சிதம்பரம் ஆத்மநாதசுவாமி கோயில்

சிதம்பரம் ஆத்மநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் தில்லைவனம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக ஆத்மநாதசுவாமி உள்ளார். இறைவி யோகாம்பாள் ஆவார். இக்கோயில் பல வகைகளில் திருப்பெருந்துறையைப் போல இருப்பதாகக் கூறுவர். மூலவர் தெற்கு நோக்கி உள்ளார். அவர் முழுமையாக காணப்படவில்லை. இறைவியின் பாதம் மட்டுமே உள்ளது.கோயிலின் தீர்த்தம் பாற்கடல் தீர்த்தமாகும். நடராசரின் நடனத்தைக் காண வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது அவருடைய குழந்தை பசியால் அழுததாகவும், சிவன் அக்குழந்தைக்காகப் பாற்கடலை இங்கு பொங்கச் செய்ததாகவும் கூறுவர். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் அத்தீர்த்தத்தின் வட கரையில் கோயில் அமைந்துள்ளது.[1]

அமைப்பு தொகு

மாணிக்கவாசகர் இங்கு குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகர் கட்டிய கோயிலாக இதனைக் கூறுகின்றனர். திருச்சுற்றில் விநாயகர், துர்க்கை, நந்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயில் முன் மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கிய நிலையில் உள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் லிங்க பாண வடிவில் காணப்படுகின்றனர். யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர். பெரும்பாலான கோயில்களில் நின்ற நிலையில் காணப்படும் மாணிக்கவாசகர் இங்கு சின் முத்திரையுடன் அமர்ந்தநிலையில் உள்ளார். மாணிக்கவாசகர் இங்கு வந்தபோது இறைவன் அடியார் வடிவில் வந்து அவரைப் பாடலைக் கேட்க விரும்பியதாகவும் மாணிக்கவாசகர் பாடியதாகவும் கூறுவர். இறைவன் அதனைத் தொகுத்து மாணிக்கவாசகரால் பாடப்பட்டது என்றெழுதி திருச்சிற்றம்பலம் உடையார் என கையொப்பமிட்டார். மறுநாள் அதனை சிதம்பரம் நடராசர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்கவே, பண்டிதர்களிடம் சிவனை காட்டிய மாணிக்கவாசகர், இவரே இதற்கான பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.[1]

விழாக்கள் தொகு

மாணிக்கவாசகர் சிவ பூசையன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் இறைவன் சன்னதியுள் எழுந்தருளி இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.[1]

மேற்கோள்கள் தொகு