புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது.

நாகநாட்டின் தலைநகர் நாகநீள்நகர். நாகமரம் ஓங்கியிருந்ததால் இந்த நகர் இப் பெயரைப் பெற்றது. [1]

மணிபல்லவத் தீவிலிருந்த அரியணை ஒன்றை நாகநாட்டை ஆண்ட இரண்டு அரசர்கள் தமது தமது என உரிமை கொண்டாடி எடுத்துச்செல்லப் போரிட்டனர். அப்போது தரும்பீடிகையில் தோன்றிய புத்தத் துறவி ஒருவர் அதனைத் தனதெனக் கூறி அதன்மேல் அமர்ந்து அவர்களுக்கு அறவழி புகட்டினார். [2]

புகார் நகரத்துக்கு அப்பால் நாகநாடு 400 யோசனை தூரம் பரந்திருந்தது. இது பூமி நடுங்கும் காலத்து அழியும். இன்றைக்கு ஏழாம் நாள் அழியும். புத்தமுனிவர் ஒருவர் இதனை நாகநாட்டு அரசனுக்கு எடுத்துரைத்தார். அவன் தன் நாட்டு மக்களுடனும், ஆடுமாடுகளுடனும் அவந்தி நாட்டுக் காயங்கரை என்னும் ஆற்றங்கரைக்குச் சென்று தங்கினான். புத்தமுனிவர் சொன்னவாறே புகார் நகரமும், அதனை அடுத்திருந்த தீவாகிய 400 யோசனை நாகநாடும் நிலநடுக்கத்தால் அழிந்துபோயிற்று. [3]

நாகநாட்டை வளைவணன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் மனைவி வாசமயிலை. இருவருக்கும் பிறந்த மகள் பீலிவளை. பீலிவளையைச் சோழ இளவரசன் துய்த்தான். [4]

சோழனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த குழந்தையை, புத்தமுனிவன், புகாரிடமிருந்து நாக நாட்டுக்கு வந்து தன்னை வழிபட்ட கம்பளச்செட்டி என்னும் வணிகனிடம் கொடுத்து, இக்குழந்தை சோழன் குழந்தை என்னும் வரலாற்றையும் கூறி, சோழனிடம் கொடுக்கச் சொன்னான். வணிகன் கம்பளச்செட்டி குழந்தையுடன் தாயகம் மீளும்போது அவனது மரக்கலம் புயலில் சிக்கிக் கவிழ்ந்துபோக, குழந்தை மாண்டது. நீந்திப் பிழைத்து வந்த வாணிகன், சோழ அரசன் வடிவேற்கிள்ளி என்பவனிடம் நிகழ்ந்தது கூறினான். சோழன் குழந்தையைக் கடலிலும், கடற்கரையிலும், காடுகளிலும் தேடித் திரியும் துக்கத்தில் இந்திரவிழா கொண்டாட மறந்துவிட்டான். இந்திர விழா புகார் நகரிலும், நாகநாட்டு மணிபல்லவத் தீவிலும் கொண்டாடப்படும். இது கொண்டாடப்படாததால் மணிபல்லவத் தீவிலிருந்த மணிமேகலைத் தெய்வம் சாபமிட்டது. சாபத்தால் புகார் நகரமும், நாகநாட்டு 400 யோசனை நிலப்பரப்பும் கடற்கோளுக்கு இரையானது. [5]

கருதுகோள் தொகு

  • நாகநாடு என்பது தற்போதுள்ள அந்தமான் நிக்கோபார் நீவுகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு பெருநிலப் பகுதி. அதன் தீவுகளில் ஒன்று மணிபல்லவம். இவை சங்ககாலத்துக்குப் பின்னர், கோவலனின் மகள் மணிமேகலை வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது கடலால் கொள்ளப்பட்டது.
  • நாகநாடு என்பது இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த நாகர் அரசு ஆகும். விஜயனும் அவனது தோழர்களும் இலங்கைத் தீவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் இயக்கர் என்றும் நாகர் என்றும் இரு இனக் குழுவினர் வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அத்துடன் மணிபல்லவம் என்பது இன்றைய நயினாதீவு ஆகும். இத்தீவைச் சிங்களத்தில் நாகதீப, அதாவது நாகர்தீவு என அழைக்கப்படுகிறது. இங்கேதான் அரியணைப் போட்டியைத் தீர்த்து வைக்க புத்தர் வந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்புகள் தொகு

  1. நாகம்நீள் நகரொடு நாகநா டதனொடு போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் – சிலப்பதிகாரம் 1-21
  2. மணிமேகலை 8-54
  3. மணிமேகலை – காதை 9
  4. மணிமேகலை 24-54
  5. மணிமேகலை 25-177மு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகநாடு&oldid=3701780" இலிருந்து மீள்விக்கப்பட்டது