எமது ஊரின் வரலாறு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் போரதீவுப் பற்று பிரதேசம் படுவான்கரையின் ஒரு பகுதியைப் பிரதிபலிப்பது. பழுகாமம், மண்டூர், நவகிரி என்னும் உப அலுவலகப் பிரிவுகளை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் பழகாமம் எனும் கிராமம் மட்டக்களப்பிலிருந்து நீண்டு செல்லும் வாவியால் மூன்று பக்கமும் சூழப்பட்டு (கிராமத்தின் மேற்குப் புறத்தைத் தவிர்ந்த ஏனைய கரையோரப் பகுதிகள்) ஆற்றருகில் மீனாட்சிக்குளம், நடுக்குளம், புதுவெளிக்குளம், வண்ணாண்குளம், பெரிய குளம் எனும் 5 குளங்களும் விவசாயச் செய்கைக்குரிய சிறு நீர்ப்பாசனக் குளங்களாக உள்ளதுடன் ஆற்று நீரை ஏற்று நீர்ப்பாசன முறை மூலம் புதுவெளி வயல்கள் செய்கை பண்ணவும் பயன்படுத்துகின்றனர். பழுகாமத்திற்கு வெளியே இருக்கும் நூற்றுக்கணக்கான ஹெக்ரயர் வயல் நிலங்களும் இம்மக்களால் செய்கை பண்ணப்படுகின்றது. உதாரணமாக அத்தியாமுன்மாரி வயல்கள் 325 ஹெக்ரயர் வயல்களைக் கூறலாம். காலபோக வயல்நிலங்களும் ஏனையவையுமான சிறுநீர்ப்பாசன வயல் 283 ஹெக்ரெயரையும் மழையை நம்பிய 271 ஹெக்ரெயர் வயல் நிலங்களையும் கொண்டு விளங்குவதுடன்1 13.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான மக்கள் குடியிருப்பையும் கொண்டுள்ளது2. ———————- 1) விவசாயக் கந்தோரின் தகவல் 2) சமுர்த்தி வலயக்கணக்கெடுப்பு – 2005 சிங்கார கண்டி என தொல் பெயரால் அழைக்கப்படும் பழுகாமம் மட்டக்களப்பிலிருந்து சுமார் 25முஅ தொலைவிலுள்ள களுதாவளைக்கு மேற்புறமாக அமைந்துள்ளதாகும். இக்கிராமம் பழுகாமம்-1, பழுகாமம்-2, வீரன்சேனை, வன்னிநகர், மாவேற்குடா, விபுலானந்தபுரம் என்னும் 6 சமுர்த்தி அலகுகளைக் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் மொத்தமாக உள்ள 1409 குடும்பங்களில் 5493 பேர் வாழ்கின்றனர்3 இம்மக்களின் உறைவிடங்களை நோக்குகையில் 569 குடும்பங்கள் கல்வீட்டிலும், 239 குடும்பங்கள் களிமண் வீட்டிலும், 140 குடும்பங்கள் குடிசை வீட்டிலும், 236 குடும்பங்கள் பகுதியளவான வீட்டிலும், 205 குடும்பங்கள் வீடற்ற நிலையிலும் வாழ்கின்றனர். இம்மக்களில் 424 குடும்பங்கள் மின்சார பாவனையாளர்கள், 837 குடும்பங்கள் மண்ணெண்ணெய் முலம் ஒளியைப் பெறுவோர்களாகும்.4 இக்கிராம மக்களின் 157 குடும்பங்கள் விவசாயத்தையும், 184 குடும்பங்கள் மீன்பிடியையும், 33 குடும்பங்கள் தச்சு வேலையையும், 15 குடும்பங்கள் சிகை அலங்காரத்தையும், 9 குடும்பங்கள் சலவைத் தொழிலையும், 226 குடும்பங்கள் வெளிநாட்டுத் தொழிலையும், 220 குடும்பங்கள் அரச உத்தியோகத்தையும் 499 குடும்பங்கள் கூலித் தொழிலையும் ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளன.5 —————— 3) சமுர்த்தி வலயக்கணக்கெடுப்பு – 2005 (இத்தகவலில் உள்ளதைவிட கூடுதலான குடும்பங்கள் ஆய்வாளரால் அவதானிக்கப்பட்டுள்ளது.) 