செயல்வழிக்கற்றல் முறை

ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும்

செயல்பாட்டு வழி கற்றல்(Activity Based Learning அல்லது ABL) என்பது ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும். இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக கல்வி கற்பிக்க முடியும்.

வகுப்பறை சூழல்
செயல்வழிக் கற்றலை செயல்படுத்தி காட்டுதல்

வரலாறு தொகு

பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவிட் ஹார்ஸ்பர்க் என்பவர், இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியா வந்து தங்க நேரிட்டது. அப்போது செயல்பாட்டு வழி கற்றல் முறையைத் துவக்கினார். அவர் ஒரு புதுமையான சிந்தனையாளராகவும், கவர்ந்திழுக்கும் தலைவராகவும் இருந்தார். கோலார் மாவட்டத்தில் 7-ஏக்கர் (28,000 சதுரமீட்டர்) அளவில் நீல் பாக் பள்ளியை துவக்கி, செயல்பாட்டு வழி கற்றல் முறைக்கு அடித்தளமிட்டார். தமிழ்நாட்டில் செயல்பாட்டு வழி கற்றல் 2003ம் ஆண்டு சென்னைப் பள்ளிகளில் முதலாம், இரண்டாம் வகுப்புகளுக்கு துவக்கப்பட்டு பின்பு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலும் பின்பற்றப்பட்டுவருகிறது.[1]

பயிற்று வழிமுறைகள் தொகு

செயல்வழிக் கற்றலுக்கு சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

 
Let the child explore and learn

ஏணிப்படி தொகு

ஒவ்வொரு பாடப்பிரிவின் கருத்தும், திறனும் மைல்கல்களாகப் பிரிக்கப்பட்டு, ஏணிப்படிகளைப் போல அமைக்கப்படுகின்றன. மாணவர்கள் தாங்களே கற்றல் செயலில் ஈடுபடும் வகையில் ஒவ்வொரு மைல்கல்லும் அமைக்கப்பட்டுள்ளன.

கற்றல் அட்டைகள் தொகு

பாடப் புத்தகத்திற்குப் பதிலாகப் படங்களும் சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாடக்கருத்துகள் அனைத்தும் அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும். இதில் கற்றல் அட்டைகள், குழு அட்டைகள் என இரண்டு வகை உண்டு.

சின்னம் தொகு

ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு செயல்பாடு என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடத்திற்கும் பொதுவான சின்னமும், பாடவாரியாக தனித்தனிச்சின்னமும் உள்ளது. மாணவர்கள் முதலில் தாங்கள் கற்க வேண்டிய பாடப்பகுதியை ஏணிப்படியில் பார்த்து அதற்கு பொருத்தமான சின்னத்தையுடைய அட்டையினை தாங்களாகவே எடுத்து கற்கத் தொடங்குவர்.

நிறம் தொகு

மாணவர்கள் இனம் கண்டு கொள்ளும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நிறம் கொடுக்கப்பட்டுளது.

குழு அட்டை (செயல்பாடு) தொகு

ஏணிப்படியில் உள்ள அனைத்து சின்னங்களும் ஆறு குழு அட்டைகளில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு குழு அட்டைகளில் உள்ளவற்றை முழுமையாக ஆசிரியரின் துணையோடு கற்பர். மூன்று, நான்கு, ஐந்தாவது குழு அட்டைகளில் உள்ளவற்றை ஆசிரியரின் மேற்பார்வையோடு, சக மாணவர்களுடன் துணையோடு கற்பர். ஆறாவது குழு அட்டையில் உள்ளவற்றை மாணவர்கள் தனியாக கற்பர்.

கம்பிப்பந்தல் தொகு

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் கம்பிப்பந்தலில் தொங்கவிடப்படும்.

கீழ் மட்டக் கரும்பலகை தொகு

வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கரும்பலகையில் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டு அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதில் மாணவர்கள் அந்தந்த பாடத்திற்கான எழுத்து பயிற்சியினை மேற்கொள்வர்.

கால நிலை அட்டவணை தொகு

அன்றாடம் ஏற்படும் வானிலை மாற்றங்களை உற்றுநோக்கி வகுப்பறையில் உள்ள காலநிலை அட்டவணையில் மாணவர்கள் குறிப்பிடுவர்.

ஆரோக்ய சக்கரம் தொகு

மாணவர்களின் சுத்தத்துக்கும், சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்கும் துணை புரியும் வகையில் படங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆசிரியரின் துணையோடு மாணவர்கள் இச்செயல்பாட்டினை மேற்கொள்வர்.

சுய வருகைப் பதிவேடு தொகு

மாணவர்கள் தமது வருகையை தாமே பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டப் பதிவேடு.

கற்றல் அடைவுத்திறன் பதிவேடு தொகு

மாணவர்கள் கற்றறிந்த மைல்கல்களின் விவரங்கள் குறித்து வைக்கப்படும்.

செயல் வழிக் கற்றல் முறையின் சிறப்புகள் தொகு

ஒவ்வொரு செயலிலும் மாணவர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கல்வி முறையாகும். மேலும், மாணவர்கள் சில நாட்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலும் எந்த பாடப்பகுதியினையும் தவற விடாதபடி, தாங்கள் கடைசியாக பயின்ற பாடப்பகுதியிலிருந்து தொடர்ந்து பயிலும்படியாக அமையப்பெற்ற முறையாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்வழிக்கற்றல்_முறை&oldid=3555671" இலிருந்து மீள்விக்கப்பட்டது