சத்திமுத்தப் புலவர்

சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே" [1]

என்ற பாடலைப் பாடினார். அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.
இவர் பின்னர் களத்தூர் குடிதாங்கி முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பட்டார். இதனை

" வெறும்புற்கையும் அரிதாங
கிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,
எறும்புக்கும் ஆர்பதமில்லை
முன்னாள் என்னிருங் கலியாம்,
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்
சென்று கூடிய பின்,
தெறும்புற் கொல் யானை கவளம்
கொள்ளாமற் றெவிட்டியதே."

என்ற செய்யுளால் அறியலாம் [2]

"தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்து செய்தியைக் குறிப்பிடுகின்றன [3]

மேற்கோள்கள் தொகு

  1. நாரைவிடு தூது, ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்
  2. அபிதான சிந்தாமணி, பக் 567
  3. சிறகின் ஓசை,பக் 33

உசாத்துணை தொகு

சிங்கார வேலு முதலியார், 'அபிதான சிந்தாமணி', ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் வெளியீடு -1983

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திமுத்தப்_புலவர்&oldid=3903208" இலிருந்து மீள்விக்கப்பட்டது