4) போரதீவுப் பற்று பிரதேசசபைத் தகவல் கையேடு -2005 (இத்தகவலில் குறிப்பிடப்பட்டதை விட அதிகமான வீடுகள் ஆய்வாளரால் அவதானிக்கப்பட்டுள்ளது) 5) சமுர்த்தி வலயக்கணக்கெடுப்பு – 2005 2.2 வரலாறு சிங்காரக் கண்டி என்னும் பழம் பெருமை மிக்க பழுகாமம் கிராமம் வரலாற்றுச் சிறப்புடையதாகும். வரலாற்றாய்வாளர்களின்;; கருத்துக்களிலிருந்தும் ஐதீகக் கதைகளிலிருந்தும் இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும். மாகோனின் வன்னிமைகள் பழுகாமத்திலிருந்து அரசு புரிந்தமை பல வரலாற்று ஆய்வாளர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. “கி.பி.1215ல் பொலன்னறுவையில் நடைபெற்ற கலிங்க மாகனின் படையெடுப்பின் பின் மட்டக்களப்புப் பிரதேசம் மாகனின் ஆட்சிப் பிசதேசங்களுடன் இணைக்கப்பட்டன. இவன் பழுகாமத்தில் இராசதானி அமைத்து நாட்டின் அபிவிருத்தி வேலைகள் செய்தானென்றும் கோயில்களைத் திருத்தி அவற்றுக்கான பெருந்தொகை மானியங்களை வழங்கினான் என்றும் அறியப்படுகின்றது”6 “கிபி. 13ம் நூற்றாண்டின் பொலன்னறுவை ராட்சியம் நிலை குலைந்ததை தொடர்ந்து மாக மன்னனும் அவனது சகாக்களும் கிழக்கிலங்கையின் பல பாகங்களிலும் மக்களை குடியேற்றி சிற்றரசுகளைத் தோற்றுவித்தனர்… ….கி.பி. 1550-1590 வரையுள்ள காலகட்டத்தில் மட்டக்களப்பில் ஆட்சிபுரிந்து வந்த வன்னிய இராசாக்களில் எதிர்மன்னசிங்கன் என்பவன் முதல்வனாகக் கருதப்படுகின்றான். பளுகாமத்திலிருந்து ஆட்சிபுரிந்து வந்த இவனது செல்வாக்கு மட்டக்களப்பு முழுவதிலும் பரந்திருந்தது…… …கி.பி.1505ல் எவருக்கும் தலை வணங்காத சுதந்திரமுள்ள அரசுகளாகவே மட்டக்களப்பு சிற்றரசுகள் பழுகாமம், சம்மாந்துறை, பாணமை எனும் இடங்களில் செயற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.”7 பழுகாமத்தின் வரலாற்றைக் கூறும் ஐதீகக்கதைகள் பல்வேறு விடயங்களைத் தெரிவிக்கின்றன. ஆதிகாலத்தில் பழு என்னும் வேட்டுவத்தலைவன் இக்காட்டில் வாழ்ந்ததால் பழுகாமம் என்னும் பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. 6) இந்திரபாலா. கா, பக்- 40-48, கிழக்கிலங்கைச் சாசனங்கள், சிந்தனைமலர்- இதழ்-2 7) நவநாயகமுர்த்தி. நா, 2002, பக்-94-98, தமிழர் வரலாற்றுச் சுவடுகள் ஓய்வுபெற்ற அதிபர்; க.ஆறுமுகம் (வயது-70) கூறியவிடயங்கள் பின்வருமாறு- “பன்னெண்டாம் நூற்றாண்டுல நிஸங்கமல்லன் பொலனறுவய ஆளுகிறபோது மாகோன் எண்ட பெயருடைய இந்து மத சிற்றரசன் கிழக்குப் பகுதியில பல இடங்களிலயும் ஆளும செலுத்தி ஆண்டவன். -மாகோன் உபயம் தேசத்;து வன்னிமைக்கு- என்ற கல்வெட்டுகள் கோயில்களில இருந்திருக்குது. பழுகாமம் திரௌபதியம்மன் கோயில் போரதீவு சித்திர வேலாயுதர் கோயில் திருப்பணிகளுல இவன் ஈடுபட்டதக் கண்டு கொள்ளுலாம்…. கண்டியில உள்ள மன்னர் பிரதானிகள் காலத்துக்குக் காலம் உப்புகள் கருவாடுகளக் கொண்டுபோகயும் கோடயில வன்னிமைகளப் பாக்கிறதுக்கும் வருவாங்க. வந்தாக்களுல பிரதானிகள் இருந்தது அமைச்சர் பிட்டி. சிங்காரக் கண்டி என்றது பழுகாமத்துக்கு சிறப்புப் பெயர். அம்பிளாந்துறை, திக்கோடை, போரதீவு இந்த ஊர்களில பொலிவுடைய வன்னியன் இருப்பார். இவர மேற்பார்வை செய்ய வாற மன்னர்கள் சிங்காரக் கண்டியில தங்குவாங்க….” திரௌபதியம்மன் கோயில் பூசகர் இ.