாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது வைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.

 
பாரதி பிரெய்லியில் இகாரம்

குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33
  3. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15

உசாத்துணைகள் தொகு

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊ&oldid=3601146" இலிருந்து மீள்விக்கப்பட்டது