புனித ஜான் லியோனார்தி

புனித ஜான் லியோனார்தி, இறையன்னை சபை நிறுவனர்.

புனித ஜான் லியோனார்தி (1541 – 1609) தொகு

இறையன்னை சபை நிறுவனர், மருந்தாளுநர்களின் பாதுகாவலர் மற்றும் விசுவாசப் பரப்புதல் சபையின் துணை நிறுவனர்

அருட்தந்தை. மரிய பாக்கியராஜ் OMD

முன்னுரை  தொகு

“தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்” (லேவி 19: 2, 1 பேது 1: 16). தூய கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப மனிதர் வாழும் பொழுது தூயோர் ஆகின்றனர், நடமாடும் புனிதராக மாறுகின்றனர் என்பதை தன்வயப்படுத்தி வாழ்ந்தவர்கள் தான் புனிதர்கள். வாழ்க்கை என்னும் பயணத்தில் பலமுறை வழி தெரியாமல் தத்தளிக்கும் போது நமது பயணத்திற்கு நல்வழியை காட்டுபவர்கள் புனிதர்கள். எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும் முறையை வகுத்து காட்டியவர்கள் புனிதர்கள். இவர்கள் புவியிலேயே புனித வாழ்வு வாழ்ந்ததால் தான் இன்று புனிதர்களாக போற்றப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள். ஒவ்வொரு புனிதருமே தன் சுய விருப்பங்களைக் கடந்து, களைந்துவிட்டு இறை விருப்பத்தை உணர்ந்து இறைப்பணிக்காய் அர்ப்பணித்தவர்களாக உள்ளனர். அத்தகைய வாழ்வுக்காய் தன்னையும் அர்ப்பணித்தவர் தான் இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய், விசுவாசப் பரப்புதல் சபையின் துணை நிறுவனருமாய் போற்றப்படுகின்ற புனித ஜான் லியோனார்தி. 

இவர் எளிய, ஏழை குடும்பத்தில், இறை விசுவாசத்தை வாழ்வாக்கி வாழ்ந்த பெற்றோர்களுக்கு கடைசி குழந்தையாகப் பிறந்தாலும், உலகின் கடை எல்லைவரை போற்றக் கூடியவராக இருக்கின்றார். இவர் செய்தப் பணிகள் திருச்சபையில் அளப்பறிய தாக்கத்தையும், புத்துணர்ச்சியையும், மறுமலர்ச்சியையும் கொடுத்திருக்கிறது என்பது மிகையாகாது. இவரின் வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு உந்து சக்தியைக் கொடுக்கக் கூடியதாகவும், தன்னையே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், ஆர்வத்தையும் தூண்டக் கூடியதாக இருக்கின்றது. இதை அவருடைய வாழ்வில் இருந்து பிறந்த இவ்வார்த்தை ‘புனிதனாகு புனிதமாக்கு’ மூலம் நாம் அறியலாம். இவரின் வாழ்வுப் பதிவுகள் நம் வாழ்வையும் சீர்ப்படுத்திச் செம்மையாக்கி வாழ துணைபுரியும்.

புனிதரின் வாழ்வு ஒரு பார்வை தொகு

 
புனித ஜான் லியோனார்தி திருமுழுக்கு பெற்ற ஆலயம்

அறிவியல், விஞ்ஞானம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனைகள் பிறப்பெடுத்த ஓர் மறுமலர்ச்சியின் பொற்காலமும், தாய் திருச்சபையின் முக்கிய காலமுமாய் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், 1541 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில், லூக்கா நகரில் உள்ள தியோச்சிமோ என்ற இடத்தில், ஜியோக்கோமோ லியோனார்தி, ஜியோவான்னா லிப்பி என்ற பெற்றோருக்கு பிறந்தவர் தான், இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய் இன்று போற்றப்படும் புனித ஜோவான்னி லியோனார்தியார். இவருடைய பெற்றோர்கள் மிகவும் இறைப்பக்தியோடும், தெய்வப் பயத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். தன்னுடைய குடும்பத்தில் ஏழாவது செல்லப் பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு நான்கு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் இருந்தனர். இளம் வயதிலேயே தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, இறைத்தாக்கத்தோடு, இறை பக்தியிலும், பண்பிலும் வளர்ந்தார். 

