கீழ்மாவிலங்கைக் குடைவரை

கீழ்மாவிலங்கைக் குடைவரை, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கை எனப்படும் ஊரில் காணப்படும் ஒரு குடைவரை ஆகும். திண்டிவத்தில் இருந்து தேசூர் செல்லும் வழியில் திண்டிவனத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் உள்ள பாறை ஒன்றில் திருமாலுக்கான இக்குடைவரை குடையப்பட்டுள்ளது. "முகரப் பெருமாள் கோயில்" என்ற பெயரும் இதற்கு உண்டு.[1]

அமைப்பு தொகு

இது மிகச் சிறிய குடைவரை. இதுவரை அறியப்பட்டவற்றுள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிகச் சிறிய குடைவரை இது என்று கூறப்படுகின்றது.[2] இக்குடைவரையில் தூண்கள் எதுவும் இல்லை. இதன் பின் சுவரில் நிற்கும் நிலையில் திருமாலின் புடைப்புச் சிற்பம் உள்ளது. முகப்பில் குடைவின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் பண்பட்ட அமைப்புக் கொண்டவை அல்ல.[3]

காலம் தொகு

இதன் காலத்தைச் சரியாக அறியக்கூடிய வகையில் கல்வெட்டுக்கள் எதுவும் இக்குடைவரையிலோ அயலிலோ காணப்படவில்லை. இது மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது என்ற கருத்து உள்ளது. அதேவேளை, இங்குள்ள சிற்பத்தின் தன்மையைக் கொண்டு இது இராசசிம்மன் காலத்துக்கும், நந்திவர்மன் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Jauveau-Dubreuil, G., Pallava Antiquities (Translated inti English by V. S. Swaminadha Dikshitar), Vol 1, Asian Educational Services, New Delhi, 1994 (First Edition – 1916), p. 46
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 67
  3. Jauveau-Dubreuil, 1994, p. 46
  4. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 67