கவிப்புயல் சரண்
எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து....
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம் விடுதலைப் பயணம்.......
முற்று புள்ளி இட்ட இடத்தில் தான்
மூச்சுக்கள் அடங்கியது
ஆனாலும்.
முளைப்போம் எனும் அசரீரி
அங்கே முறையாய் கேட்கிறது
ஒளியாக நின்று எம் பாதைக்கு உரமிட்ட உங்கள் பாதங்கள் ஓய்ந்தே போகாது உளியாக நின்று எம் தேசத்தை செதுக்கிய உங்கள் கனவுகள் சாய்ந்தே வீழாது.
உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கும் வரை எங்கள் கடமைகள் தூங்காது நீங்கள் நம்பிய தலைவனையே
நாங்கள் நம்புகிறோம்
நீங்கள் வேண்டிய ஈழமதையே நாங்களும் வேண்டுகிறோம் அதனால்..... உருக்குலைந்த உங்கள் சிதை மீது ஒரு சத்தியம் பகர்கிறோம் பாதி வழியில் எங்கள் பாதைகள் வளையாது பகை தின்ற பூமியில் எங்கள் பயணம் தொடரும் ..
...கவிப்புயல் சரண்....