சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்  - புறநானூறு (பாடல்.28 )

-------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் இப்பாடலின் வழி  சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். அவர் கூறுவதைக் கேளுங்கள்  !

-------------------------------------------------------------------------------------------------


”இந்த உலகில் கூன், குருடு, செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை முழுமையற்றது; பயனில்லாதது ! நீ அத்தகைய குறைகளுடன் பிறக்கவில்லை ! உன் பகைவர்கள் உன் வீரத்தையும் வலிமையையும் கண்டு  பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள் ! உன் நாடு அனைத்து வளங்களும் நிறைந்து செழுமையாக  உள்ளது !  ஆகையால்,  உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களைப் அடைவதற்குப் பயன்படுத்த வேண்டும்;   அதுதான் உனக்கு இன்னும் வலிமை தரும் ; நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அதுவே ஏற்ற வழியாகும் ”!

-------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல் எண்: (28)

-------------------------------------------------------------


சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,

அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது

வட்ட வரிய செம்பொறிச் சேவல்

ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்

கானத் தோர்நின் தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;

அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெருமநின் செல்வம்;

ஆற்றாமை நின் போற்றா மையே.

-------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

1. சிதடு = குருடு; பிண்டம் = தசை. 2. குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்); ஊம் = ஊமை. 3. மா = விலங்கு; மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்); உளப்பாடு = உள்ள தன்மை. 4. எச்சம் = குறைபாடு. 5. பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன். 7. திறம் = கூறுபாடு, தத்துவம். 8. வரி = கோடு; பொறி = புள்ளி. 9. ஏனல் = தினைப்புனம். 12. புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = கட்டை, கழி. 13. போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு. 14. கடுக்கும் = ஒக்கும். 17. போற்றுதல் = பாதுகாத்தல்.

-------------------------------------------------------------------------------------------------


பொருளுரை:


சிறப்பில்லாத பார்வைக் குருடு, உறுப்புகள் குறைந்த  முழு உருவமில்லாத தசைப் பிண்டம், முதுகு வளைந்த கூன், உயரம் மிகக் குறைவான குட்டையுருவம் , வாய் பேச முடியாத ஊமை, செவிப் புலன் இழந்த செவிடு, விலங்கின் தோற்றமுள்ள வடிவம், பகுத்தறியும் திறனற்ற அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை என்று அறிஞர்கள் முன்னரே கூறியுள்ளனர். நான் சொல்ல விரும்புவது  ” பயனுள்ள பிறவி  எது ” என்பது பற்றி !


வளைந்த வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவற் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களைத் துயில்  எழுப்புகின்றது . இத்தகைய தினைப் புனங்களை அடுத்துள்ள காட்டில் உன் பகைவர்கள் உனக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ அனைத்து வளங்களும் நிறைந்த  நாட்டில் வாழ்கிறாய் !


உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்கள் நிரம்ப உள்ளன. வயலைச் சுற்றி வேலிகளும் உள்ளன.  வேலிக்கு வெளியே இருப்பவர்கள் சுவைப்பதற்குக் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வயலில் இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி  வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் உடைந்த தண்டுகள், அருகில் உள்ள குளத்தின் தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன !


இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும். இதுவே உனக்குப் பாதுகாப்புத் தரும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்  தவறியவன் ஆகிவிடுவாய் !

-------------------------------------------------------------------------------------------------


சிறப்புக் குறிப்பு:


இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

-------------------------------------------------------------------------------------------------