தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்

ஆதிகோணநாயகர் கோயில் அல்லது ஆதிகோணேஸ்வரம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிமீ தொலைவில் உள்ள தம்பலகாமத்தில் உள்ள கோயில்.

ஆதிகோணேசுவரம்

வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும், இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது.

வரலாறு தொகு

போர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும்.

குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கிபி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும், காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையில் ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.

இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.

மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.