பாசெல் புறா

பாசெல் புறா என்பது, சுவிற்சர்லாந்தின் கான்டன் பாசெலால் வெளியிடப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு அஞ்சல்தலை ஆகும். உலகின் முதலாவது மூன்று நிற அஞ்சல்தலையான இது, 2½- ராப்பன் பெறுமானத்துடன் 1 சனவரி 1845ல்[1] வெளியிடப்பட்டது. பாசெல் கான்டனால் வெளியிடப்பட்ட ஒரே அஞ்சல்தலை இதுவாகும். அக்காலத்தில் ஒவ்வொரு கான்டனும் அதன் அஞ்சல் சேவைக்குப் பொறுப்பாக இருந்தது. நாடு முழுவதற்குமான அஞ்சல் சேவை 1 சனவரி 1849ல் தொடங்குவதற்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் ஒரே சீரான அஞ்சல் கட்டணம் இருக்கவில்லை. பாசெலைத் தவிர சூரிச், செனீவா ஆகிய இரு கான்டன்கள் மட்டுமே அஞ்சல்தலைகளை வெளியிட்டன.

பாசெல் புறா
உற்பத்தியான நாடுசுவிட்சர்லாந்து
உற்பத்தி அமைவிடம்பாசெல்
உற்பத்தியான தேதி1 சூலை 1845
எப்படி அருமைமிக அரியது
இருப்பு எண்ணிக்கைதெரியவில்லை
முகப் பெறுமானம்ராப்பென்
மதிப்பீடுCHF 18,000
CHF 37,500 உறையுடன்

கட்டிடக்கலைஞர் மெல்ச்சியர் பெர்ரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அஞ்சல்தலையில், அலகில் ஒரு கடிதத்தை வைத்திருக்கும் வெண்ணிறப் புறா ஒன்று புடைப்புருவமாக அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன், "STADT POST BASEL" (இசுட்டாட் போசுட் பாசெல்) என்ற பொறிப்பும் உள்ளது. இந்த அஞ்சல்தலை கறுப்பு, ஆழ்சிவப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் அச்சிடப்பட்டதால் உலகின் முதலாவது மூன்று நிற அஞ்சல்தலையானது.[1] 30 செப்டெம்பர் 1854 வரை இது செல்லுபடியாகக்கூடியதாக இருந்தது. அதற்குள் 41,480 அஞ்சல்தலைகள் அச்சிடப்பட்டன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Hertsch, Max. Famous Stamps of the World. Berne: Hallwag Ltd., 1968, p.12.
  2. http://www.swiss-philately.co.uk/stamps_cantonal_basel.html பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம் Retrieved 26 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசெல்_புறா&oldid=3220286" இலிருந்து மீள்விக்கப்பட்டது