இவர் தன்னுடைய 17வது இளம் வயதில் தன் தந்தையின் பணியான மருந்தாளுநர் பணியை மேற்கொண்டு செயல்பட்டார். மருந்தாளுநர் பணியை செய்கின்ற போது ‘கொலம்பினஸ்’ குழுவினரோடு தன் உறவை ஏற்படுத்தினார். 1569ம் ஆண்டு ஜான் லியோனார்தியின் அன்புத் தந்தை ஜியோக்கோமோ லியோனார்தி இறந்தார். அவரின் இறப்பு ஜான் லியோனார்திக்கும், அவரின் குடும்பத்திற்கும் பெரும் பேரிழப்பை தந்தது. அதனால் தன் தாயாருக்கு உதவி கரமாக சொந்த ஊரிலேயே ஒரு மருந்துக்கடை திறக்கலாம் என்று முடிவுச் செய்த அவர், இறைவனின் அழைப்பை உணர்ந்ததால் 1558ல் தொடங்கிய மருந்தாளுநர் பணியை 1568ல் கைவிட்டார். தன் ஆன்மீக குருவான டோமினிக்கன் சபையைச் சார்ந்த  பிரான்சிஸ்கோ பெர்நார்டினியின் வழிகாட்டுதலின்படி குருவாக இறைப்பணிச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குருத்துவத்தை நோக்கிப் பயணித்தார். குருத்துவப் பயிற்சிப் பெற்ற ஜான் லியோனார்தி, அன்னை மரியின் பக்தியிலும், அளவு கடந்த ஆன்மீக தாகத்திலும் வளர்ந்தார். இவர் 1571 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1572ஆம் ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா அன்று தன் முதல் நன்றித் திருப்பலியை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவேற்றினார். இறை அன்னையின் மீது இருந்த அளவுக்கடந்த அன்பினால் 1574 ஆம் ஆண்டு புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில், இறையன்னை சபையை தோற்றுவித்தார். ஜான் லியோனார்தியின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட ஜார்ஜ் அரிக்கினி, ஜீவாம்பட்டிஸ்டா சியோனி, செசார் பிரான்சியோட்டி ஆகிய மூவரும் இறையன்னை சபையின் முதல் மூன்று சகோதரர்களாக தங்கள் பாதம் பதித்து, ஜான் லியோனார்தியின் வழிகாட்டுதலில் இறைப்பணிச் செய்ய தங்கள் வாழ்வை ஆரம்பித்தனர். 1583ம் ஆண்டு தன் துறவற சபைக்கான அங்கீகாரத்தை, அப்போது இருந்த லூக்கா நகரத்து ஆயரிடம் மார்ச் திங்கள் 8ம் நாள் கடிதத்தின் வாயிலாக அனுமதி பெற்றார். 1604ம் ஆண்டு ஜீன் மாதம் 24ம் நாள் திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் என்பவரால் தன் துறவற சபையின் அடிப்படை ஒழுங்கு நூல்களை அனுமதியாகப் பெற்றார்.

எது சரி, எது தவறு என்ற தெளிவின்றி சமுதாயமும், திருச்சபையும் தேங்கி நின்ற சமயத்தில் “கிறிஸ்துவே அனைத்திற்கும் அளவுகோலாக இருக்கிறார்” என்றுச் சூளுரைத்து, தவறுகளைத் துணிவோடுச் சுட்டிக்காட்டியும், சமூகம் பயணிக்க வேண்டியச் சரியான பாதையினை தனது வாழ்வாலும், பணிகளாலும் எடுத்தியம்பி மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்தில் நிலவிய லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராக ஜான் லியோனார்தியின் தணியாத தாகமாக விளங்கியது “நற்கருணை வழிபாடு, மரியன்னை பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி” ஆகும். இவர் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்படிந்து, சீர்திருத்தப் பணியினையும் மேற்கொண்டார். ‘நற்செய்தி பணியைத் தன் வாழ்வின் அடிப்படைத் உரிமையாக தேர்ந்தெடுத்த’ இவர், சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து, அவற்றை வாழ்வாக்கியும் செயல்பட்டார். சிறுவர்களுக்கு ‘மறைக்கல்வி’ புத்தகத்தையும் முதன் முதலாக எழுதினார். பல செயல்கள் புரிந்த ஜான் லியோனார்தி, தொற்று நோயாளிகளுக்கும் இறைப் பணி புரிந்ததால், அவரும் அந்நோயால் தாக்கப்பட்டு 1609 ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் நாள் இறைவனில் கலந்தார்.

ஜான் லியோனார்தியின் இறப்பிற்கு பிறகு, 1657ம் ஆண்டு திருத்தந்தை பதினான்காம் ஆசிர்வாதப்பர் இவரை வணக்கத்திற்கு உரியவர் என்று அறிக்கையிட்டார். 1861ம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவரை புனிதர்களின் பட்டியலில் இணைத்தார். 1938ம் ஆண்டு ஏப்ரல் 17ம் நாள் உயிர்ப்பு ஞாயிறு அன்று திருத்தந்தை பதினோராம் பத்தினாதர் ஜோவான்னி லியோனார்தியை புனிதர் என்று அறிக்கையிட்டார். 2006ம் ஆண்டு புனித ஜான் லியோனார்தியை மருந்தாளுனர்களின் பாதுகாவலர் என்று முன்னால் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால் அறிவிக்கப்பட்டார். 2008ம் ஆண்டு உரோமையில் உள்ள வத்திக்கானில் ஒருசில குறிப்பிட்ட புனிதர்களின் திருஉருவங்கள் உள்ளவற்றில், புனித ஜான் லியோனார்தியின் திருஉருவமும் வைக்கப்பட்டு, முன்னால் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டால் அர்ச்சிக்கப்பட்டது. 

புனிதரின் இளமைப்பருவம்  தொகு

ஜான் லியோனார்தி இறைப்பக்தியும், தெய்வப் பயமும் கொண்ட நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால், அவரும் தன் பெற்றோரின் நற்பண்புகளை வாழ்வாக்கி வாழ்ந்தார். தினசரி ஆலய வழிபாடுகளிலும், திருப்பலியிலும் பங்குப்பெற்று இறை ஞானத்தில் வளர்ந்தார். தன் பெற்றோர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும் கீழ்ப்படிதலுடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவர்களின் வழிகாட்டுதல்களின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஜான் லியோனார்தி பதினெழு வயது வாலிபனாக இருந்த போது, அவருடைய எதிர்காலம் அவரின் தந்தையால் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் தன் தந்தையின் தொழிலான மருந்து தயாரிக்கும் பணிக்கு லூக்காவில் பெரிய மருந்தாளுனராக கருதப்பட்ட அந்தோனியோ பார்கி என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பணியை செய்கின்ற போதே பல வித திறமைகளையும் கற்றார். அவர் செய்து வந்த மருத்துவப்பணி இடங்களில் நிறைய பேர் கூடிவரும் வழக்கம் உண்டு. அவ்வாறு நிறைய பேர் அங்கு கூடி பலவற்றை ஒருவருக்கொருவர் விவாதித்து வந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜான் லியோனார்தியும் பேச்சுக் கலையை எளிதில் கற்றுக் கொண்டார். 

