நாடி சோதிடம்

நாடி சோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும். பண்டைய முனிவர்கள் காலத்தில், வெப்பமண்டல இராசி மற்றும் 27 பக்கவாட்டு நட்சத்திரங்கள் அமைப்புடன் (Tropical Zodiac & 27 Sidereal Nakshatras system) பயன்படுத்தினர். இந்த முறை சப்தரிசி நாடி எனப்படும் ஒரு பண்டைய தமிழ் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளது.[1]

அகத்தியர்

ஆண்களாயின் வலது கட்டைவிரல்(பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது.

வரலாறு தொகு

வட்டெழுத்துக்கள்

இதன் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவையாகும். இந்த சுவடிகளின் ஆசிரியர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இச்சுவடிகள் 2000 வருட பழமை வாய்ந்தவை. இச்சுவடிகளை ஏழு முனிவர்களான (சப்தரிஷிகளான) அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர், பிரிகு, வசிஸ்டர், மற்றும் வால்மீகி இச்சுவடிகளை எழுதியவர்களாக கூறப்பட்டிருக்கின்றன.[2] ஆனால் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஒலைகள் கிடைக்கின்றன, வாசிப்புகளும் அவர் பெயரிலேயே வாசிக்கப்படுகின்றன. இந்த போதனைக்குரிய சோதிடர்கள் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க வைத்தீசுவரன் கோயிலைசுற்றி வாழ்ந்து வருகின்றார்கள்.

பிரித்தானியர்கள் பங்கு

இந்த நாடி இலைகள் ஆரம்ப காலகட்டத்தில் (சுவடிகள்) தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பிரித்தானியர்கள் பிரித்தானிய ஆட்சியின்பொழுது நாடி இலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகளில் அதீத அக்கறை காட்டியதால் இங்கிருந்து சுவடிகள் சிலவற்றை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் பல இலைகள் இங்கேயே பல செல்வந்தர்களின் வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர். சில இலைகள் அழிந்து விட்டன, மீதமுள்ளவைகள் ஏலம் விடப்பட்டன. இவையெல்லாம் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன. இந்த ஒலைச் சுவடிகளையே சோதிட குடும்பத்தினர் வைத்தீசுவரன் கோயிலில் பத்திரப்படுத்திவைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.[1] பரணிடப்பட்டது 2009-07-03 at the வந்தவழி இயந்திரம்

ஆன்மா குறித்த தகவல்கள்

நாடி சோதிடர்கள் 40% மட்டுமே ஆன்மாவின் எதிர்காலம் குறித்த தகவல்களை அச்சுவடியில் இருந்து தகவல்கள் பெற்று கூறுகின்றனர். அத்தகவல்கள் அவர்களுடைய நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத் தகவல்களோடு மிகவும் பொருந்தி இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். மேலும் எதிர்காலத் தகவல்களையும் தருகின்றனர்.

நாடி சோதிடம் பார்க்கும் முறை தொகு

ரேகைகள்

வழக்கமாக, சோதிடர் அல்லது வாசிப்பாளர் (வாசிப்பாளர் என்பதே பொருத்தமாகும்) சோதிடம் பார்க்கவருபவர்களின் கை கட்டை விரலின் கைரேகையை பெறுகின்றனர். ஆண்களாயிருந்தால் வலது கை கட்டைவிரல், பெண்களாயிருந்தால் இடதுகை கட்டை விரல் ரேகையினை பெறுகின்றனர். பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை அவர்கள் குறைந்த பட்சமாக சேமித்து வைத்துள்ள களஞ்சியத்திலிருந்து தேடுகின்றனர். அக்கட்டுகளிலிருந்து அவருடையை (சோதிடம் பார்க்கும் நம்பிக்கையாளரின்) தனி பனை ஒலையை பிரித்தெடுக்கின்றனர். இதற்காக அவர்கள் கேட்கும் சில கேள்விகளைத் தொடுக்கின்றனர் அதற்கு ஆம் இல்லை என்ற பதிலை மட்டுமே தந்தால் போதும். சிலருடைய ஒலை இரண்டு கேள்விகளிலேயே கிடைத்துவிடும்.

