கச்சாயில் இரத்தினம்

கச்சாயில் இரத்தினம் பிரபலமான ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

கச்சாயில் இரத்தினம்

இவரது நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், மற்றும் தொடர் புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர் நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது. இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி, இயக்கி மேடை ஏற்றியுள்ளார். தினகரனில் எழுதிய இவர் எழுதிய "அலைகள்", "விவேகி"யில் எழுதிய 'வன்னியின் செல்வி', 'அன்பு எங்கே?' ஆகிய தொடர் புதினங்கள் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டன[1]. "விடிவு நோக்கி" என்ற தொடர் நாவல் தினகரனில் வெளிவந்தது.

இவர் ஆர்மோனியம், புல்லாங்குழல், மௌத் ஓர்கன் வாசிப்பதிலும், திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார். தனது அநேக மேடை நாடகங்களுக்கு அவரே இசையமைத்திருந்தார்.இவரது மகள் மலரன்னை, மலரன்னையின் மகன் மலரவன் ஆகியோரும் சிறந்த எழுத்தாளர்கள் ஆவர்.

இவரது ஆக்கங்களை யாழ் பல்கலைக்கழக கலைத்துறை மாணவி ஒருவர் தனது கற்கைக்காக ஆய்வு செய்து சமர்ப்பித்திருந்தார். இவரது இலக்கிய பங்களிப்புக்காக தென்மராட்சியில் இயங்கிய " தேன் தமிழ் மன்றம் " இவரை 1964 ஆம் ஆண்டு கௌரவித்திருந்தது, அப்போதைய மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அவர்களால் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி இக்கௌரவப்பு நடைபெற்றது. இவரது இயற்பெயர் சின்னத்தம்பி இராசரத்தினம் (1910-1996), கச்சாயை பிறப்பிடமாக கொண்டவர். தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் கல்விகற்று மலையகத்தில் பாடசாலை பொறுப்பாசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்று, சுழிபுரத்தில் இயங்கிய பெரிய வர்த்தகநிலையமான துரையப்பா அன் சன்ஸ் என்ற நிறுவனத்தில் பிரதம கணக்கராக பணி புரிந்திருந்தார்.இவரது மனைவியின் பெயர் செல்வசிகாமணி இராசரத்தினம் (1922-2012), இவரும் ஆறு வருடங்கள் மலையக பாடசாலையொன்றில் ஆசிரியராய் கடமையாற்றியவர்.

பரிசில்கள் தொகு

இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது. கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார். இவரது பல ஆக்கங்கள் பரிசுபெற்றுள்ளன  .

வெளியான நூல்கள் தொகு

  • பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (தனிக்கதை) (1969) பகுத்தறிவுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்தோட்டை
  • வன்னியின் செல்வி (நாவல்), (1963) ஆசீர்வாதம் புத்தகசாலை, 32. கண்டி வீதி, யாழ்ப்பாணம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சாயில்_இரத்தினம்&oldid=3510667" இலிருந்து மீள்விக்கப்பட்டது