தந்தையாம் கடவுள்

தந்தையாம் கடவுள் (God the Father) என்னும் பட்டம், ஒரு கடவுட் கொள்கையை உடைய யூத, கிறித்தவ மதப்பிரிவுகளால் தரப்படும் பட்டங்களுள் ஒன்றாகும். யூத மதத்தினருக்கு கடவுள் படைத்து, காத்து வழிநடத்துபவராயிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவற்றோடு கிறித்தவத்தில் திரித்துவக் கோட்பாட்டினை எடுத்தியம்பும் விதமாகவும் கடவுளுக்கு இப் பெயர் அமைந்துள்ளது.

தந்தையாகிய கடவுள்

கிறிஸ்தவ இறையியல் தொகு

இறைத்தந்தை அல்லது தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆள் (நபர்) ஆவார். இறை வார்த்தையாகிய மகனை நித்தியத்திற்கும் (முடிவில்லாமல்) பிறப்பிப்பதால் இவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்; படைப்பின் சிகரமாக மானிடரைப் படைத்து,[1] உலகத்தில் உள்ள அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். இயற்கையின் வழியாக தன்னை அறிந்து, அன்பு செய்து, தன்னை அடைய கடவுள் படைத்த மனிதன், உலகத்துக்கு (சிலை வழிபாடுகளுக்கு) அடிமையாகி கடவுளை புறக்கணித்து பாவம் செய்தான். கடவுள் தன்னை உலகத்துக்கு வெளிப்படுத்தவும், தன் மகன் வழியாக உலகைப் பாவத்தில் இருந்து மீட்கவும் திருவுளம் கொண்டார்.[2] இது மீட்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. தந்தையாகிய கடவுள் ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, தன் மகனின் வருகைக்காக உலகைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் அவரது வருகையைப் பற்றி முன்னறிவித்தனர். காலங்கள் நிறைவேறியபோது, மகனாகிய கடவுள் மனிதராகப் பிறந்து, மக்களின் பாவங்களைத் தன்மேல் சுமந்து தந்தையின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றினார். அவர் மீண்டும் விண்ணகம் சென்று, தந்தையின் மாட்சியில் இருக்கிறார்.[3] தந்தையிடம் இருந்தும் மகனிடம் இருந்தும் புறப்படும் தூய ஆவியின் வழியாக, கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்பு பெறும்படியாக இறையரசின் இயக்கமாக திருச்சபை நிறுவப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் தொகு

"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்"[4] என்று விவிலியத்தின் முதல் வாக்கியமே கூறுகிறது.

கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியாக, பின்வரும் செய்தி காணப்படுகிறது: "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்."[5]

கடவுள் தனது மறைபொருளான பெயரை, யாவே அல்லது இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே[6] என்று மோசேயிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

விடுதலைப் பயணம் நூல், ஆண்டவரின் இரக்கத்தையும் நீதியையும் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்."[7]

"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்."[8] என்று தாவீது அரசர் பாடுகிறார்.

கடவுளின் விண்ணக மாட்சியைப் பற்றி இறைவாக்கினர் தானியேல் பின்வருமாறு எழுதி இருக்கிறார்: "நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்; பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்."[9]

புதிய ஏற்பாட்டில் தொகு

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம்"[10] என்று கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்.

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்"[11] என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகம் குறிப்பிடுகிறது.

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கனவே தீர்ப்புப் பெற்று விட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை."[12] என்று இயேசுவே கூறியதாக யோவான் நற்செய்தியில் காணப்படுகிறது.

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்"[13] என்று எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

ஆதாரங்கள் தொகு

  1. தொடக்க நூல் 1:1 "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்."
  2. யோவான் 3:17 "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
  3. மாற்கு 16:19 'ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.'
  4. தொடக்க நூல் 1:1
  5. தொடக்க நூல் 22:17-18
  6. விடுதலைப் பயணம் 3:14
  7. விடுதலைப் பயணம் 34:6-7
  8. திருப்பாடல்கள் 23:1-3
  9. தானியேல் 7:9-10
  10. 2 கொரிந்தியர் 1:3
  11. எபிரேயர் 1:1-2
  12. யோவான் 3:17-18
  13. எபேசியர் 1:3-4

கலையில் தந்தையாம் கடவுள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தையாம்_கடவுள்&oldid=2731719" இலிருந்து மீள்விக்கப்பட்டது