விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 15, 2013

இமயமலை இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லையாக சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். புவியில் மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடரும், உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமுமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்று. எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்து-அருணாசலப் பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இமயமலை மூன்று இணையான உப தொடர்களை கொண்டது. இது பூட்டான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாக கொண்டுள்ளது. சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா நதிகளில் உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாக கருதப்படுகிறது. மேலும்...


சேர் முத்து குமாரசுவாமி (1833-1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக பதவி வகித்து சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். முத்து குமாரசாமி ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். இவரின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் , முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 இல் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 இல் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். மேலும்...