ஆறுமுகம் நம்பியார் கூறியது- “குளக்கோட்ட மன்னன் காலத்தில இந்தியாவுல காரைக்காட்;டுலருந்து பூபால கோத்திர வேளாளரையும் மருங்கூருலருந்து கோயிலாரையும் கோயில் தொண்டுக்காக கூட்டி வந்து கோயில்தீவு என்ற மாவேற்குடாவில வேளாளாளர இருப்பாட்டுனான். இவயளுல மாரமார்த்தாண்டன் என்றவனும் அவன்ட தங்கச்சிமார் உலக நாச்சி, செண்பக நாச்சி, மயிலி நாச்சி இவய மூண்டு பேரும் கோவில் தீவிலருந்து உட்கிடம்ப அதிகாரத்தில கொக்கட்டிச்சோல கோயில் வரவு செலவுகள நடத்தி வந்தாங்க…. ….மண்முனையிலருந்து அரசாண்ட மாகோனுக்கு ஒரு வன்னியன். அவண்ட பேர் மதனகுலராசசிங்கன். பழுகாமம் அமுச்சாப் புட்டியில இருந்து அரசாண்டவன். அம்மங்கோயிலுக்கு அங்கால இரிக்கிற குளத்துக்க இரிக்கிறபுட்டி. அதுக்கு ஆதாரமா நான் சொல்லுறன், இப்ப கிட்டத்துல அங்க மண்ணேத்தக்குள்ள நல்ல பெரிய பானையள், கடகங்கள், செம்புகள் எல்லாம் வந்ததாமெண்டு ஆக்கள் கதச்சென்ன…” இவ்விடயங்களை நோக்கும்போது பழுகாமத்தில் ஒரு வரலாறு புரையோடியிருப்பதையும் அதன் ஆழ அகலங்கள் வெளிப்படாமையும் புலனாகின்றது. எனினும் இவ்விடயங்களினூடாக பழுகாமத்தில் ஆட்சி பீடம் ஒன்று இருந்ததென்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும். அமைச்சர் பிட்டி என்பது தற்போது அமுச்சாப்புட்டி என்று வழங்கி வருகின்றது. திரௌபதியம்மன் கோயிலுக்கு நேராக சிங்காரக்கண்டியும் (இது தற்போதுள்ள மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்து விஷ்ணு கோயில் வரை நீண்டு மரங்களால் அமைக்கப்பட்ட மாடிக்கட்டடங்களைக் கொண்டிருந்ததாக- கட்டுவைத்தியர் வே.ஆறுமுகம் கூறினார்) சிங்காரக்கண்டிக்கு வடக்கே அமைச்சர் பிட்டியும் உள்ளது. பழுகாமத்தில் நிலை கொண்டிருந்த மதனகுலராசசிங்கன் கோயில் திருப்பணிகள் பலவற்றில் ஈடுபட்டதுடன் பழுகாமம் திரௌபதையம்மன் கோயில் வரலாறு பற்றிய கதைகளுடனும் தொடர்பு படுத்தப்படுகின்றான். இவ் ஆய்வின் நான்காவது அத்தியாயத்தில் திரௌபதியம்மன் கோயில் வரலாற்றில் அவ்விடயங்கள் கூறப்பட்டுள்ளது. 2.3 சமூகம் சமூகம் சாதியை மையப்படுத்தயதாக அமைந்துள்ளது. வேளாளர், முக்குவர், பண்டாரப்பிள்ளை, வேடவேளாளர், நெடுந்தீவார், மூலவேலன் கத்தறை, வண்ணார், நாவிதர் எனப்பல சாதிப்பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. ஆலயங்களை மையமாகக் கொண்டு இவ்வமைப்பு கட்டிக் காக்கப்படுவதனைக் காணலாம். சாதிக்குரியதான கோயில்களும் சாதிக்குரியதான பூசைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கண்ணன் கோயிலில் ஏழு குடி முக்குவர்களும், மாவேற்குடாப் பிள்ளையார் கோயிலில் அத்தியாகுடி வைத்தியனார் குடி வேளாளரும், சிவன் கோயிலை கவுத்தன் குடி வேளாளரும், மாரியம்மன் கோயிலை