நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி அவ் ஊரில் வீற்றிருக்கும் பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பெற்றவர். இவர் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்துப் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
11-ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் (விநாயகர் 1 +சிவபெருமான் 1 +தொண்டர் அந்தாதி 1 + ஞானசம்பந்தர் பற்றி 6 + நாவுக்கரசர் பற்றி 1 =10) இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருசண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திரு உலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியனவாகும்.
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களின் மூலம் அறியலாம்.
இவருக்குப் பிற்காலத்தில் நம்பி என்ற பெயரில் வாழ்ந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பெரும்பற்றப்புலியூர் நம்பி ஆவார்.