ஆம் இல்லை பதில்

உதாரணத்திற்கு ஒருவருடைய பெயரின் (பாலசுந்தரம்) முதலெழுத்து "பா" "ந்" "ம்" அல்லது கடை, இடை எழுத்துக்கள் உயிர் மெய், இடை மெய் இன எழுத்துக்களில் வருகின்றதா என்று வினவி அவ்வெழுத்துகளையும் அவ்வோலையிலிருந்து படிப்பர் அவற்றுக்கு ஆம் அல்லது இல்லை என்று கூறினால் போதும். இவையனைத்தும் வெளிப்படையாகவே சந்தேகத்திற்கு இடமின்றியே கேடகப்படும். இந்த இரண்டு பதிலைத் தவிர வேறு எந்த பதிலையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

முழுத் தகவல்கள்

இப்படி ஒவ்வொரு ஓலையாக புரட்டி நம்முன் படிப்பர். சில பல வினாடிகளில் அல்லது நிமிடங்களில் நம்பிக்கையாளரின் முழுத் தகல்வல்கள் அனைத்தையும் ஒரு ஓலையில் இருந்து படிப்பர் நம்பிக்கையாளரின் பெயர், வயது, பிறந்த தேதி, மாதம், வருடம், இராசி, தாய், தந்தையர் பெயர், மனைவியின் பெயர், மனைவியின் தாய் தந்தையர் பெயர், தமையனார், தமக்கைகள், மகன்கள், மகள்கள் இவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடைய வயது என்று அனைத்தையும் மிகச்சரியாக படிப்பர். நம்பிக்கையாளர் அனைத்திற்கும் ஆம் ஆம் என்றும் கூறுகிறுகின்ற நிலைக்கு ஆளாகின்ற வகையில் அவையனைத்தும் மிகச்சரியாக இருக்கும்.

இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்கள்

அதற்கு பின் அவர்கள் விரும்புகின்ற காண்டங்களை (காண்டங்களை பார்க்கவும்) நம்பிக்கையாளரின் தேவைக்கேற்ப பிரித்து அவர் முன் வாசிக்கப்படுகின்றது. இவையனைத்தும் ஒலி நாடாவில் பதியவைத்தும் தரப்படுகின்றது. காண்டங்களின் படி முற்பிறவித் தகவலையும் தருகின்றனர். இவையனைத்தும் அகத்திய முனிவர் மற்றும் அவர்களது சீடர்களின் பெயர்களாலேயே வாசிக்கப்படுகின்றன.

சில நேரங்களில் நம்பிக்கையாளரின் சரியான தனி ஒலைக் கிடைக்காவிடின் அவரின் ஒலையை மீண்டும் வைத்தீசுவரன் கோயில் (அவர்கள் கூறும் தகவல்) சென்று தேடி எடுத்துவந்து பின் வாசிப்பர். [2] பரணிடப்பட்டது 2009-07-25 at the வந்தவழி இயந்திரம்

இச்சோதிட முறையைக் குறிக்கப் பயன்படும் சொற்கள் தொகு

  • காண்டம் / காண்டம் பார்த்தல்
  • நாடி வாக்கியம்

அகத்தியர் ஏடுகள் தொகு

இந்த ஏடுகளை அகத்தியர் என்று அறியப்படும் ஒருவர் அல்லது பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

ஒருவர் குறித்து இவ்வாறு எழுதிவைக்கப்படும் ஏடுகள் பல காண்டங்களாக அமைகின்றன. இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம்.

  • முதலாவது காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
  • இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
  • மூன்றாவது காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது
  • நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
  • ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
  • ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
  • ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
  • எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது
  • ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
  • பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
  • பதினோராவது காண்டம் - இலாபங்கள் தொடர்பாக கூறுவது
  • பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
  • சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
  • தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
  • ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
  • திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது

நாடி சோதிடம் குறித்த நம்பிக்கைகள் தொகு

ஒரு திறந்த அறிவாக, கல்விக்கூடங்களில் பரவலாக கற்பிக்கப்படும் ஒன்றாக இத்துறை காணப்படாததாலும் பொதுத்தளத்தில் இதுபற்றிய உரையாடல்கள் மிகக்குறைவாகவே இடம்பெறுவதாலும் நாடி சோதிடம் குறித்த தகவல்கள் வாய்ச்சொல் மூலமாகவும் ஊகங்கள் மூலமாகவுமே பெறப்படத்தக்கனவாக உள்ளன.

இவ்வாறாக பரவலாக இத்துறைகுறித்து காணப்படும் நம்பிக்கைகள் வருமாறு

  • மனிதர்களின் வாழ்வும், வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளும் முன்கூட்டியே எதிர்வுகூறப்படக்கூடியன. எல்லா மனிதர்களது வாழ்க்கையும் குறித்த ஏதோவோர் கோலத்தினடிப்படையில் அமைகின்றது.
  • கலியுகத்தில் பிறக்கும் அத்தனை பேருக்குமான இத்தகைய ஏடுகள் அகத்தியரால் எழுதப்படுள்ளன.
  • ஒவ்வொருவருக்கும் அவர்கள் எந்த திகதியில் குறிப்பாக இந்த ஏட்டினை படிக்க வருவார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு. ஏடு படிக்க வரும் திகதி குறித்த தகவல்களும்கூட அகத்தியரால் அவ்வவர்களுக்கென குறிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வேடுகள் யாவும் சிதம்பரத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்தவை. சிதம்பரத்திலிருந்தே இவை பெறப்படுகின்றன.

