ஒளிர்வு பொறியியல்

கண்ணுக்கேற்ற ஒளிப் பயனறிவியல்

ஒளிர்வுப் பொறியியல் (Illuminating Engineering) என்பது மனிதப் பார்வைக்கு நன்கு உதவுமாறு ஒளியை அறிவியல் முறையில் பயன்படுத்தும் கலையை ஒளிர்வுப் பொறியியல் என்கிறோம். வீடுகள், தொழிற்சாலைகள், பொதுவிடங்கள், நாடக மேடைகள் போன்ற பல இடங்களிலும், தேவைக்கு ஏற்ப ஒளி வீசவும் அழகுப்படுத்தவும் அமைக்கப்படும் பலவகை ஒளி அமைப்புக்களும் இவ்வியலில் அடங்குகின்றன. மேலும், நல்ல முறையில் ஒளி தரும் மூலங்களையும் கருவிகளையும் குறித்து, இந்த இயல் எடுத்துக் கூறுகிறது. இதற்குரிய சீர்தரமும் ஒருமுகப் படுத்தப்படுகிறது.[1]

இபீட்ரை இர்வின், ஒளிர்வு பொறியியல் அறிஞர், 1914

ஒளிர்வு பொறியாளர் தொகு

கண் பார்வை ஒளியானது, மின் காந்தக் கதிர் வீச்சால் ஏற்படும் ஒளி எனலாம். இந்த ஒளி 3,800-7,600 ஆங்ஸ்ட்ராம் (ஒரு ஆங்ஸ்ட்ராம் என்பது ஒரு மில்லி மீட்டரில், பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) நீளத்தில் அடங்குகிறது. இந்த அளவில் உள்ள, மின்காந்த சக்திக் கதிர் வீச்சில் கூட, பற்பல அலை நீளங்கள், பற்பல நிறங்களைக் கண்ணுக்குத் தருகின்றன. எவ்வித ஒளி அமைப்பும் சரியாக உள்ளதா என் முடிவு செய்ய மனிதனுடைய கண்ணே பயனாகிறது. ஆகவே மனிதனது கண்ணின் அமைப்பு, அது வேலை செய்யும் விதம், குறிப்பாக ஒளியின் வகைக்கும் அளவுக்கும் ஏற்ப அது அடையும் மாறுதல் ஆகியவை பற்றிய அறிவும், இவ்வொளிர்வுப் பொறியியலில் இடம் பெறுகிறது. ஒளியைப் பார்ப்பதால் சோர்வு, களைப்பு முதலான குறைகள் ஏற்படுமானால், அதற்குரியக் காரணிகளை ஆராய்தல் அவசியமாகிறது. ஆளுக்கு ஆள், பார்வைத்திறன் மாறுபடும். ஒவ்வொரு தனிநபருக்கும், வெவ்வேறு நேரங்களில், பார்வைத்திறன் மாறுபாடுகிறது. ஆகவே ஒளிர்வுப் பொறியமைப்பாளரின் பார்வைத்திறனும், கண்ணின் சிறப்புப் பண்புகளும் குறித்தவகைளை தெரிந்து இருத்தல் அவசியமாகும்.

