பொன் முட்டையிட்ட வாத்து

"பொன் முட்டையிட்ட வாத்து" (The Goose that Laid the Golden Eggs) என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்று. இக்கதை, பெர்ரி பொருளடக்கத்தில் 87 ஆவது கதையாகவுள்ளது. இதற்கொத்த பல கதைகள் கீழைநாடுகளிலும் வழங்கப்படுகின்றன. பலவற்றுள் பொன் முட்டையிடுவது வாத்து எனப் பல கதைகளில் கூறப்பட்டாலும் வேறுசில கதைகள் வாத்துக்குப் பதிலாக கோழி அல்லது வேறுசில பறவைகளைக் கொண்டுள்ளன. இக்கதையிலிருந்து, "பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வது" என்ற வழக்குத் தொடரானது பேராசைப்பட்டு கையிலுள்ள வாய்ப்பை நழுவவிடும் செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

"பொன் முட்டையிடும் வாத்து" (1919 ஆவது பதிப்பு) - மிலோ வின்ட்டரின் விளக்கப்படம்

கதையும் செய்தியும் தொகு

அவியனசு, வில்லியம் காக்சுட்டன் ஆகிய இரு எழுத்தாளர்களும் பொன் முட்டையிடும் வாத்தை வைத்து இரண்டு வேறுபட்டக் கதைகளைக் கூறுகின்றனர். அதே சமயம் வேறுசில கதைகளில் கோழி இடம்பெறுகிறது.[1] எழுத்தாளர் ஜார்ஜ் பைலர் டவுன்சென்டு எழுதிய கதை:

"குடிசையில் வாழ்ந்துவந்த ஒரு மனிதனும் அவன் மனைவியும் ஒரு கோழியை வளர்த்து வந்தனர். அக்கோழி ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டையிட்டு வந்தது. அவர்கள் இருவரும் நாளும் ஒரு பொன் முட்டையிடுவதால் அக்கோழியின் வயிற்றுக்குள் நிறைய பொன் முட்டைகள் இருக்குமென்றும் அவற்றை ஒரே நாளில் அடையலாம் என்ற பேராசையாலும் அக்கோழியைக் கொன்று வயிற்றுக்குள் பொன் முட்டைகளைத் தேடி ஒன்றையும் காணாமல் ஏமாந்து போகின்றனர். மொத்தமாகப் பொன் முட்டைகளை எடுத்து விரைவாகச் செல்வந்தர்களாகி விடலாம் என்ற பேராசையினால் அந்த முட்டாள் இணையர்கள் நாள்தோறும் கிடைத்து வந்த செல்வத்தையும் இழக்க நேர்ந்தது."[2]
 
"லா போந்தைனே" இன் கதைக்கு கசுடெவ் டோர் வரைந்த படம்

துவக்ககாலக் கதைகளில் நீதியைவிட பேராசை குறித்த எச்சரிக்கை மட்டுமே காணப்பட்டது. பிரெஞ்சு நீதிக்கதையாளர் "லா போந்தைனே" இன் கதையானது (Fables V.13), "இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் பேராசைக்காரர்கள் அனைத்தையுமிழப்பர்" என்ற உணர்ச்சிமயமான கருத்துடன் துவங்கி இறுதியில் அளவுக்குமீறி ஆசைப்பட்டு ஏழையானவர்களுக்கு இக்கதை பொருந்தும் என முடிகிறது[3] பொன்முட்டையிட்ட வாத்துக் கதையின் தற்போதைய வடிவங்களில் காணப்படும் நீதியானது ('பேராசை பெருநஷ்டம்' (சாமுவேல் குரோக்சல், 1722)) பிற்காலச் சேர்க்கைகளாகும்.[4][5] மேலும் இக்கதைகளில் கோழியைவிட வாத்துதான் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மரபுத்தொடரான "பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிடாதே" அல்லது "பொன்முட்டை வாத்தைக் கொல்வது" என்பதற்கு சமமான ஆங்கில மரபுத்தொடரானது இக்கதையிலிருந்து தோன்றியதாகும்.[6] காக்சுட்டனின் கதைப்படி, வாத்தின் சொந்தக்காரர் வாத்திடம் தினமும் இரண்டு முட்டையிடுமாறு கேட்டதாகவும், வாத்து அது தன்னால் முடியாது என்று கூறியதால் அவர் அதனைக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது[7] இதே நீதிதான் இக்னசி கிரசிக்கியின் "தி பார்மர்" ("The Farmer") கதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தனது நிலத்திலிருந்து இரட்டிப்பான இலாபம் காண ஆசைப்பட்டு இரு அறுவடைக்கு முயற்சி செய்த உழவனொருவன் நஷ்டப்பட்டத்தை இக்கதை கூறுகிறது.

சில கீழைநாட்டு வடிவங்கள் தொகு

இக்கதையையொத்த கதையொன்று ("சுவன்னஹம்ச ஜடக") புத்த நூலில் ("வினயா") இடம்பெற்றுள்ளது.[8] இக்கதையின்படி ஒரு ஏழைக் குடும்பத்தின் தந்தை பொன் இறகுகளைக் கொண்ட அன்னமாக மறுபிறவி எடுத்துவந்து தன்னிடமிருந்து ஒரு இறகைப் பிடுங்கி விற்று பணமாக்கி குடும்ப செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்கிறார். மேலும் மீண்டும் எப்போதாவது வந்து அதேபோல ஒரு இறகைப் பிடுங்கிக்கொள்ளச் சொல்கிறாள். ஆனால் பேராசைகொண்ட அக்குடும்பத்தலைவி அனைத்து இறகுகளையும் மொத்தமாகப் பிடுங்க அவை அனைத்தும் சாதாரண இறகுகளாக மாறிவிட்டதோடு, அன்னத்திற்கு மீண்டும் தோன்றிய இறகுகளும் முன்போல பொன்னாக இல்லாமல் சாதாரண இறகுகளாக இருந்தன.[9]

மகாபாரத்தின் ஒரு கிளைக்கதையில் பொன்னை உமிழும் வனப்பறவையைக் கண்ட ஒருவன் பேராசையால் அதனைக் கொன்றதாக உள்ளது[10]

மேற்கோள்கள் தொகு

  • Aesop's Fables, a new translation by V. S. Vernon Jones (London: W. Heinemann, 1912), p. 2.
  1. "The Man And The Golden Eggs". Mythfolklore.net. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  2. "163. The Hen and the Golden Eggs (Perry 87)". Mythfolklore.net. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  3. "13. The Hen With The Golden Eggs [17]". Oaks.nvg.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  4. "Jacobs 57. The Goose With the Golden Eggs (Perry 87)". Mythfolklore.net. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  5. Available on Google Books, pp.228-9 books.google.co.uk
  6. Marvin, Dwight Edwards (1922). The Antiquity of Proverbs: Fifty Familiar Proverbs and Folk Sayings with Annotations and Lists of Connected Forms, Found in All Parts of the World. G. P. Putnam's Sons. பக். 188–189. https://books.google.com/books?id=ttHYAAAAMAAJ. 
  7. "Avyan 24. Of the goos and of her lord (Perry 87)". Mythfolklore.net. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  8. "Suvannahamsa Jataka (#136)". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  9. No. 136. Suvaṇṇahaṁsa-Jātaka
  10. Mahabharata 2.55.10, Buitenen translation vol. 2, p. 132

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_முட்டையிட்ட_வாத்து&oldid=3837447" இலிருந்து மீள்விக்கப்பட்டது