க. அருள்சுப்பிரமணியம்

க. அருள்சுப்பிரமணியம் (பிறப்பு: 1945) ஈழத்து எழுத்தாளர். அக்கரைகள் பச்சையில்லை, அவர்களுக்கு வயது வந்துவிட்டது போன்ற புதினங்களை எழுதியவர். ஆனந்த விகடன் இதழில் சூரசம்ஹாரம் என்ற தொடர்கதையை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கை, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம். இலங்கையிலும் பின்னர் ஓமானிலும் பணியாற்றினார். திருக்கோணச்சேர ஆலய அறங்காவலர் சபையின் செயலாளராயும் தலைவராயும் இருந்துள்ளார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்.

எழுத்துப் பணி தொகு

'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்ற தனது முதல் புதினத்துடன் தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. එයාලට වයස ඇවිත් என்ற தலைப்பில் சிங்களத்தில் எம். வை. சஃபாருல்லாகான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. 'ஆனந்த விகடன்' நடத்திய பொன்விழா மர்மக்கதைப் போட்டியில் இவரின் ‘தூரத்து ஓவியங்கள்’ என்ற தொடர் முதலிடம் பெற்றது. எனினும் இப்புதினம் ‘அக்கரைகள் பச்சையில்லை’ என்ற தலைப்பில் வீரகேசரி பிரசுரமாக ஏற்கெனவே வெளியாகி விட்டதால் பரிசு பெறும் தகுதியை இழக்க நேர்ந்தது. எனினும், இவரது 'சூரசம்ஹாரம்' என்ற புதினம் பின்னர் ஆனந்தவிகடனில் தொடராக வெளியாயிற்று. 'நான் கெட மாட்டேன்', 'நான் நீதியின் பக்கம்', 'விடியும்' ஆகிய புதினங்களும், 'அம்மாச்சி' சிறுகதைத் தொகுப்பும் வெளியாயின.

திருக்கோணேச்சரத்தின் ஆலய வரலாற்றை 1100 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூலாக 2014 இல் எழுதி வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பு 2015 இல் வெளியானது.

மேற்கோள்கள் தொகு

தளத்தில்
க. அருள்சுப்பிரமணியம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அருள்சுப்பிரமணியம்&oldid=3811497" இலிருந்து மீள்விக்கப்பட்டது