மானாஞ்சிறா

கேரளத்தின், கோழிக்கோட்டில் உள்ள நீர்நிலை

மானாஞ்சிறா (Mananchira) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், கோழிக்கோடு நகரின் மையத்தில் மனிதரால் வெட்டபட்ட நன்னீர் குளம் ஆகும். இந்த குளம் 3.49 ஏக்கர் (14,120 மீ 2 ) பரப்பளவில், செவ்வக வடிவத்தில் உள்ளது. இது இயற்கை நீரூற்றுகள் மூலம் நீரைப் பெறுகிறது.

மானாஞ்சிறா
மானாஞ்சிறா பூங்கா
அமைவிடம்இந்தியா, கேரளம், கோழிக்கோடு
ஆள்கூறுகள்11°15′15.9″N 75°46′47.9″E / 11.254417°N 75.779972°E / 11.254417; 75.779972
வகைமனிதர் உருவாக்கியது
அதிகபட்ச நீளம்130 m (430 அடி)
அதிகபட்ச அகலம்109 m (358 அடி)
மேற்பரப்பளவு14,120 m2 (152,000 sq ft)
ஜேசெக் டைலிகி உருவாக்கிய ஒரு சிற்பமான : "உங்களால் முடிந்தால் கொடுங்கள் - உங்களுக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்"
மானாஞ்சிறா தோட்டங்கள்

வரலாறு தொகு

14 ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு சிற்றரசரான சாமுத்திரி மன விக்ரமனால் மானாஞ்சிறை குளியல் குளமாக வெட்டபட்டது. கிழக்கிலும், மேற்கில் இரண்டு அரண்மனைகளைக் கட்ட குளத்தை வெட்டும்போது கிடைத்த செம்புரைக்கல் பயன்படுத்தப்பட்டது. [1]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோழிகோட்டின் நகர மன்றம் இந்த குளத்து நீரை குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. மேலும் குளத்தில் குளித்தல், கழுவுதல், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுபடுதல் போன்றவற்றை தடைசெய்தது. இந்தக் கட்டுப்பாடு அன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. [2] இந்த குளம் கோழிக்கோட்டுக்கான குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ளது, ஆனால் நகராட்சியின் கழிவுநீர், அப்பகுதியின் கழிவுகள், அருகிலுள்ள ஜவுளி தொழிற்சாலைகளின் மாசுகள் போன்றவற்றால் குளம் மாசுபடுகிறது. மத்திய நீர் பகுப்பாய்வு ஆய்வகமும், புதுச்சேரி நடுவண் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் 2000 ஆம் ஆண்டில் நீரைப் பகுப்பாய்வு செய்ததில், குளமானது குறிப்பாக மழைக்காலத்தில் பாக்டீரியாவியல் ரீதியாக மாசுபட்டுள்ளது என்றும் அதிக நீர்காரம் கொண்டுள்ளது எனவும் தெரியவந்தது.[3]

புதிய பூங்கா தொகு

ஏரியைச் சுற்றியுள்ள பூங்கா வளாகமான மானாஞ்சிறா சதுக்கம் 1994 இல் திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மானாஞ்சிறா சதுக்கம் மானாஞ்சிறா மைதானம் (விளையாட்டு மைதானம்) என்று அழைக்கப்பட்டது. இது கால்பந்துக்கு பிரபலமானதாக இருந்தது. பல கால்பந்து போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. மானாஞ்சிறா மைதானமானது மானாஞ்சிறா ஐயப்பன் விளக்கு என்ற சமய நிகழ்வுக்கு பிரபலமானதாக இருந்தது. அப்போதைய கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அமிதாப் காந்தின் நடவடிக்கையின் பேரில் மானாஞ்சிறா மைதானமானது மானாஞ்சிறா சதுக்கம் என்று பெயரிடப்பட்டது. இங்கு நடந்துவந்த மானாஞ்சிறா ஐயப்பன் விளக்கு (ஒவ்வொரு திசம்பரிலும் நடைபெறும் ஒரு சமய விழா) நிகழ்வானது முதலக்குளம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது (மானாஞ்சிறா சதுக்கம் / மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு மைதானமாகும். இது முதலக்குளம் என்ற குளத்தை தூர்த்து உருவாக்கப்பட்டது).

கலாச்சார நிகழ்வுகள் தொகு

மானாஞ்சிறா சதுக்கத்தை எந்தவொரு கலாச்சார அல்லது சமய நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படாது என்ற விதியை அதிகாரிகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் இது கலாச்சார நோக்கங்களுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூங்காவிற்குள் மலையாள எழுத்தாளர்களின் பல அழகிய சிலைகள் உள்ளன. மதியம் இரண்டு மணிக்குப் பிறகு பூங்கா திறக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது. பட்டாலா பாலி மற்றும் மிட்டாய் தெரு போன்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்ற இடங்கள் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளன. டவுன்ஹால் மற்றும் ஓவிய காட்சியகம் (ஆர்ட் கேலரி) போன்றவை பூங்காவை ஒட்டியுள்ளன. இந்த பூங்காவில் 250 அழகான விளக்கு கம்பங்கள், ஒரு செயற்கை சிற்றோடை மற்றும் திறந்தவெளி திரையரங்கு போன்றவை உள்ளன. பூங்காவிற்கு அருகிலுள்ள பொது நூலகத்தில் மலையாளம் மற்றும் ஆங்கில புத்தகங்களின் சேகரிப்பு பெருமளவில் உள்ளது.

 
சி.எஸ்.ஐ தேவாலயம், மானாஞ்சிறா, கோழிக்கோடு

முதலைக்குளம் தொகு

மானாஞ்சிறாவின் வடக்குப் பகுதி முதலைக்குளம் என்று அழைக்கப்படுகிறது. முதலைக்குளம் என்பது பாரம்பரியமாக சலவைத் தொழிலாளர்கள் இப்போது கூட துணி உலர்த்தும் மைதானமாகும். டூரிங் புத்தக அங்காடி, மகளிர் மருத்துவமனை, அகமதியா மசூதி ஆகியவை இங்கு அமைந்துள்ளன. மேலும் பாலயம் ஜுமா மசூதி மற்றும் பழைய பாளையம் பேருந்து நிலையமும் இங்கு அமைந்துள்ளது. பாளையம் சந்திப்பு கோழிகோடு நகரத்தின் முதல் கான்கிரீட் கட்டிடமாக இருந்த ஆங்கிலேயர் காலத்திய கட்டிடத்தை கொண்டுள்ளது.

மானாஞ்சிறா சதுக்கம் தொகு

மானாஞ்சிறா சதுக்கம் கோழிக்கோடு நகரின் மையத்தில் அமைந்துள்ள பூங்கா ஆகும். மானாஞ்சிறாவை ஒட்டியுள்ள வரலாற்று மைதனமானது மரங்கள், செடிகள், புதர்கள், செயற்கை மலை, சிற்பம், திறந்தவெளி திரையரங்கம், இசை நீரூற்று ஆகியவற்றைக் கொண்ட இடமாக மாற்றப்பட்டுள்ளது.

படக்காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. Ayyar, K.V. Krishna (1966). A short history of Kerala. Pai. 
  2. Nagarlok (Centree for Training and Research in Municipal Administration) 6. 1974. 
  3. "Water Quality Status on Mananchira Lake in Kozhikode, Kerala". Environmental crisis and security in the new millennium. Delhi: Anmol Publications. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-261-2178-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானாஞ்சிறா&oldid=3733720" இலிருந்து மீள்விக்கப்பட்டது