ஒளிர்வு தொகு

ஒளியின் ஒளிர்வுச் செறிவுத்திறன் என்பது, வத்தித்திறன் என்ற அளவில் கணிக்கப்படுகிறது ; இந்த அலகு 'காண்டலா'(Candela)[2] என்று பெயராகும். ஒளிர்வீன் மாறுபாட்டிற் கேற்ப, கண் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்கிறது. ஒளிர்வை அதிகப்படுத்தினால், கட் புலப்பாடு அதிகரிக்கும். எல்லா நிறங்களையும், ஒரேயளவு நுட்பமாக அறியக் கண்ணினால் முடிவதில்லை. மஞ்சள், பச்சை நிறங்களைக் காணும் போதே, கண்ணுக்கு உச்ச நுட்பவுணர்வு இருக்கிறது. பார்வைக் கூர்மையானது, பார்க்கும் நேரம், பொருளின் தன்மை, அதன் பின்னணி ஒளியின் தன்மை, அதன் ஒளிர்வு முதலியனவற்றைக் கட்டுபடுத்தும் திறனை, ஒரு ஒளிர்வுப் பொறியமைப்பாளர் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்குத் தக்க ஒளியின் அளவும், தக்க தரமும் அதாவது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கண் கூசாமலிருத்தல், வேலைக்கும் அதன் சூழ்நிலைக்கும் அதிக ஒளி வேறுபாடில்லாமை, வேண்டாத நிழல்கள் இல்லாதிருத்தல், வேலைக்குத் தகுந்த நிறமுள்ள வெளிச்சம் ஆகியனவற்றை, அறிவியல் முறையில் ஏற்பாடு செய்வது ஒளிர்வுப் பொறியமைப்பாளரின் பொறுப்பாகும் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் இந்த ஒளிர்வு ஆராய்ச்சி, அனுபவத்தின் பயனாக எந்த வேலைக்கு எவ்வளவு ஒளிர்வு தேவை என்பதைக் கணித்து, அட்டவணை வடிவில் வெளியிட்டுள்ளனர். நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் இருந்தபோதிலும், இப்பொழுது எல்லா நாடுகளிலும் மின்விளக்கையே அடிப்படையாகக் கொண்டு, ஒளிர்வை ஆராய்கின்றனர்.[3]

ஒளிர்வு விளக்குகள் தொகு

ஒளிர்வில் பல வகைகள் இருப்பதால், அதற்கு ஏற்பவும், நமது தேவைக்கு ஏற்பவும், தற்போதுள்ள விளக்குகளிலும் பல வகைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை யாதெனில், இரு கார்பன் முனைகளிடையே காற்றில் மின்வில் உண்டாக்குவதன் மூலம், ஒளியை உமிழும் வில் விளக்குகள், இவைகள் முன்பு திரையரங்குகளில் பயன்பட்டது. தற்போது டங்ஸ்டன் உலோகத்தால் செய்யப்பட்ட தந்தித் திரிமூலம், மின்சக்தியைச் செலுத்தும் போது, ஏற்படும் வெண்சுடர், வெண்சுடர் விளக்குகளே, சாதாரணமாக வீடுகளில் பயன்பட்டு வருகின்றன. உலோக ஆவியோ, வாயுவோ நிரப்பப்பட்டு, நன்கு அடைக்கப்பட்ட கண்ணாடிக் குழாயில், உலோக ஆவி வழியே, மின் சக்தியைப் பாய்ச்சி ஒளி பெறப்படுகிறது. இவற்றை மின் இறக்க விளக்கு என்கிறோம். எடுத்துக்காட்டாக, உடன் ஒளிரும் பாதரச ஆவி விளக்கு, சோடிய ஆவி விளக்கு, நீயான் வாயு விளக்கு முதலியவற்றைச் சொல்லலாம். உடனொளிர்வுப் பொருள் விளக்குகளான இவற்றில், பாதரச ஆவியின் மூலம் மின்னாற்றலைப் பாய்ச்சும்போது, கண்ணுக்குப் புலப்படாத புற ஊதாக்கதிர் வீசுகிறது. இக்கதிர்வீச்சு, கண்ணாடியின் உட்புறமுள்ள, உடன் பின்னொளிர்வுப் பூச்சின் மீது மோதி, கண்ணுக்குப் புலப்படும் ஒளியை உண்டாக்குகிறது. ஒளியின் நிறம், பூசப்படும் உடன் பின்னொளிர்வுப் பொருளுக்குத் தக்கவாறு வேறுபடுகின்றன. இத்தகைய விளக்குகள் விளம்பர பலகைகளில் அதிகம் பயன்படுகின்றன.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிர்வு_பொறியியல்&oldid=2884803" இலிருந்து மீள்விக்கப்பட்டது