இவ்வாறு, மருத்துவப் பணியைச் செய்து கொண்டிருந்த தருவாயில் ஜான் லியோனார்தியின் தந்தை 1569 ஆம் ஆண்டு இறந்தார். தந்தையின் இறப்பு அவரையும், அவரின் குடும்பத்தையும் மிகவும் பாதித்தது. வயதான காலத்தில் இருந்த தம் தாயைத் தனியே விட்டுவிட மனம் இல்லாததால், தாய்க்கு உதவியாக தம் சொந்த ஊரிலேயே ஒரு மருந்துக்கடையை திறக்கலாம் என்று முடிவுச் செய்தார். ஆனால், திடீரென இறைத்தூண்டுதலால் கடவுளின் அழைப்பை உணர்ந்து குருவாக பணிச்செய்யலாம் என்று சிந்தித்து, தான் பெற்ற இறைத்தூண்டுதலை டோமினிக்கன் சபையைச் சார்ந்த ஜான் லியோனார்தியின் ஆன்மீக குருவான அருட்தந்தை பிரான்சிஸ்கோ பெர்நார்டியிடம் கூறினார். அந்த ஆன்மீக குருவும் ஜான் லியோனார்தியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவரை நோக்கி, “மகனே, நீ மருத்துவப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டாம். நீ நன்கு படி. ஏனென்றால், இறைவன் உன்னை தம் பணிக்கென பயன்படுத்த விரும்புகிறார். இதுவே, கடவுளின் திருவுளம்” என்று அறிவுரை வழங்கி ஊக்குவித்தார். ஜான் லியோனார்தியும் தன் ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி குருத்துவ வாழ்வை நோக்கி பயணமானார். 

குருத்துவ வாழ்வு தொகு

குருத்துவ வாழ்வை நோக்கிப் பயணித்த ஜான் லியோனார்தி, 1564 ஆம் ஆண்டு தன்னை ‘கொலம்பினி’ என்ற ஒரு குழுவோடு இணைத்துக் கொண்டார். கொலம்பினி என்ற குழுவானது லூக்கா நகரில் நிலவிய லூத்தரன் சபையின் தவறான கருத்துக்களையும், குறிப்பாக நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம், அன்னை மரியின் பக்தி, திருத்தந்தை திருச்சபையின் தலைவர் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்பட்டோரையும் எதிர்த்து, உண்மையான விசுவாசத்தைப் போதித்து வந்தது. இந்த குழுவால் ஜான் லியோனார்தி ஈர்க்கப்பட்டு, இன்னும் ஆழமான விசுவாசத்தில் வளர்ந்தார். கொலம்பினி குழுவோடு சேர்ந்து தன் குருத்துவ வாழ்வை ஆரம்பித்த ஜான் லியோனார்தி, பிரான்சிஸ்கன் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. எனவே, டோமினிக்கன் சபை குருக்களைத் தன் ஆன்மீக குருவாக இருக்க அணுகிய போது, அப்குளி மாகாணத்தில் இருந்த டோமினிக்கன் சபையை சீர்திருத்தம் செய்த பௌலினோ பெர்னார்டினி என்பவர் ஆன்மீக குருவாக இருக்க ஒப்புதல் கொண்டு வழிநடத்தினார். இவ்வாறு, ஆன்மீக வழிகாட்டுதலின் படி, மெய்யியலையும், இறையியல் கல்வியையும் பயின்ற ஜான் லியோனார்தி 1571 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் நாள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப் பட்டார்.

திருத்தொண்டர் பணியைச் சிறப்பாக இறைவார்த்தை போதிப்பதிலும், ஆன்மீகத்தை ஊக்குவித்தலிலும், நற்கருணை பக்தியை வளர்ப்பதிலும், மறைக்கல்வியைப் போதிப்பதிலும், அன்னை மரியாள் பக்தியை வளர்ப்பதிலும் என பலவாறு பணிப்புரிந்த ஜான் லியோனார்தி 1571 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் குருவாக திருநிலைப் படுத்தப் பெற்றார். குருவாகிய அருட்தந்தை ஜான் லியோனார்தி 1572ஆம் ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா அன்று தன் முதல் நன்றித் திருப்பலியை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவேற்றினார். குருத்துவப் பணியை மேற்கொண்ட அருட்தந்தை ஜான் லியோனார்தி, தன் குருத்துவப் பணியின் மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1574 ஆம் ஆண்டு புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில், ‘தூய கன்னித்தாயின் புதுப்பிக்கப்பட்ட குருக்கள்’ என்ற தன் துறவற சபையை தோற்றுவித்தார். கன்னித்தாயின் குருக்கள் என்று அழைக்கப் பட்ட அந்த துறவற சபையானது, நாளடைவில் ‘இறையன்னை சபை’ என்று அழைக்கப் பட்டது.

