நல்லந்துவனார்

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:[1]

அகநானூறு 43 – பாடல் 1
கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33
நற்றிணை 88 –பாடல் 1
பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல்-விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள்-சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார்.

சொல் விளக்கம்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்[2]

தொல்காப்பியம்

  • உயிரினுஞ் சிறந்தன்று நாண் கலித்தொகை 147
உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று (தொல்காப்பியம், களவியல் 1059)

திருக்குறள்

  • வேண்டுதல் வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையான் இசை – கலித்தொகை 143
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் 265
  • விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனிலாளன் – கலித்தொகை 144
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள் 1218
  • பிறர் நோயும் தந்நோய்போற் போற்றி அறன்றிதல் – கலித்தொகை 139
அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை - குறள் 315
  • நோக்குங்கால் நோக்கின் அணங்காகும் சாயலாய் – கலித்தொகை 131
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 1094
  • காமமும் கௌவையும் என்றிவை வலிதின் உயிர்க் காவாத் தூங்கியாங்கு – கலித்தொகை 142
காமமும் நாணும் உயிர்க் காவாத் தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து - குறள் 1163

சிலப்பதிகாரம்

  • மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை – பரிபாடல் 20
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என்று (கோவலன் மாதவியைப் பிரிந்தான்) - சிலப்பதிகாரம் கானல்வரி

நன்னெறி

  1. தம்புகழ் கேட்டார்போல் தலைசாத்து மரம் துஞ்ச[3]
  2. அறஞ்செய்யான் --- நெஞ்சம்போல் --- இருள் தூர்பு[4]
  3. நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை [5]
  4. அரசன் பின் அல்லது --- அறநெறி நிறுக்கல்லாது[6]

உலகியல்

  1. பாம்பும் அவைப்படின் உய்யுமாம்[7]
  2. தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் [8]
  3. பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப[9]

மெய்யுணர்வு

  1. அரிதினின் தோன்றிய யாக்கை [10]
  2. தொல்வினைக்கு என் பேதுற்றனை [11]

உவமை

  1. செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் [12]
  2. உப்பியல் பாவை உறை உற்றது போல் [13]
  3. மருந்து அறைகோடலின் கொடிது --- தலைவன் கைவிடல் [6]
  4. கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் --- இருள் வர [14]
  5. அல்லது கொடுப்பவன் அருள் கொண்ட முகம் போல --- மதி சீப்ப [15]
  6. அறுகு பதியா அம்பி [9]

வேதம்

முக்கோல் அந்தணர் முதுமொழி [16]

வாழ்வியல்

மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் [8]

சத்தியம் செய்யும் பழக்கம்

  1. தலைதொட்டேன் தண்பரங்குன்று [9]
  2. பெருங்கடல் தெய்வநீர் நோக்கித் தெளித்து, --- மணந்தான் [17]

பொங்கல் திருநாள் நினைவு

பூளை பொலமலர் ஆவிரை வேய் வென்ற தோளன் எமக்கு ஈந்த பூ [13]
(பொங்கலுக்குக் காப்புக் கட்டும்போதும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்குத் தோரணம் கட்டும்போதும் இக்காலத்திலும் பூளைப்பூ, ஆவிரம்பூ, மூங்கில்-கொத்து ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டுகின்றனர்.)

புராணக் கதை

  1. ஆவிரங்கண்ணி நெடியோன் மகன் (முருகன்) [7]
  2. நேமியான் நிறம் போல இருள்வர [3]
  3. மாயவன் மார்பில் திருப்போல அவள் சேர [18]

அரசியல்

  1. தென்னவற் தெளித்த தேஎம் போல இன்னகை எய்தினன் [19]
  2. போர்வல் வழுதிக்கு அருந்திறை போல [10]
  3. முரைசு மூன்று ஆள்பவர் – கலித்தொகை 132

அசுணமா விலங்கு -இசைக்கு மயங்கும் உயிரினம்

மறையில் தன் யாழ் வேட்ட மானை அருளாது அறை கொன்று --- பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் [20]

மகன்றில் விலங்கு - dolphin போன்ற நீர்வாழ் உயிரினம்

மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி [21]

பொறியியல்

பொறிசெய் புனைபாவை போல --- செல்வேன் [22]

தமிழ்ச்சங்கம்

  1. மாசில் பனுவற் புலவர் புகல் புலநாவிற் புனைந்த நன்கவிதை [9]
  2. தமிழ்வையைத் தண்ணம் புனல் [9]

தமிழ்

  1. வானேர்பு இரங்கி [23] - செய்பு வாய்பாட்டு வினையெச்சம்
  2. பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக [24] - பாண்டியம் = பாடுபடுதல்
  3. துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ [18] - இறையிறை = சிறிது சிறிதாக
  4. கடல் விளை அமுதம் (உப்பு) [11]

மேற்கோள் தொகு

  1. நல்லந்துவனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. கலித்தொகை 133
  3. 3.0 3.1 கலித்தொகை 119
  4. கலித்தொகை120
  5. கலித்தொகை 125
  6. 6.0 6.1 கலித்தொகை 129
  7. 7.0 7.1 கலித்தொகை 140
  8. 8.0 8.1 பரிபாடல் 20
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 பரிபாடல் 6
  10. 10.0 10.1 கலித்தொகை 141
  11. 11.0 11.1 நற்றிணை 88
  12. கலித்தொகை 118
  13. 13.0 13.1 கலித்தொகை 138
  14. கலித்தொகை 130
  15. கலித்தொகை 149
  16. கலித்தொகை 126
  17. கலித்தொகை 131
  18. 18.0 18.1 கலித்தொகை 144
  19. கலித்தொகை143
  20. கலித்தொகை 143
  21. பரிபாடல் 8
  22. கலித்தொகை 145
  23. அகம் 43
  24. கலித்தொகை 136
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லந்துவனார்&oldid=3618553" இலிருந்து மீள்விக்கப்பட்டது