சோழகங்கம் (புதினம்)

சோழகங்கம் (Cholagangam) கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்டு எழுத்தாளர் சக்திஸ்ரீயால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். இராஜேந்திர சோழர் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த புதினம் இது. அவர் தனது ஆட்சிக்காலத்தில் நான்கு திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி, சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும் வென்றமை குறித்து விளக்குகிறது.

சோழகங்கம்
நூல் அட்டை
நூலாசிரியர்சக்தி ஸ்ரீ
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2012 (முதல் பதிப்பு)

சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற “உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்…” எனும் சாசன வரிகளையும்,

“பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” எனும் ராஜேந்திரசோழனின் விருதுப்பெயர்களுள் ஒன்றையும்,

தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள ராஜேந்திரசோழனின் 19ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த சாசனமொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் “ஆர்யதேசம், மத்தியதேசம், கௌடதேசம்” என மூன்று பகுதிகள் குறித்த அறிஞர்களின் குறிப்புகளையும் ஆதாரமாகக்கொண்டு இப்புதினம் இயற்றப்பட்டிருக்கிறது.


இப்புதினத்தில், யாமினி சுல்தான் முஹமது கஜினி முதல் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மன்னர் சங்க்ரம விஜயோத்துங்க வர்மன் வரையிலான ராஜேந்திர சோழனின் சமகாலத்து மன்னர்கள் பலரும் இடம்பெற்றிருக்கின்றனர். ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி வரிகள் அனைத்திற்கும் பொருள் சொல்லும் ஓர் புதினம்.

அத்தியாயங்கள் தொகு

பாகம் 1

சோழ தேசத்தின் பாதுகாப்பு அரண்கள் - உத்தராபதம் மற்றும் மத்திய தேசத்து அரசுகளின் நிலை - இராஜேந்திர சோழன், அவர் நண்பர்கள் மற்றும் எதிரிகள் - சக்கரக்கோட்டமும் வேங்கியும் - சர்வா நாட்டின் மன்னன் சந்திரதேவனின் சூழ்ச்சிகள் - அவந்தி நதி தீரத்து சோழப்படைப் பாசறை - சந்திர தேவன் மகளின் சோமநாதபுர விஜயம் - மதுர மண்டலம் மீட்கப்படுதல் - சோழக் கடற்படை சதுர்ஸ்தானத்தை மீட்டல் - சோழப்படையை வீழ்த்தும் சுல்தானின் திட்டம் - சோழப்படை சிந்து நதியைக் கடந்து செல்லல் - போரும் முதல் பாக முடிவும்

பாகம் 2

சோழப் பிரமுகர்களின் கடார யாத்திரை- கோசல தேசத்தின் நிலை - ஈழம் மற்றும் மேலைச் சளுக்கியத்தின் நிலை - கடாரத்திலிருந்து செய்தி - புதிய ஆலயப்பணி - கங்கை நீர் சோழ நாட்டை அடைதல் - சோழதேசத்தின் தென்பகுதி நிலை - தண்டபுக்தியில் சாமந்த சேனனின் பணி - கோசலப் போரும் அதன் முடிவும் - சோழப்படை தென்பகுதியைக் காக்கச் செல்லல் - பால சாம்ராஜ்யத்தில் போர் - சோழக் கடற்படை கடாரம் நோக்கிச் செல்லல் - புதிய ஆலயப் பணியின் தலைமைச் சிற்பிக்கு உண்டான இன்னல் - கடாரப் போரும் முடிவும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழகங்கம்_(புதினம்)&oldid=3650000" இலிருந்து மீள்விக்கப்பட்டது