நாடி சோதிடம் பார்ப்பவர்களால் வழங்கப்படும் தகவல்கள் தொகு

கைரேகைகளைக் கொண்டு குறித்த நபர்களுக்குரிய ஏடுகளை கண்டுபிடித்து அவற்றை படித்து விளக்கங்கூறும் பணியினை செய்வதற்கென பல இடங்களிலும் பலர் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் தம்மை விளம்பரப்படுத்தி தொழில் செய்கின்றனர்.

இத்தகைய நாடி சோதிட பார்ப்பவர்கள், அவர்களிடம் சென்று கைரேகை கொடுத்து ஏடு பெற்றவர்களுக்கு அவ்வேடுகளை படித்து விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறான விளக்கங்களில் இருக்கும் பொதுத்தன்மைகள் கீழே பட்டியலிடப்படுகின்றன.

  • வயது, பெயர் , பெற்றோர்பெயர், தொழில் போன்றன அச்சொட்டாக கூறப்படுதல்

நாடி சோதிடம் குறித்த எதிர்நிலை கருத்துக்கள் தொகு

நாடி சோதிடம் ஒரு மூட நம்பிக்கையாகவே ஒரு பிரிவினரால் நோக்கப்படுகின்றது. நாடி சோதிடத்தினை விஞ்ஞான முறையாக, தர்க்க றிவியல் கோட்பாட்டு ரீதியில் விளக்க முடியாமையினை இப்பிரிவினர் தமது கருத்துக்களுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.

மாய வித்தைக் கலைகள் போன்று ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது psuedo ஈடுபாடகவே இதைக் கருதலாம் என்ற கருத்தும் உண்டு.

  • சிலர் இவர்கள் ஆம் இல்லை என்ற வார்த்தைகளை வைத்தே அதற்குண்டான எழுத்துக்களுடன் பொருந்தி வரும் பெயர்களை அறிகின்றனர் என்ற கருத்தும் வருகின்றது. இதை பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடிக்க விளையாடும் பொழுது இந்த கட்டத்தில் அந்த எழுத்து இருக்கின்றதா? இல்லையா? என்று வினவி அதன் மூலம் அவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடித்து விளையாடி மகிழ்வர். அந்த எண் விளையாட்டு முறையோடு ஒப்பிட்டு கூறுகின்றனர்.

நாடி சோதிடம் குறித்த சார்புநிலைக் கருத்துக்கள் தொகு

இயற்கைப்பொருட்கள் தொடக்கம் பிரபஞ்ச இயக்கம் வரைக்கும் ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும், ஒட்டுமொத்தமாகவும் ஒரு கோலம் இருக்கிறது என்ற அடிப்படையில், மனித வாழ்க்கை குறித்த ஒரு கோலத்தினடிப்படையில் நிகழ்வதாகக்கொண்டு, அதனை முன்கூட்டியே உய்த்தறியலாம் என்ற வாதம் இக்கலைக்கு சார்பாக முன்வைக்கப்படுகிறது.

தர்க்க முறை அறிவியலின் போதாமைகள் குறித்து விமர்சிக்கும் சில கருத்துமுதல்வாதிகளும், அறிவியலாளர்களும் தர்க்கம் தாண்டிய விஞ்ஞானமுறைகளூடாக இதனை நிரூபிக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

  • என்னதான் பொருத்தி பார்த்தாலும் ஒருவருடைய பிறந்த தேதி, அவர்களுடைய மூதாதையர்கள் பெயர், உறவினர்கள் பெயர்கள், மகன்களின் பெயர்கள், வயது மற்றும் முழுப்பெயர்கள், போன்ற மிகுதியானத் தகவல்களை எப்படி சரியாக கூறமுடியும் என்று வாதிடுகின்றனர். அத்தகவல்கள் நம்மைத் தவிர வேறொருவருக்கும் தெரியாதே? என்று சார்பு நிலை எடுக்கின்றனர். அவர்கள் கூறுகின்ற வாசிப்புகளில் 99% ஏன் 100 % பொருத்தமானதாக இருப்பதாக சார்புநிலைவாதிகள் வாதிடுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. https://madhivanan.in
  2. நாடி சோதிடத்தன் வரலாறு பரணிடப்பட்டது 2009-07-03 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடி_சோதிடம்&oldid=3347757" இலிருந்து மீள்விக்கப்பட்டது