குறிப்பு வினைமுற்று
குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது.
எ.கா:அவன் பொன்னன்.
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:
பொன்னன் | - பொருள் |
ஆரூரன் | - இடம் |
ஆதிரையான் | - காலம் |
கண்ணன் | - சினை |
கரியன் | - குணம் |
நடையன் | - தொழில் |
இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.