வெண்பாப் பாட்டியல்

(வச்சணந்திமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெண்பாப் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூல். இதற்கு வச்சணந்திமாலை என்னும் இன்னொரு பெயரும் வழங்கிவருகின்றது. இதை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனப்படும் புலவர் ஆவார். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தி (வஜ்ர நந்தி) என்பாரின் பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனத் தெரிகிறது. இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் என்னும் இலக்கண நூலை முதல் நூலாக வைத்தே குணவீர பண்டிதர் இதனை இயற்றியுள்ளார்[1].

காலம் தொகு

இந்த நூல் தோன்றிய காலம் 13-ஆம் நூற்றாண்டு. [2] [3]

அமைப்பு தொகு

மொத்தம் 100 வெண்பாக்களைக் கொண்டு அந்தாதி முறையில் அமைந்த இந்த நூல் மூன்று இயல்களைக் கொண்டது. அவை,

  • மொழியியல்,
  • செய்யுளியல்,
  • பொதுவியல்

என்பன. முதன் மொழியியலில் 22 பாடல்களும் செய்யுளியலில் 40 பாடல்களும் பொதுவியலில் 38 பாடல்களும் உள்ளன.

முதன்மொழியியல்

சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நட்சத்திரம், கதி, கணம், முதலான பொருத்தங்கள் 22 வெண்பாக்களில் கூறப்பட்டுள்ளன.

செய்யுளியல்

ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி, பிள்ளைக்கவி, பல்சந்தமாலை, அந்தாதி, கலம்பகம், ஒலியந்தாதி, மும்மணிக்கோவை, ஊர்நேரிசை, ஊர்இன்னிசை, கோவை, கைக்கிளை, மும்மணிமாலை, நான்மணிமாலை, இருபா இருபது, இரட்டைமணி மாலை (இரண்டு வகை), இணைமணி மாலை, தசாங்கம், சின்னப்பூ, தசாங்கப்பத்து, விருத்தவகை நூல்கள், ஊர்வெண்பா, அலங்கார பஞ்சகம், ஊசல், நாழிகை வெண்பா, அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பெண்கள் பருவம், உலா, குழமகன், வளமடல், அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம், ஆற்றுப்படை, தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை, தாரகமாலை, மங்கலவள்ளை, யானைவஞ்சி, மெய்க்கீர்த்தி, கையறமோதரப்பா, புகழ்ச்சிமாலை, நாம மாலை, வருக்கமாலை, செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி, பரணி முதலான சிற்றிலக்கியங்களுக்கும், பெருங்காப்பியத்துக்கும் இப்பகுதியில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலும் அகலக்கவி, கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞன் ஆகிய கவிஞர்களுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இதில் 48 வெண்பாக்கள் உள்ளன.

பொதுவியல்

இதில் நால்வகைப் பாக்களுக்கும் சாதி, நிறம், இடம், நாள், இராசி, தேவதை போன்றவை கூறப்பட்டுள்ளன. மேலும் அந்தணர், மன்னர், பூவைசியர், தனவைசியர், சூத்திரர் முதலானோர் இயல்புகளும் கூறப்பட்டுள்ளன. அதிலு 38 வெண்பாக்கள் உள்ளன.

குறிப்புகள் தொகு

  1. இளங்குமரன், இரா., 2009. பக். 274.
  2. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, முதல் பதிப்பு 1936, மூன்றாம் பதிப்பு 1951, கொ. இராமலிங்கத் தம்பிரான் விளக்க உரையுடன்.
  3. இதன் உரையில் வரும் கந்தபுராணம், கூர்ம புராணம் போன்ற மேற்கோள் நூல்களைக் கொண்டு இது 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது எனக் கொள்பவர் கருத்து பொருந்தாது.

உசாத்துணைகள் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பாப்_பாட்டியல்&oldid=3322937" இலிருந்து மீள்விக்கப்பட்டது