வண்ணான் தாழி

வண்ணான் தாழி விளையாட்டு சிறுவர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

தாழி தொகு

ஊர்மக்களின் துணியைத் துவைத்துத் தருபவன் வண்ணான். அவன் சூளை வைத்துத் துணிகளைத் துவைப்பான். வண்ணான் சூளை மூன்று நான்கு மண்பானைகள் வைத்துக் கட்டப்பட்டிருக்கும். இந்த மண்பானைகளுக்கு வண்ணான் தாழி என்று பெயர். இந்தத் தாழியில் தண்ணீர் ஊற்றி, நனைத்த அழுக்குத் துணிகளை உளைமண்ணில் (உப்புமண்ணில்) புரட்டி, பானைகளின் மேலே அடுக்குவர். பானையின் பின்புறம் முள் விறகுகள் இட்டுப் பானைகளைச் சூடேற்றுவர். பானையிலிருந்து வெளிப்படும் நீராவி துணிகளில் பாய்ந்து துணியிலுள்ள அழுக்குகளை நுரைக்கச் செய்யும். பின்னர் நீரில் துவைத்தால் துணியிலுள்ள அழுக்கு எளிதாக நீங்கும்.

விளையாடும் முறை தொகு

வண்ணான் தாழி துணியைச் சுமப்பது போல ஒருவர் முதுகில் துணிமூட்டையைச் சுமந்து நிற்பார். அந்த மூட்டையை விளையாடுவோர் அனைவரும் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். பின்னர் ஒருவர் அந்த மூட்டையைத் தட்டிவிடுவார். சுமந்தவர் பிறரைத் தொடுவார். தொடப்பட்டவர் வண்ணான் தாழி ஆகவேண்டும்.

தொடச் செல்லும்போது யாராவது ஒருவர் தட்டிவிடப்பட்டுள்ள துணிமூட்டையை மேலும் தட்டிவிடுவார். அப்படித் தட்டிவிடப்பட்டால் தட்டிவிடப்பட்ட துணியை மீண்டும் தொட்டுவிட்டுத்தான் பிறரைத் தொடவேண்டும் என்பது அவர்கள் வகுத்துக்கொள்ளும் விதி.

இந்த விளையாட்டில் ஒருவரைத் தொட விடாமல் மற்றவர் உதவும் பாங்கு காணப்படுகிறது.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணான்_தாழி&oldid=1097832" இலிருந்து மீள்விக்கப்பட்டது