புனிதரின் சீர்திருத்தப் பணிகள் தொகு

குருவாக பணிப்புரிந்த அருட்தந்தை ஜான் லியோனார்தி திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, லூக்கா நகரில் தனது சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். அதன் பிறகு மோந்தே வெர்ஜினே என்ற இடத்தில் உள்ள துறவற சபையையும் சீர்திருத்தம் செய்தார். அந்த சபையானது புனித ஜீலியல் மோ டா வார்செலி என்பவரால் 1126 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சபையானது பெனடிக்டைன் சபையின் ஒழுங்கு முறையான ‘செபமும், தவமும்’ என்பதை மிக மிக முக்கியமாக கருதி பின்பற்றி வந்தது. காலப்போக்கில் சபையின் ஒழுங்கு முறையானது கடைப்பிடிக்கப்படாமல், அவரவர் விருப்பம் போல், சுகப்போக, ஆடம்பர வாழ்க்கையையும் வாழத் தொடங்கினர். இதை அறிந்த அன்றைய திருத்தந்தை எட்டாம் கிளமன்ட் என்பவர், சபையை சீர்திருத்தம் செய்வதற்காக திறமைமிக்க ஆறு நபர்களை அனுப்பினார். அவர்களால் சீர்;திருத்தம் செய்ய இயலாத தருணத்தில், பிலிப் நெரி என்னும் அருட்தந்தையை அனுப்ப திருத்தந்தை கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் உடல் நலமின்றி இருந்ததால், ஜான் லியோனார்தியை அனுப்பலாம் எனக் திருத்தந்தையைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, ஜான் லியோனார்தி அங்கு சென்று சீர்திருத்தம் செய்ய தொடங்கினார். ஜான் லியோனார்தியின் சீர்திருத்தப் பணியானது வெற்றிகரமாக முடிந்தது. 

அதன் பிறகு, ஜான் லியோனார்தி ‘அவெர்ஸா’ எனும் இடத்திலும் தனது சீர்திருத்தப் பணியை செய்தார். அங்கு ஆயர் நியமிக்கும் வரை தனது சீர்;திருத்தப் பணியியை மிகவும் திறம்படச் செய்தார். அதைத் தொடர்ந்து, ‘மடோனா தெல் ஆர்க்கோ’ என்னும் அன்னை மரியின் ஆலயத்திலும் தனது சீர்;திருத்தப் பணியினை 1592 முதல் 1594 வரை செய்தார். அன்னையின் பெயரை தாங்கிய அந்த ஆலயத்தில் காணிக்கையாக வரும் பொருட்களையும், செல்வத்தையும் அப்போதிருந்த அரசரும், ஆயரும் மட்டுமே அனுபவித்து, ஆடம்பர வாழ்வை வாழ்ந்தனர். ஆலய வளர்ச்சிக்காகவும், மக்களின் ஈடேற்றத்திற்காகவும் பயன்படுத்தாமல் இருந்ததைக் கண்ட திருத்தந்தை, ஜான் லியோனார்தியை சீர்;ப்படுத்துவதற்காக அனுப்பினார். ஜான் லியோனார்தியின் கடின முயற்சியால் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அன்னை மரியின் பெயரில் ஆலயமும் தோற்றுவித்தார். ஆலயத்தில் பல விதமான ஆன்மீக வழிபாடுகளை உட்புகுத்தி, அன்னை மரியின் பக்தியையும் வளர்த்தார். இவ்வாறாக, பல இடங்களிலும், துறவற சபைகளிலும் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சீர்திருத்தப் பணியினை மிகவும் திறம்படச் செய்தார். ஜான் லியோனார்தி சீர்திருத்தத்தில் சிறந்தவர் என அனைவராலும் போற்றக் கூடியவராக திகழ்ந்தார். 

சீர்திருத்தப் பணியினை நன்கு ஆற்றிய ஜான் லியோனார்தி, லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராகவும் தன் பணியினைச் செய்தார். லூத்தரன் பிரிவினை சபையைச் சார்ந்தவர்கள் ‘நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தையும், அன்னை மரியாளின் பக்தியையும், திருத்தந்தைக்கு கீழ்ப்படிதலையும் மறுதலித்தனர். அவர்களுக்கு எதிராக, ஜான் லியோனார்தி தான் தோற்றுவித்த இறையன்னை சபையின் தனி வரமாக ‘நற்கருணை பக்தி, அன்னை மரியாள் பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி’ போன்றவற்றை தோற்றுவித்து, அவற்றை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினார். மறைக்கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு முதன் முதலாக ‘கிறிஸ்தவக் கோட்பாடுகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும் திருத்தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஜான் லியோனார்தியின் வழியில் வந்த தன் சகோதரர்களுக்கு ஒழுங்கு அமைப்பாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை மிகவும் வலியுறுத்தி வாழப் பணித்தார். தான் தோற்றுவித்த சபைக்கும் ஒழுங்கு நூலாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை வலியுறுத்தினார். 

நெல்லிக்கனி முதலில் கசக்கும், பின்னரே இனிக்கும். அதுபோலவே புனித ஜான் லியோனார்தியின் பணி வாழ்வு, பல எதிர்ப்புகளையும் கடந்து உண்மையை எடுத்துரைத்தன. இறை நம்பிக்கையையும், திருச்சபையில் புரையோடிக் கிடந்த நோய்களையும் ‘கிறிஸ்து’ என்னும் மருந்தினால் குணமாக்க இவர் செய்த தியாகங்களும் பின்னரே புரிந்து கொள்ளப்பட்டன.

