கடருத்ர உபநிடதம்

கடருத்ர உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 84-வது உபநிஷத்து. தேவர்களுக்கு அவர்களே கேட்டுக்கொண்டபடி பிரம்மா உபதேசித்தது. இது சன்னியாச உபநிடதங்கள் என்ற பகுப்பைச் சேர்ந்தது. இதன் இரு சிறப்புகள்: ஒன்று, பிரம்மச்சரியத்திற்கு ஓர் இறுக்கமான இலக்கணம்; மற்றொன்று, வேதாந்தத்தின் சில நெருடலான சொற்களுக்குத் தெளிவான விளக்கம்.

உரைநடைப் பகுதி தொகு

இவ்வுபநிடதம் உரைநடையில் சிறிதளவும் பிறகு செய்யுள் நடையில் 42 சுலோகங்களும் கொண்டது. உரைநடைப் பிரிவில் சீடனானவன் குருவை அண்டி அவர் சொற்படி அவருடனேயே எப்படி வாழவேண்டும் என்பதைச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனில் சீடன் கடைப்பிடிக்கவேண்டிய பிரம்மசரியத்திற்கொரு இலக்கணம் சொல்லுமிடத்தில்,பிரம்மசரியத்திற்குக் குந்தகங்களான 'மைதுனங்கள்' (=இனச்சேர்க்கைகள்) எட்டு விதம் என்று சொல்லி உபநிடதம் அவைகளைப் பட்டியலிடுகிறது:

தர்ஶனம் ஸ்பர்ஶனம் கேலி: கீர்த்தனம் குஹ்யபாஷணம்.
ஸங்கல்போத்யவஸாயஶ்ச க்ரியா நிர்விருத்திரேவ ச .
ஏதன்மைதுனமஷ்டாங்கம் ப்ரவதந்தி மநீஷிண:
விபரீதம் பிரம்மசர்யம் அனுஷ்டேயம் முமுக்ஷுபி:

இதன் பொருள்:

(மைதுனத்தை மனதில் கொண்டு) பார்த்தல், தொடல், விளையாடல், கூடப்பாடல், இருபொருள் கொண்டு பேசுதல், நினைத்தல்,திட்டமிடல்,செயல் --ஆகிய இவை எட்டுமே மைதுனம் என்று கூறுவர் அறிஞர். வீடு பெற விருப்பமுடையோர் கடைப்பிடிக்கவேண்டியது இதற்கு எதிரானதான பிரம்மச்சரியம்.

செய்யுட்பகுதி தொகு

  • கருமத்தாலோ, மக்களாலோ, வேறு எதனாலோ பிரம்ம வித்தையை அடைய இயலாது. பிரம்மஞானம் ஒன்றினால்தான் மனிதன் பிரம்மத்தை அடையலாம்.
  • எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைபவனாக விளங்கும் பரமானந்த ஆன்மாவை எவனொருவன் காண்கிறானோ அவன் புண்ணிய கருமத்தாலோ பாபகருமத்தாலோ ஒருபொழுதும் துன்புறுவதில்லை.
  • மாயை என்ற உபாதி (இணைபொருள்) இல்லாதது பரஞ்சோதி அல்லது சுத்தசைதன்யம்.
  • மாயை என்ற உபாதி (இணைபொருள்) யுடன் சேர்ந்து கடவுட்சோதி அல்லது ஈசுவரசைதன்யம் எனப்படுகிறது
  • அதுவே அவித்தையோடு கூடியபோது ஜீவசைதன்யமாகிறது.
  • அந்தக்கரணத்துடன் கூடிச் செயல்படும்பொழுது பிரமாதா (வினையாற்றுபவன்) எனப்படுகிறது.
  • அந்தக்கரணத்தின் விருத்தி (மனப்போக்கு) வடிவாகும்பொழுது பிரமாணம் (ஆணையுரிமையுடைத்தது) எனப்படுகிறது
  • அறியப்படும் பொருளில் விளங்குகையில் 'பலம்' (பயன்) எனப்படுகிறது
  • அறியப்பட்ட பொருள் தான் பிரமேயம்.

உலகம் முழுதும் உள்ளுறைபவனாக உள்ள ஆன்மா மேலே குறிப்பிட்ட ஏழு வகையாகத் தோன்றுகிறது. அறிவுடையோன் தனது ஆன்மாவை உபாதி ஏதுமற்றதாகக் கருதவேண்டும். உள்ளபடி உண்மையை அங்ஙனம் அறிபவன் பிரம்மாகவே விளங்க உரிமையுடையவனாகிறான். இதுவே எல்லா வேதாந்தங்களின் முடிவு.

பொன்மொழி தொகு

இவ்வுலகமுழுவதும் துன்பவடிவமாகவும் துன்புறுவோர் வடிவமாகவும் உள்ளது. வேதாந்த வாக்கியத்தால் உதித்த ஞானத்தின் மூலமாக அதே உலகம் உள்ளுறையும் ஆன்மவடிவாக விளங்குகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. ::தாப்ய தாபக ரூபேண விபாதமகிலம் ஜகத்::; :: ப்ரத்யகாத்மதயா பாதி ஞானாத் வேதாந்தவாக்யஜாத்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடருத்ர_உபநிடதம்&oldid=3913642" இலிருந்து மீள்விக்கப்பட்டது