நெடுந்தீவாரும் பரிபாலித்து வருகின்றனர். வண்ணார், நாவிதருக்கு திரௌபதைம்மன் கோயிலில் பூசைகள் வழங்கப்பட்டபோதிலும் கோயிலிலும் ஊரிலும் சமூக மதிப்புடையதாகக் கருதப்படும் வண்ணக்கர் பதவி வழங்கப்படவில்லை. இக்கோயிலில் அத்தியாகுடி வைத்தியனார்குடி வேளாளருடன் பண்டாரப்பிள்ளை, மூலவேலன் கத்தறை, நெடுந்தீவார் எனப்படுவோரும் வண்ணக்கராக உள்ளனர். இவ்வூரில் சாதிக்கொரு கோயில் உருவான வரலாற்றுடன் தம்மை உயர்குடி எனக் கருதும் வேளாளர் மற்றும் முக்குவரின் அடக்குமுறை இணைந்திருப்பதை நோக்கலாம். மாவேடற்குடாப் பிள்ளையார் கோயிலில் அத்தியாகுடி வைத்தியனார்குடி வேளாளரைத் தவிர ஏனைய சாதியினர் கும்பம் தூக்குதல், சாமி தூக்குதல், கொடி பிடித்தாடுதல் போன்ற ஆலய கடமைகளுக்கு அனுமதிக்கப்படாமை இச்சமூகத்தின் இறுக்கமான சாதி அமைப்பினைக் காட்டுகிறது. பழுகாமத்தில் போடிமார், கோயில் வண்ணக்குமார், கோயிலுரிமையாளர், குடும்ப மரபில் பெருமை பெற்றோர் சமுக மதிப்புடையோராகக் காணப்படுகின்றனர். எனினும் தற்போது அரச உத்தியோகமும் வெளிநாட்டுக்குச் சென்று தொழில் புரிதலும் சமூக மதிப்புடைய செயலாகக் கருதப்படுகின்றது. படுவான்கரைப் பகுதி மக்கள் சிலர் கல்வி மற்றும் பிற காரணங்களால் எழுவான்கரையிலுள்ள நகரிடங்களை நோக்கி குடியேறுகின்ற போதும் கோயிலுடன் தொடர்புபட்ட தங்களுடைய அடையாளப்படுத்தலுக்கான உரிமைகளில் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். 2.4 பொருளாதாரம் கமத்தொழிலும் மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. வயல் சார்ந்த நில அமைப்பு ஆறு குளங்களை அண்மித்த நிலப்பகுதியாக கிராமம் அமைந்திருப்பதால் இவ்விரு தொழிலும் முக்கியம் பெறுகின்றது. மீனவர் குடியிருப்பு வீரன்சேனை எனும் பகுதியினைக் கொண்டுள்ளது. காலை, மாலை எனும் இரு வேளைகளிலும் கிராமத்தை மூடியிருக்கும் ஆற்றில் மீன் பிடிப்பது இவர்களின் ஜீவனோபாயமாக இருந்த போதிலும் இம்மீனவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளிற்கு தொழில்புரிய அனுப்பி பொருளாதாரத்தினை வளப்படுத்தயுள்ளனர். வெளிநாடுகளிற்குச் சென்று உழைத்து வந்த பின்னரும் சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட சிலர் வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபடுகின்றனர். இளம் மீனவக் குடும்பங்கள் தங்களது குழந்தைகளை கல்வியில் ஊக்கப்படுத்தி வருகின்றமையாலும் வெளிநாட்டுத் தொழிலினாலும் எதிர் காலத்தில் மீன்பிடித் தொழில் அருகிச் செல்லவும் கூடும். விவசாயம் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரை பேணப்பட்டு வரும் தொழிலாகும் போடிமார் பலர் நெல்லுற்பத்தியில் ஈடுபட்டு வரும் அதே வேளை அரச உத்தியோகத்தர்களும் ஏனைய தொழில் புரிபவர்களும் (மீனவர், குடிசைக் கைத்தொழில் புரிவோர், ஓடாவி, மேசன், கூலித்தொழிலாளர்) இதனை மேற்கொள்ளுவதனைக் காணமுடிகின்றது. இதனால் உணவுப்பஞ்சம் ஏற்படுவதில்லை. வயல் சார்ந்த மற்றும் ஏனைய