புனித ஜான் லியோனார்தி எழுதிய ஒருசில நூல்கள் தொகு

சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் தனித்தனியே மறைக்கல்விப் போதிப்பதற்காக மூன்று சிறிய நூல்களை 1591 முதல் 1594 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். பல விதமான எதிர்ப்புகளால் தன் சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜான் லியோனார்தி, தன் ஆன்மீக குருவான பிலிப்பு நேரியோடு விருந்தினராக உரோமை நகரில் இருந்த போது 1591 ஆம் ஆண்டு ‘கிறிஸ்தவக் குடும்பம் ஒரு நிறுவனம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். பல்வேறு துன்பத்தின் சூழ்நிலையில் இருந்த போதும் கூட ஜான் லியோனார்தி எழுதிய நூல்களானது, அவரின் இறப்பிற்கு பிறகும் 1642 ஆம் ஆண்டு நேப்பில்ஸிலிருந்தும், 1673 ஆம் ஆண்டு உரோமை நகரிலிருந்தும், 1861 ஆம் ஆண்டு லூக்கா நகரிலிருந்தும் தொடர்ந்து மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. 

இதே போன்று, 1593 ஆம் ஆண்டு உரோமை நகரில் ‘பெண்களின் வீண் ஆடம்பரங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு இந்நூலானது மீண்டும் 1673 ஆம் ஆண்டு உரோமை நகரில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் மீண்டும் இந்தப் புத்தகம் 1862 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. 1594 ஆம் ஆண்டு நேப்பில்ஸ் நகரில் ‘குழந்தைகளுக்கான சிறந்த கல்வி’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். இவ்வாறாக, ஜான் லியோனார்தியின் நூல்களானது ஆழ்ந்த கருத்துக்களையும், அனைவராலும் பெரும் வரவேற்பையும் பெற்றதாக இருந்தது. 

ஜான் லியோனார்தி தன் எழுத்துப் பணியைப் பற்றி இவ்வாறாகக் கூறுகின்றார். ‘மற்ற ஆசிரியர்கள் பல பக்கங்களில், புத்தக வடிவில் கூறுவதை நான் சில வரிகளில், அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிய நடையில் கூறுகின்றேன்’. 

குருவாக தன்னை முழுவதும் இறைப்பணியிலும், எழுத்துப் பணியிலும் ஈடுபடுத்திய ஜான் லியோனார்தி சீர்திருத்தப் பணியையும் சிறப்பாகச் செய்தார். அவர் செய்த சீர்திருத்தப் பணியில்; மிகவும் முக்கியமாக ஒருசிலவற்றை வலியுறுத்தினார்.  

புனிதரின் சீர்த்திருத்தப் பணியில் வலியுறுத்தியவை தொகு

தியானம், செபம், ஏழ்மை இவற்றை அனுசரிக்க முடியாதவர்கள் துறவற வாழ்வு வாழத் தகுதியற்றவர்கள். ஒவ்வொரு துறவிகளும், துறவற சபைகளும் தவமும், செபமும் அடிப்படையான ஒன்றாக கருதி வாழ வேண்டும். நவதுறவிகளின் வழிகாட்டிகள், தங்களது முன்மாதிரியான நடத்தையை மிக மிக முக்கியமாக கருதி வாழ வேண்டும். உங்களது நவ துறவியர்கள் லீலி மலர்களைப் போன்றவர்கள். அவை ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாடிவிடுவதைப் போல், அவர்கள் உங்களது தவறான முன்மாதிரிகையினால் கெட்டுவிடாமல் இருக்க நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் சிறந்த போதனை உங்களது முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். 

துறவிகள் அனைவரும் தங்களது தலைவருடன் நல் உறவுடன் வாழ வேண்டும். அப்படி நல் உறவு இல்லாத துறவற வாழ்வு தொய்வடைந்து காணப்படும். துறவற வாழ்வில் அனைத்துமே பொதுவாக இருக்க வேண்டும். சுகப் போக, ஆடம்பர வாழக்கையையும், உயர்தர உடைகளையும் தவிர்த்து வாழ வேண்டும். துறவற வாழ்வில் நவதுறவிகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப் பட வேண்டும். துறவற இல்லங்களில் அன்பும், அமைதியும் அனுசரிக்க வேண்டும். துறவற சபை ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து வாழ வேண்டும். ஒவ்வொரு துறவியும் மற்றவர்களை ஊக்குவித்தும், மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 

காலச் சூழலுக்கேற்ப தங்களது வாழ்வையும், பணியையும் மாற்றி அமைத்து வாழ வேண்டும். துறவற சபைகளிலும், இல்லங்களிலும் ‘எவ்வாறு மருந்தானது தன் இயற்கை தன்மையை மாற்றாமல், சுகத்தைக் கொடுப்பது போல்’ புதுப்பித்தலானது நடைபெற வேண்டும். துறவற வாழ்வில் விவேகமும், கண்டிப்பும் அதிர்ச்சியைக் கொடுக்காமல், அன்பினால் இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். துறவற வாழ்வு வாழ விரும்புவோரை, புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கும் போது விவேகத்துடனும், கவனத்துடனும் தேர்ந்துகொள்ள வேண்டும். துறவிகள் தங்களையே முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும். 

