தஹர வித்யா அல்லது தகர வித்தை என்பது நம்முள்ளே ஒரு வெளி (தஹரம், ஆகாயம், (Space)- அகவெளி உள்ளது. அதில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தியானத்தின் மூலம் தேடுவதும், அடைவதுமே தஹர வித்யா அல்லது தஹராகாச வித்தை எனப்படும். தஹர வித்தை சாந்தோக்கிய உபநிடதத்தின் எட்டாம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

மார்பின் உள்ளே ஒரு வெளி ‘தாமரை மொட்டுப் போன்ற இதயம்’; நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.

இந்த இதய வெளிக்குள்ளே உள்ள பொருளைத் தேட வேண்டும், அறிய விரும்ப வேண்டும். அதற்கான தியானப் பயிற்சி (வித்யை) செய்ய வேண்டும். இவ்வித்தையை பயில பிரம்மச்சர்ய விரதம் அவசியம். [1].

புற உலகில் என்னென்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறமோ அவையனைத்தையும் அகவெளியில் உறையும் இறைவனைத் தஹர வித்யா மூலம் தியானிப்பதன் மூலம் அடைய இயலும்.

முதற்படி தொகு

தஹர வித்யா எனும் இறை தியானத்தை செய்பவன் உலக இன்பங்களை இறைவனின் வாயிலாக மட்டுமே அனுபவிக்க இயலும் என்பதையும், இவ்வித்யாவின் மூலம் என்ன நினைத்தாலும் அது நடக்கும் என்பதை விளக்கப்படுகிறது. அகவெளியில் இறைவனை தியானிப்பவன் பித்ரு லோகத்தை விரும்பினால் இறந்த முன்னோர்களான தந்தை, தாய், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அவன் முன் தோன்றி மகிழ்விப்பார்கள். மேலும் இவ்வித்தையின் மூலம் அவன் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் அடைந்து மகிழ்வான்[2].

இரண்டாம்படி தொகு

பஞ்சபூதங்களின் அம்சமான உடல்-மனம், இறைவனின் அம்சமான ஆன்மா ஆகிய இரண்டின் சேர்க்கையே மனிதன். ஆத்ம ஞானம் காரணமாக மனிதன் தன்னை உடல்-மனச்சேர்க்கையிலிருந்து விடுபட்டு, இறைவனை அடைந்து, சொந்த இயல்பாகிய ஆன்மாவாக நிலைபெறுகிறான்.[3]

அழியக்கூடிய உடல்-மனம் மற்றும் அழிவற்றதான ஜீவாத்மா ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துபவர் இறைவன். தூக்கத்தில் நம் உடலிருந்து பிரிகின்ற மனம் ஜீவாத்மாவில் ஒடுங்குகிறது. ஜீவாத்மா பரமாத்மாவில் ஒடுங்குகிறது. இந்த உண்மையை உணர்பவன் தினந்தோறும் இறையுலகத்திற்குச் சென்று, இறைவனிடம் ஒன்றுகலப்பதை உணர்கிறான்.[4].

மூன்றாம்படி தொகு

தஹர வித்யாவின் மூலம் இறையுலகம், இறைக்காட்சி அல்லது இறையனுபூதியின் விளக்கமும் கூறப்படுகிறது. அதை அடைவதற்கான அடிப்படை தகுதியான பிரம்மச்சர்யம் ஒன்று மட்டுமே.[5]

நான்காம்படி தொகு

இறையுலககிற்கு செல்வது யார், எப்போது, எவ்வாறு செல்வர் போன்ற கேள்விகளுக்கு தஹர வித்யையின் இப்பகுதி விளக்குகிறது.

சூரியனே இறையுலகின் வாசல். ஓங்கார மந்திரத்தை அறிந்து தியானித்தவர்கள் இந்த வாசலில் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மறுக்கப்படுகிறார்கள்.

இதயநாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையினை பிளந்து உயிர் வெளிக் கிளம்புகிறது. உச்சந்தலை வழியாக உயிரை மேலே விடுப்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் மீண்டும் மீண்டும் பிறந்து, பல்வேறு கீழ் உலகங்களில் பிறந்து உழல்கிறான். ஆசைகளற்ற யோகிகளால் மட்டுமே பிரம்ம ரந்திரம் வழியாக உயிரை வெளியேற்ற முடியும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. சாந்தோக்கிய உபநிடதம், எட்டாம் அத்தியாயம்
  2. சாந்தோக்கிய உபநிடதம், அத்தியாயம், 8, பகுதி 2, மந்திரம் 1 முதல் 10 முடிய
  3. சாந்தோக்கிய உபநிடதம், அத்தியாயம் 8, பகுதி 3, மந்திரம் 3 முதல் 4 முடிய
  4. சாந்தோக்கிய உபநிடதம், அத்தியாயம் 8, பகுதி 3, மந்திரம் 5
  5. சாந்தோக்கிய உபநிடதம், 8, பகுதி 5, மந்திரம் 1 முதல் 4 முடிய
  6. சாந்தோக்கிய உபநிடதம், அத்தியாயம் 8, பகுதி 6, மந்திரம் 1 முதல் 6 முடிய

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஹர_வித்யா&oldid=3913652" இலிருந்து மீள்விக்கப்பட்டது