கூலித் தொழிலாளர்கள் காணப்பட்ட போதிலும் இன்றுள்ள நிலையில் அருகிப் போவதனைக் காணலாம். வெளிநாட்டுத் தொழில் கல்வி என்பனவற்றால் இந்நிலை தோன்றியுள்ளது. சுயதொழில் முயற்சி மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவும் பழுகாமத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றன. 13 அரிசி ஆலைகளும், 02 ஒட்டும் நிலையங்களும், 03 செங்கற் சூழைகளும், 02 வாகனம் திருத்தும் நிலையங்களும், 35 வர்த்தக கடைகளும் அமைந்து பொருளாதார வளர்சிக்கு வித்திடுகின்றன8. இக்கிராம மக்களில் 157 குடும்பங்கள் விவசாயத்தையும், 184 குடும்பங்கள் மீன்பிடியையும், 33 குடும்பங்கள் தச்சு வேலையையும், 15 குடும்பங்கள் சிகை அலங்காரத்தையும், 09 குடும்பங்கள் சலவைத் தொழிலையும், 226 குடும்பங்கள வெளிநாட்டுத் தொழிலையும், 220 குடும்பங்கள் அரச உத்தியோகத்தையும், 499 குடும்பங்கள் கூலித் தொழிலையும் ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளன9. 2.5. சமயம் – வழிபாடும் நம்பிக்கையும் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் சில கிறிஸ்தவக் குடும்பங்களும் வாழும் திருப்பழுகாமத்தில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் பதினெட்டு இந்துக் கோயில்களும் காணப்படுகின்றன. இந்துக்கள் ஆகம முறை சாராத பத்ததி மற்றும் ஆகமமுறைசார் வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். திரௌபதையம்மன், சிவமுத்து மாரியம்மன், வேம்படி நாகதம்பிரான், பத்திரகாளி அம்மன், சுடலை வைரவர் என்பன பத்ததி முறையிலமைந்த வழிபாட்டுத் தலங்களாகவும் சிவன், கண்ணன், மாவேற்குடாப் பிள்ளையார், கேணிக்கரைப் பிள்ளையார், ஆத்துக்கட்டுப் பிள்ளையார், ஏரிக்கரைப் பிள்ளையார், வெள்ளிமலைப் பிள்ளையார், சித்தரவேலாயுதர் என்பன ஆகம முறையிலமைந்த வழிபாட்டிடங்களாகவும் உள்ளன. சுடலை வைரவர், பத்திரகாளியம்மன் கோயில்களில் தற்போது சடங்கு நிகழ்த்தப் படுவதில்லை10. இக்கிராமத்தில் மூன்று கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவை மூன்றும் வௌ;வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளன. அவை மெடிஸ்த திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, 5ம் வேதத்துக்குரிய திருச்சபை என்பனவாகும். மெதடிஸ்த திருச்சபையில் வணக்க அழைப்புடன் ஜெபம், மன்றாட்டு என்பன முக்கிய வழிபாடாக காணப்படுகின்றது. இங்கு அடையாளச் சின்னமாக சிலுவை கருதப்பட்டபோதும் உருவ வழிபாட்டை இத் திருச்சபையினர் ஏற்றுக் கொள்வதில்லை. இத் திருச்சபைக் குருக்கள் நற்செய்திப் பணியாளர் எனப்படுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையில் மணியடித்து,

போரதீவுப் பற்று பிரதேச சபைத்தகவல் கையேடு – 2005