புனிதரின் ஒருசில ஆன்மீக வார்த்தைகள் தொகு

  • புனிதனாகு புனிதமாக்கு (மற்றவர்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றால் முதலில் நீ புனிதனாக மாறு).
  • சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள்.
  • கிறிஸ்துவை உங்கள் அளவுக்கோலாகக் கொண்டு செயல்படுங்கள்.
  • கவலைப்படாதீர்கள்! உங்கள் அனைவரையும் அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைத்துள்ளேன். அன்னைமரி உங்கள் அனைவரையும் பாதுகாத்து, வழிநடத்துவாள்.
  • கிறிஸ்துவை முன்னிட்டு சிலுவையை ஏற்க வேண்டும். அப்படி ஏற்கின்ற போது நமக்கு அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும். 
  • தலையில் இல்லாததை யாரும் உடலில் கேட்க இயலாது. 
  • கிறிஸ்துவே உங்கள் வாழ்வின் முதற்படியாக இருக்கட்டும்.

புனிதரின் ஒருசில கடிதங்கள் தொகு

  • இல்லத்தில் உள்ள ஒவ்வொருவரும் கீழ்ப்படிதலின் ஓவியமாகவும், தாழ்ச்சியின் சின்னமாகவும், அமைந்த உள்ளம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கடவுளின் அதிமிகு மேன்மையைக் கண்டுணர்ந்து வாழ முடியும். (1604 அக்டோபர் 19). 
  • பெரிய தியாகங்களை மேற்கொண்டால் தான் நாம் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். பெரிய நல்ல காரியங்களைச் செயல்படுத்துவதை பெரிய நல்ல ஆன்மாக்களிடமே ஒப்படைக்க வேண்டும். 
  • ஆண்டவரது அன்புப்பணியில் நாம் நம்மையே முழுவதுமாகக் கையளிக்க வேண்டும். ஒருநாளும் நமது சொந்த விருப்பத்திற்காக அன்புப் பணியைக் காட்டி கொடுத்தல் கூடாது. அவைகளிலிருந்து நம்மை முழுவதுமாக விடுவித்தும், தூயஆவியின் செயல்களுக்கு எதிரானவைகளை தவிர்த்தும் வாழ முயற்சிக்க வேண்டும். 
  • எப்பொழுதும் இல்லமானது அழகாகவும், கவனமுடனும் அதனுடைய தகுதிக்கு ஏற்றவாறு தூய்மையாகவும் இருக்க வேண்டும். (கடிதம் 86). 
  • சரியான, முறையான வழிகளில் ஆண்டவருக்கு பணிபுரிய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். (கடிதம் 87). 
  • அடுத்தவனுடைய செயல்பாடுகளை மிகவும் கவனமாக உற்று நோக்குங்கள். அவற்றிலிருந்து எப்பொழுதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். (கடிதம் 148). 
  • கிறிஸ்துவை முன்னிட்டு சிலுவையை ஏற்க வேண்டும். அப்படியானால் எந்த பயத்தையும் துரத்திவிட்டு, நம் இதயங்களை இறைவன் பக்கம் உயர்த்த வேண்டும். அப்பொழுது அவரில் நமக்கு அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும். நம்மில் எழும் சுயவிருப்பங்களை களைந்துவிட்டு இறைப்பணியில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். (கடிதம் 31, 1601 அக்டோபர் 27). 
  • மற்றவர்களால் வரும் துன்பங்களை பொருட்படுத்தாது, நம்மையே நாம் சோதனைக்குள்ளாக்கி, நல்ல செயல்களைச் செய்பவர்களாக வாழ வேண்டும். (கடிதம் 56). 
  • செய்யும் செயல்களில் ஒருவர் தன் விருப்பத்திற்கு ஏற்ப தனது வழியில் நடக்கவில்லை என்பதைக் கண்டுணர்ந்தால், அவர் தம்மையே மாற்ற முற்பட வேண்டும். தனது சுயவிருப்பங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, முழுவதுமாக செபத்திற்கு கையளித்து வாழ வேண்டும். இதன் வழியாகத் தான் ஒருவர் உண்மையான அமைதியையும், நிசப்தமான நிலையையும் காண முடியும். (கடிதம் 127).  

புனிதரின் மரணம்  தொகு

ஜான் லியோனார்தி வாழ்ந்த அக்காலகட்டத்தில், குறிப்பாக 1609 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள உரோமை நகர் முழுவதும் தொற்று நோய் பரவியது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார்கள். அங்கு வாழ்ந்த இறையன்னை சபையின் துறவியர்களும் இந்நோயால் அவதியுற்றனர். அந்நோயால் அவதியுற்று பலவிதமான துன்பத்தில் கவலையுற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலான வார்த்தையாக, ஜான் லியோனார்தி இறை சித்தத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு இவ்வாறாகக் கூறினார். “இறைவன் தனக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது இங்கும் அங்குமாக நம்மைத் தொடுகின்றார்”. 

தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தபோது, தொற்று நோயானது ஜான் லியோனார்தியையும் வெகுவாக தாக்கியது. அந்நோயினால் அவதியுற்றப் போதும் ஜான் லியோனார்தி, தன் ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். குறிப்பாக, அப்போஸ்தலரான புனித மத்தேயு திருவிழா திருப்பலியை நிறைவேற்றி, பலருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தையும் வழங்கிய பின், அவருக்கு காய்ச்சல் அதிகமாகி ஏறக்குறைய நான்கு மணிநேரம் சுயநினைவின்றி இருந்தார். பின் சுயநினைவு பெற்றதும், தன் இறுதி நேரத்தை உணர்ந்த ஜான் லியோனார்தி தன்னுடைய பணிகளை, தன் சபையில் உள்ள துறவிகளுக்கு பகிர்ந்தளித்தார். அருட்தந்தை டோமினிக்கோ டுச்சி என்பவரை உரோமையில் இருந்த குழுமத்தின் இல்லத் தலைவராக நியமித்தார். அதன்பின் தன் சபையின் குருக்களுக்கு இவ்வாறாக அறிவுரை வழங்கினார். “உங்களது அழைப்பில் உண்மையோடும், கீழ்ப்படிதலோடும் நடந்து, ஒருவரை ஒருவர் அன்புச் செய்து வாழுங்கள்” என்று கூறிய ஜான் லியோனார்தி 1609 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் நாள் இறைவனில் கலந்தார். 

புனிதர் வித்திட்ட விருச்சங்கள் தொகு

இறையன்னை சபையை தோற்றுவித்த ஜான் லியோனார்தி பல நாடுகளுக்கும் சென்று இறைப்பணிச் செய்ய, குறிப்பாக இந்திய மண்ணில் பணிச் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அப்போதைய திருத்தந்தையின் வார்த்தைக்கும், தன் ஆன்மீக தந்தை பிலிப் நெரிக்கும் கீழ்ப்படிந்து, தனது பணியை தன் சொந்த நாடான இத்தாலியிலும் அதனைச் சுற்றியுள்ள நகர்களிலும் செய்தார். அவர் இறைப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும், லூத்தரன் சபைக்கு எதிராக நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை நிலைநாட்டுவதிலும், அன்னை மரியாளின் பக்தியை வளர்ப்பதிலும், சிறுவர்க்கு மறைக்கல்வி போதிப்பதிலும், திருச்சபையில் புதுமறுமலர்ச்சியைக் கொண்டுவருவதிலும், விசுவாச பரப்புதல் சபையின் துணை நிறுவனராகவும் தன்னையே முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, மிகவும் ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் பல பணிகளைச் சிறப்புறச் செய்தார். ஜான் லியோனார்தியின் பணியானது அப்பகுதிக்கு மிகவும் தேவைப்பட்டதாக அப்போதைய திருத்தந்தை குறிப்பிட்டிருக்கிறார். 

இறைப்பணிச் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, விண்ணேற்பு அன்னையின் பாதுகாவலில் தான் தோற்றுவித்த ‘இறையன்னை சபையை’ ஒப்புவித்தார். தாயின் கருவில் உருவாகும் குழந்தைப் போன்று உருவாகிய இறையன்னை சபையானது, இத்தாலி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இத்தாலியை தலைமையகமாகக் கொண்டு  செயல்படுகின்றது. இப்பொழுது இத்தாலி, இந்தியா, தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறைப்பணி ஆற்றி வருகிறது. இத்தாலி நாட்டில் லூக்கா, நாப்போலி, கம்பித்தேலி (ரோம்), தோரே மவுரா, சன் பர்தினாந்தோ, கல்லிபோலி, போஸாந்த்ரா மற்றும் லரியானோ போன்ற இடங்களிலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி (சமயபுரம்), மதுரை (ஊத்துப்பட்டி), நாகர்கோவில் (அழிக்கால்) மற்றும் வேலூர் (சானிப்பூண்டி) போன்ற இடங்களிலும், தென் அமெரிக்காவில் சீலி மற்றும் கொலம்பியா, தென் ஆப்பிரிக்காவில் நைஜீரியா, இந்தோனேசியாவில் குப்பாங் ஆகிய இடங்களில் இறையன்னை சபையானது தங்களது கால் தடம் பதித்து, உலகெல்லாம் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் (மாற்கு 16: 15) என்று மொழிந்த இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கியும், பணிபுரிந்தும் வருகின்றது. 

இறையன்னை சபை ஆற்றிவரும் பணிகள் தொகு

  • இறைப்பணி 
  • நற்செய்தி அறிவிக்கும் பணி
  • பங்குப்பணி
  • கல்விப்பணி
  • இளையோர் பணி
  • மருத்துவப்பணி
  • ஆற்றுப்படுத்தும் பணி
  • சமூகப்பணி
  • காலச் சூழலுக்கு ஏற்ப பணி என்று ஜான் லியோனார்தியால் ஆரம்பிக்கப்பட்ட, இறையன்னை சபை பல பணிகளை புரிவதில் முயற்சிகளையும், செயல்திட்டங்களையும் தீட்டி, எதிர்கால முன்னெடுப்புகளை நோக்கிய வண்ணம், இறை அன்னையின் பரிந்துரையிலும், பாதுகாப்பிலும், ஜான் லியோனார்தியின் வழிகாட்டுதலாலும் வளர்ந்து வருகிறது.

புனிதரை நோக்கிய ஜெபம் தொகு

நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா, 

மறைபணியாளர் ஜோவான்னி லியோனார்தி வழியாக

மக்கள் நற்செய்திப் போதனைப் பெறவும், 

சிறுவர் சிறுமியர் மறையறிவு பெறவும் செய்தீர், 

அவருடைய முயற்சியால் நற்செய்தி அறிவிப்பு சபைக்கு 

வித்திடவும் அருள்கூர்ந்தீர். 

