எழுத்துப்பிழை இல்லாமல் நம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர சில விளக்கங்கள்.

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதற்கு "டண்ணகரம்" என்று பெயர்.

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "றன்னகரம்" என்று பெயர்.

இது இரண்டும் என்றுமே மாறி வராது. நினைவில் கொள்க.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால், பக்கத்தில் 'ட' இருக்கிறதா, அப்போது இங்கு மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏனென்றால் அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால், பக்கத்தில் 'ற' இருக்கிறதா, அப்போது இங்கு இரண்டு சுழி 'ன்' தான் வரும். ஏனென்றால் அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanthasoroobanr&oldid=2589161" இலிருந்து மீள்விக்கப்பட்டது