கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி, கைசிகம் என்பது ஒருவகைப் பண் ஆகும். வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் (திருமால்) இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவார் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர்,. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் கைசிக ஏகாதசி புராணம். இந்தக் கைசிக புராண நாடகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். [1]

தொன்ம வரலாறு தொகு

பாணர் குலத்தின் திருமால் பக்தர் நம்பாடுவார் என்பவர் திருக்குறுங்குடி திருத்தலத்தில் திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை வழிபட கார்த்திகை மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் "எனக்கு இன்று நீ உணவாக வேண்டும்" என்று பிடித்துக்கொண்டான். நம்பாடுவார், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?" ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.என்றார்.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவார், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி்ப், பயங்கரமான சத்தியங்களைச் செய்ததால் அதனை நம்பி. பிரம்ம ராட்சசன் பாணர் நம்பாடுவாரை விட்டு விட்டான்.

நம்பாடுவார் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று மிக மிக உருக்கமாக ஒரு கைசிகப்பண்ணைப் பாடினார்.. அவ்வாறு பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி மறைந்து விட்டது.. எனவே நம்பாடுவாரை உண்ண மறுத்தான். மேலும், தன்னைச் சாப விமோசனம் செய்ய வேண்டினான். நம்பாடுவார் தான் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்கினார்.

இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக புராணம் படிக்கப்படுகிறது[2][3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருவாரூரில் கைசிக புராணம்
  2. கைசிக ஏகாதசியின் மகிமை
  3. அனைத்து தோசங்களைப் போக்கி மோட்சம் தரும் கைசிக ஏகாதசி விரதம்!

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கைசிக_ஏகாதசி&oldid=2875061" இலிருந்து மீள்விக்கப்பட்டது