9) சமுர்த்தி வலயக் கணக்கெடுப்பு – 2005 10) ஆய்வாளரின் அவதானம் தீபம் காட்டி வழிபாடுகள் இடம்பெறுவதை அவதானிக்கலாம். 5ம் வேதத்துக்குரிய திருச்சபையினர் மன்றாடி அழுவதையே முக்கிய வழிபாடாகக் கொண்டுள்ளனர். பழுகாமத்திலுள்ள 93 பேரை உள்ளடக்கிய 30 கிறிஸ்தவ குடும்பங்களில் 21 குடும்பங்கள் மெதடிஸ்த திருச்சபையிலும் 05 குடும்பங்கள் கத்தோலிக்க திருச்;சபையிலும் 04 குடும்பங்கள் 5ம் வேதத்துக்குரிய திருச்சபையிலும் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.11 இந்துக்களின் பத்ததி முறை சடங்கு வழிபாட்டிடங்கள் மெல்ல மெல்ல ஆகம மயப்பட்ட சமஸ்கிருத மயமாகி வருகின்றமை இம்மக்களின் வழிபாட்டு முறையில் ஏற்பட்டு வரும் மாற்றமாகும். படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களே இந்நிலையைத் தோற்றுவித்து வருகின்றமையை காணலாம். மாறாக சடங்கு முறை வழிபாட்டுடன் பின்னிப்பிணைந்த சாதாரண மக்கள் தண்ணியோதிக் குடித்தும், திருநீறு போட்டும், பேயாடிக் கட்டுச் சொல்லியும் நம்பிக்கையின் அடிப்படையிலான வழிபாட்டு முறையில் தம்மை ஈடுபடுத்தி வருவதனையும் காணலாம். நம்பிக்கை அடிப்படையில் கிராமத்து மக்கள் வாழ்வியலை நோக்குகையில் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நம்பிக்கைகள் வெளிப்படுவதனைக் காணலாம். இறந்த ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்கு, இறந்த நட்சத்திர திதிகளில் அமுது படைப்பதுடன் ஆலயங்களில் அர்ச்சனை செய்தல் பூசைப் பெட்டி கொடுத்தல் எனபன அவசியம் என இம்மக்கள் நம்புகின்றனர். கண்ணூறு, நாவூறு என்பன திருநீற்று மகிமையால் விலகும் எனும் நம்பிக்கையில் பயபீதி பிடித்தவர்களுக்கு பூசாரிமாரிடம் திருநீறு போடுவதுடன் தண்ணியோதிக் குடிக்கின்றனர். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் அம்மனுக்கு நேர்த்தி வைக்கின்றனர். பெண்கள் பிரசவ வேதனையில் இருந்து விடுபட அம்மன் ஆலயங்களில் நேர்த்தி வைத்து பிரசவம் இலகுவாக நடைபெற்று முடிந்ததும் நேர்த்திப் பொருட்களை ஆடுகளாக, மாடுகளாக, சேலைகளாக வேறு அடையாளங்களாக மடைப்பெட்டி எடுத்துக் கொடுப்பதும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும். வழிப்பிரயாணங்கள், பரீட்சைகள், வைத்திய சிகிச்சைகள், வெளிநாட்டுத் தொழில் என்பன வெற்றிகரமாக நடந்தேற ஆத்துக்கட்டுப் பிள்ளையாருக்கு பொங்கலிடுவதாக நேர்த்திவைத்துப் பொங்குவர். ——————- 11) ஆய்வாளரின் அவதானம் வரட்சியான காலங்களில் பயிர்களுக்கு (குறிப்பாக- வேளாண்மைக்கு) மழை கிடைக்க வேண்டி அம்மாளுக்கு அபிஷேகம் செய்து, மழைக்காவியம் பாடி மழையைப் பெறுகின்றனர். வயல்களில் நோய்கள் அணுகாமலிருக்க ஆயிரத்தெட்டு இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வயல் எங்கும் வீசுவர். வயல்களில் சூடு மிதிப்பதற்கு முன்பதாக வைரவருக்கு கஞ்சா ரொட்டி, சாராயம் என்பனவற்றைப் பலி கொடுத்தால் கூடிய விளைச்சலைப் பெறலாம் என நம்புகின்றனர். நாகதம்பிரானை காவல் தெய்வமென நினைத்து வணங்கி, வயல் அறுவடை செய்து முடிந்தவுடன் புது அரிசியில் பொங்கி, பால் பழம் கரைத்து புதர்களில் படைக்கின்றனர். புதிரெடுத்தல், புதிருண்ணல் எனபனவும் நம்பிக்கையின் பாற்பட்ட நிகழ்வுகளாகும். வைத்திய சாலையில் தீராத நோய்களை பேய் பீடித்தது எனக் கொண்டு அம்மன் கோயில்களில் ஆடும் தேவாதிகள் மூலமாக பேயை விலக்கி நோயைத் தீர்க்கின்றனர். (உளவியல் ரீதியான சிகிச்சை முறையாக இதனை விளங்கிக் கொள்ளலாம்) தேவாதிகள் பேயாடி கட்டுச் சொல்லும்போது அதனைப் பயபக்தியுடன் கேட்டு அதன்படி நடந்து கொள்வர். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்பனவற்றை நம்புவதுடன் இதனை வெட்டி வெளியாக்குவதற்கு பூசாரிகளையும் நாடுகின்றனர். மின்னி முழங்கும்போது அர்ச்சுனப் பெருமாளுக்கு அபயம் எனக் கூறுவதால் இடி மின்னலின் தாக்கத்திலிருந்து தப்பலாம் என்று இம்மக்கள் நம்புகின்றனர். புதிய வீடுகளை அமைத்த பின் வளவு காவல் பண்ணிய பின்னரே குடிபுகுவர். அத்துடன் ஒவ்வொரு வருடமும் சாமிக்குச் செய்தல் எனும் சடங்கினை மேற்கொள்வதன் மூலம் செல்வம் பெருகும் என்றும் நம்புகின்றனர். 2.6 கல்வியும் விளையாட்டும் பாடசாலைக் கல்விக்கு முன்னர் திண்ணைப்பள்ளி முறைமை நிலவியது. அதன் பின் இராமகிருஷ்ண மிஷனால் விபுலானந்த வித்தியாலயம் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் சைவப்பள்ளி என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் கல்வி வளர்ச்சியை முன்னேற்ற அமரர் கண்டுமணி அவர்களால் ஊர் மக்களைக் கொண்டு காடுவெட்டி, மரம்வெட்டி வித்தியாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் இங்கிலிஸ் பள்ளி என அழைக்கப்பட்டு தற்போது கண்டுமணி மகா வித்தியாலயம் என அதை தாபித்தவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. பழுகாமத்தில் விபுலானந்த வித்தியாலயம் 5ம் ஆண்டு வரையும், கண்டுமணி மகாவித்தியாலயம் உயர்தரம் வரையும்; கல்விப் போதனையில் ஈடுபட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்புவரை கல்விப் பெறுபேறு சிறந்த முறையில் அமைந்திருந்த போதிலும் இன்றுள்ள நிலையில் 5ம் தர புலமைப் பரீட்சை, சாதாரணப் பரீட்சை என்பனவற்றில் சித்தியடைந்தவுடன் மாணவர்கள் எழுவான்கரை பாடசாலைகளை நோக்கி இடம் பெயர்ந்து செல்வதனால் கல்விப் பெறுபேறு வீழ்ச்சி அடைந்துள்ளது. மாணவப் பருவம் முடியுமுன்னரே வெளிநாடுகளுக்குச் செல்வதும் இதனை மேலும் கூர்மையடையச் செய்கிறது. வேள்ட்; விஷன் நிறுவனத்தினால் நடாத்தப்படும் 3 முன்பள்ளி நிலையங்களும் பிரதேச சபையால் நடாத்தப்படும் ஒரு முன் பள்ளியும் இக்கிராமத்தில் இயங்குகின்றது. விபுலானந்த சிறுவர் இல்லம், திலகவதியார் மகளிர் இல்லம், அறிவுச்சோலை என்பன யுத்தத்தாலும் பிற காரணங்களாலும் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரித்து கல்வி புகட்டி வருகின்றன. இந்து கலா மன்றம், கண்ணன் கலா மன்றம் என்பன நடாத்தும் இரண்டு அறநெறிப் பாடசாலைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்குகின்றன. இவை பழுகாமத்துக் கல்வி வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும் விடயங்களாகும். இம்மக்களின் பாரம்பரியமான