ஆர்வமிக்க இப்புனிதரின் பரிந்துரையால் 

மெய்யான விசுவாசம் எங்கும் எக்காலமும் 

வளர்ச்சி பெற அருள்வீராக! ஆமென். 

புனிதரின் மன்றாட்டு மாலை தொகு

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

புனித ஊற்றின் தந்தையே இறைவா!

புனிதத்தை அருளும் இயேசுவே இறைவா!

புனிதப்படுத்தும் தூய ஆவியே இறைவா!

புனிதத்தின் மாதிரியாம் புனித லியோனார்தியாரே!

எங்கள் தந்தையும், வழிகாட்டியுமானவரே!

எங்கள் நம்பிக்கையின் துணையாளரே!

எங்கள் கீழப்;படிதலின் முன்மாதிரியே!

ஏழ்மையின் மாதிரியே!

துன்பப்படுவோரின் ஆறுதலே!

மருத்துவர்களின் பாதுகாவலரே!

புனிதம் மிக்க மறைப்பணியாளரே!

அமைதியின் தூதுவரே!

நற்செய்தியின் பணியாளரே!

மறைக்கல்வியின் வழிகாட்டியே!

துறவற சபைகளைச் சீர்திருத்தம் செய்தவரே!

இறையன்னை பக்தியை வளர்த்தவரே!

நற்கருணை வழிபாட்டைக் கொணர்ந்தவரே!

அர்ப்பண வாழ்வின் வழிகாட்டியே!

நோயுற்றோருக்கு அடைக்கலமே!

திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தவரே!

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக…

    புனித லியோனார்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக

தாயும் தந்தையுமான எங்கள் இறைவா! புனித ஜான் லியோனார்தியாரை எமக்குத் தந்து, நற்செய்தியின் படிப்பினைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், நாங்கள் புனிதம் பெறவும் அருளுகின்றீர். எம் புனிதரின் பரிந்துரையால், எங்கள் விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று, உமக்கு சாட்சிகளாய் இருக்க அருள் புரியும்! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். 

புனிதரின் பாடல்கள் தொகு

பாடல் 1 தொகு

இறையன்னை சபையின் நிறுவனராம்

ஜான் லியோனார்தியின் நினைவலையில்

அவர் முன்னே கூடிடுவோம்

அவர் புகழைப் பாடிடுவோம் - 2

லூக்காவில் பிறந்து மருத்துவம் பயின்று

இறைவனின் அழைப்பை உணர்ந்தாரே – 2

கொலம்பினஸ் இளைஞர் கூட்டத்தோடு

அர்ப்பண வாழ்வை தொடர்ந்தாரே – 2

நற்கருணை வழிபாடு சிறுவர்க்கு மறைக்கல்வி

மரியன்னைப் பக்தியை வளர்த்தாரே – 2

சபைகளை சீர்திருத்தம் செய்தவரை

நம்வாழ்வை சீர்ப்படுத்த வேண்டுவோமே – 2

பாடல் 2 தொகு

சுடர்விடும் தீபமாய் எரிந்திடும்

ஒளியாய் மண்ணில் வந்தவரே

இறையன்னை சபையை புனிதமாய்

தந்த எங்கள் லியோனார்தியே

உம்மை புகழ்வோம் இன்னாளிலே

உம்மில் மகிழ்வோம் என் நாளுமே – 2

லூக்கா நகரில் பிறந்தவரே

இறையன்னை பக்தியை வளர்த்தவரே – 2

மறைப்பணி ஆர்வம் நிறைந்ததனாலே

குருத்துவ வாழ்வை ஏற்றவரே – 2

கொலம்பினஸ் இளைஞரை அழைத்தீரே

இறையன்னை சபையை நிறுவினிரே

இறைவனில் கொண்ட தாகத்தினாலே

நற்கருணை வழிபாட்டை கொணர்ந்தீரே!

உம்மை…

பாடல் 3 தொகு

மரியன்னை மகனாம் எம் தந்தையாம்

அன்னை சபை தந்த லியோனார்தியாரே

இணைந்து வந்தோம் உம்மை புகழ

அருள் வேண்டி நின்றோம் உம்மில் மகிழ

இளைஞர் கூட்டமொன்றை தேர்ந்தெடுத்தார்

புதிய பாதையொன்றை வகுத்து தந்தார்

மரியன்னை பக்தியை வளர்த்து தந்தார்

உம்மை நாங்கள் போற்றுகின்றோம்

பாடல் 4 தொகு

இறைவழி வாழ்ந்த எங்கள் லியோனார்தியே

இன்பம் பொங்க பாடுகின்றோம் புகழ் எண்ணியே

போற்றுகின்றோம் உம்மை புகழுகின்றோம்

வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம்

நீரே எங்கள் தந்தை நாங்கள் உந்தன் மந்தை

நற்கருணை வழிபாட்டை வளர்த்தவர்

மரியன்னை பக்தியை ஊக்குவித்தவர் - 2

நன்மறையை சிறுவர்க்கு கற்பித்தவர் - 2

அனைத்தையும் வாழ்வாக வாழ்;ந்துவிட்டவர் - இவை

அனைத்தையும் வாழ்வாக வாழ்;ந்துவிட்டவர்

அவரே நம் புனிதர் ஜோவான்னி லியோனார்தியே

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_ஜான்_லியோனார்தி&oldid=3654950" இலிருந்து மீள்விக்கப்பட்டது