விளையாட்டுக்களான தெத்துக் கோடு, வாரோட்டம், சுரக்காய் இழுத்தல், வட்டத்துக்குள்ள எத்தனை பேர், நாயும் இறைச்சித்துண்டும், கிளித்தட்டு, பில்லிப்பந்து, பேய்ப்பந்து போன்றன விளையாடப்பட்டு வருகின்ற போதும் இன்றுள்ள நிலையில் இவை விளையாடப்படுவது குறைந்து போய் கிரிக்கட், வொலிவோள் என்பன விளையாடப்பட்டு வருகின்றன. சூட்டிங் ஸ்ரார் எனும் விளையாட்டுக் கழகம் பல்வேறு விளையாட்டுக்களை வளர்த்து வருகின்றது. 2.7 கலை இலக்கியம் கூத்துக்கலை முக்கியமானதாக இருந்துள்ளது. வடமோடி, தென்மோடி என்பன ஆடப்பட்டு வந்தன. சினிமாவின் தாக்கம், காலத்தின் வேகம் என்பவற்றால் கூத்து அருகிக் கொண்டு வருகின்றது. பழைய அண்ணாவிமார்களாக காசிநாதன் அண்ணாவியார், நல்லதம்பி அண்ணாவியார் என்பவர்களைக் கூறலாம். இவர்களுக்குப் பின் கூத்து ஆட்டத்துடன் பரிச்சியம் உள்ளவர்களாகவும் அதைப் பேணி வருபவர்களாகவும் க.தணிகாசலம், அமரர் பொன்.தங்கராசா, அமரர் செ.விநாயகமூர்த்தி, அசுரகேது கந்தசாமி, பாலசுந்தரம் அண்ணாவியார், பாக்கியராசா அண்ணாவியார், கனகரெத்தினம் ஆகியோர் காணப்பட்டனர். இன்றுவரை கூத்துக்கலையைப் பயிற்றுவிப்பவர்களாக கலைச்சுடர் தணிகாசலம், சிவகுமாரன் ஆசிரியர் ஆகியோரே உள்ளனர். அத்துடன் வள்ளியம்மன் நாடகம் எனும் கரகத்தை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கரகவடிவேல் பழக்கி அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.12 முழு நீளக் கூத்துக்கள் மேடைக் கூத்துக்களாகி ஒருசில கலைக்கழகங்களால் முன்னெமுக்கப்பட்டு வருவதனைக் காணலாம். சிங்க வீரன் போர், வள்ளியம்மன் நாடகம், ராம நாடகம், பதினேழும் பதினெட்டும், பதின்மூண்டும் பதினாலும், வாளபிமன் நாடகம், அல்லி நாடகம், சந்தனு மகாராசன் நாடகம், கோவலன் கண்ணகி நாடகம், விராட பர்வம் என்பன போன்ற பல முழுநீளக் கூத்துக்கள் ஆடப்பட்ட கிராமமாயினும் இன்று முழுநீளக் கூத்டதுக்களை ஆடி அரங்கேற்றுவதில் கிராம மக்களின் அக்கறையின்மையாலும் யுத்தசூழல், வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, சினிமாவின் ஆழ ஊடுருவல் என்பனவற்றாலும் கூத்து இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. பழைய அண்ணாவிமாரினைத் தவிர புதிதாக ஒருவர் உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படவில்லை. விடியவிடியக் கூத்துக்கள் ஆடப் படாத நிலையில் கலைக் கழகங்கள் மேடை நாடகங்களையும், மேடைக் கூமத்துக்களையும் ஆலயங்;களில் மேடையேற்றி வருகின்றன. பாஞ்சாலி கலைக்கழகம், கண்ணன் கலா மன்றம், வெள்ளிமலையான் கலைக்கழகம், வாணி கலா மன்றம், அண்ணா கலாமன்றம் எனப்பல கலைக்கழகங்கள் கலை வளர்த்தமையைக் காணலாம். பாஞ்சாலி கலைக் கழகம் அம்மன் சடங்கு வேளைகளிலும் ஏனைய கோயில் திரு விழாக்களிலும் கொம்பும

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arul_Anujan&oldid=1590370" இலிருந்து மீள்விக்கப்பட்டது